search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ உள்பட 3 படங்கள் ரிலீஸ்
    X

    தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ உள்பட 3 படங்கள் ரிலீஸ்

    தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ உள்பட 3 படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த வாரம் ரிலீசாகாமல் நிறுத்தி வைக்கப்பட்ட படங்கள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
    சினிமா படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் 10 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது.

    இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெவித்தனர். இதையடுத்து புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்தனர். தியேட்டர்களை மூடப்போவதாகவும் சில தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர். இதனால் தீபாவளி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர்கள், தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். இதில் கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளி படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட தடை அகன்றுள்ளது.



    இதையடுத்து விஜய் நடிப்பில் தயாராகி உள்ள ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 18-ந்தேதி தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள 100-வது படமான இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அட்லி இயக்கி உள்ளார். இதன் முன்பதிவு தொடங்கி இருக்கிறது.

    இதுதவிர சரத்குமார் நடிப்பில் உருவான ‘சென்னையில் ஒருநாள்-2’ படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. ஜே.பி.ஆர். இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள ‘மேயாதமான்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் வைபவ் - பிரியாபவானி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ரத்னகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

    சசிகுமார் நடித்துள்ள ‘கொடிவீரன்’ படமும் தீபாவளி தினத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை.



    தீபாவளிக்கு புதிய படங்கள் வருமா என்ற நிலைமாறி 3 படங்கள் திரைக்கு வருவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யின் ‘மெர்சல்’ படம் வர இருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மெர்சல் பட ரிலீசை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

    கேளிக்கை வரி பிரச்சினை காரணமாக கடந்த 6-ந் தேதி திரைக்கு வர இருந்த 10 படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த படங்களை நவம்பர் 3-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

    தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவின்படி ஏற்கனவே திரையிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10 படங்களுடன் நவம்பர் 3-ந்தேதி திரையிடப்படும். இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×