search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வைப் மெஷின்"

    சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் வழங்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவீன கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், குற்ற செயல்களை குறைக்கவும் மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்போது வாகன ஓட்டிகள் தங்கள் அபராதத்தை செலுத்தும் போது, போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க அரசு திட்டமிட்டது.

    இதன்படி போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் மூலம் அபராத தொகையை வசூலிக்கும் முறை தமிழக அரசு மூலம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்வைப் மெஷின்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் தலைமை தாங்கி, போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களை வழங்கியதுடன், கண்காணிப்பு கேமராக்களின் நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் வாகன விதி மீறல் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூல் செய்யும் வகையில் முதல் கட்டமாக 14 ஸ்வைப் மெஷின்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. இந்த மெஷின்கள் திருப்பூர் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் மூலம், விதிமீறலுக்கு உள்ளாகும் வாகன ஓட்டுனர்கள், அபராத தொகையை தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம். இதன் மூலம் ரொக்க பரிவர்த்தனை தவிர்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குற்ற தடுப்பு நடவடிக்கைக்காகவும், போக்குவரத்து மேலாண்மைக்காகவும், முதல் கட்டமாக தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 38 நவீன கண்காணிப்பு கேமராக்களும், தனியார் பங்களிப்புடன் 9 கேமராக்கள் என மொத்தம் 47 கேமராக்கள் மாநகருக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு நவீன கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மேலும் ரூ.12 லட்சம் மதிப்பில் 46 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக் கப்பட உள்ளது. இந்த அனைத்து கேமராக்களும் ஆன்-லைன் மூலம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஒரு மாதம் வரை சேமிப்பில் இருக்கும் வகையில் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குற்றங்களை தடுக்கவும், நடைபெற்ற குற்றங்களை புலன்விசாரணை செய்து கண்டுபிடிக்க பயனுள்ள வகையில் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதவி மேலாளர் செல்வராஜ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×