search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எனக்கு பிடித்தவருடன் விரைவில் திருமணம்: ஸ்ரேயா
    X

    எனக்கு பிடித்தவருடன் விரைவில் திருமணம்: ஸ்ரேயா

    எனக்கு பிடித்தவருடன் நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
    நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    “தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 15 வருடங்களாக பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ‘சிவாஜி’ படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். நடிப்பை காதலிக்கிறேன். ஒவ்வொருவரும் தொழிலை நேசித்து செய்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் வேலையில் சலிப்பு ஏற்படாது.

    தனி ஆளாக நின்றுதான் சினிமாவில் ஜெயித்து இருக்கிறேன். திரைப்படத்துறையில் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை. சினிமாவில் அறிமுகமான புதிதில் எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் என்னை சுற்றி இருந்த நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் உதவி செய்ததால் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    என்னை சந்திக்கிற பலரும் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையில் திருமணமும் குழந்தையும் முக்கியமானது. என் வாழ்க்கையிலும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். எனக்கு பிடித்தவரை சந்தித்து விரைவில் திருமணம் செய்து கொள்வேன்.



    எனக்கு கணவராக வருகிறவர் நல்ல நண்பராக இருக்க வேண்டும். இதற்கு மேல் எஞ்சியுள்ள வாழ்க்கையை நல்லபடியாக அவரோடு கழிக்க வேண்டும். என் அழகு ரகசியம் யோகா. தினமும் மறக்காமல் யோகா செய்கிறேன். தியானத்திலும் ஈடுபடுகிறேன்.

    யோகா எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடிகிறது. எப்போதும் அமைதியாக இருக்கிறேன். சமூகத்தில் இளைய சமுதாயத்தினர் போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்கி வருவது வேதனை அளிக்கிறது.

    ஐதராபாத்தில் சிறுவர்கள் கூட இந்த போதை பழக்கத்தில் சிக்கி இருக்கிறார்கள். வாழ்க்கையை கெடுக்கும் எந்த கெட்ட பழக்கத்துக்கும் இளைஞர்கள் அடிமையாக கூடாது. படிப்பு மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவர் போதை பழக்கத்துக்கு ஆளானால் கூட அந்த குடும்பம் முழுவதுமே பாதிக்கப்பட்டு விடும். அறியாமையால் போதை பழக்கத்துக்கு ஆளாகி இருந்தாலும் அதில் இருந்து மீள முயற்சி செய்ய வேண்டும்.”

    இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
    Next Story
    ×