search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைத் தோட்டம்"

    • 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.
    • மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). இவர் அங்கு உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூரில் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அஙகு இவர் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 3 காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்தன. அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின. அதன்பிறகு வாழைத்தார்களை மட்டும் பிடுங்கி ருசித்து விட்டு காட்டுக்குள் சென்றன.

    திருநாவுக்கரசு இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாழைத்தார்களை மட்டும் யானைகள் ருசித்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இது திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், காட்டுப்பன்றி, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே அடர்வனத்தில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில், ஏற்கனவே வெட்டப்பட்டு உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள மின்வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இதற்கிடையே சிறுமுகை லிங்காபுரத்தில் பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி லிங்காபுரம் சாலையோரத்தில் முகாமிட்டது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    சிறுமுகை, லிங்காபுரத்தில் நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்த காட்டு யானை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. அதன்பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, காந்தையூர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனால் லிங்காபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    ×