search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளலார் சத்திய ஞானசபை"

    • வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது.
    • தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 153-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    நேற்று (24-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது.

    ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும், பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    தைப்பூச திருவிழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

    அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் "அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி" என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர். மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட அறநிலையத்துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, 1 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கும் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது. அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் வடலூரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன.

    ×