search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரத்து"

    தொடர் மழையால் தாராளமாய் கிடைக்கும் பசுந்தீவனங்கள்: மின்னாம்பள்ளி மாட்டு சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பேளூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில், விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், பால் உற்பத்தியில் வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளை விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    கறவைமாடுகளுக்கு 'உறைவிந்து' செலுத்தி, குறைந்த பராமரிப்பு செலவில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதிக பால் கறக்கும் உயர்ரக கலப்பின பசுக்களை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கி கொடுத்ததாலும், சேலம் மாவட்டத்தில் கறவைமாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் தொழிலாக உயர்ந்தது.

    வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம், முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.

    இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில், குக்கிராமங்களிலும் அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்துள்ளன. கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, கால்நடைகளுக்கான பிரத்தியேக வர்த்தக மையமாக விளங்கி வருகிறது.

    மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கோடைகாலத்திலும் கால்நடைகளுக்குத் தீவனமாக மக்காச்சோளம், சோளத்தட்டை, புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. இதனால், குறைந்த செலவில் பால் உற்பத்தி அதிகரித்து, கால்நடை வளர்ப்போருக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நேற்று திங்கட்கிழமை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனைக்கு வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து மின்னாம்பள்ளி சேர்ந்த கால்நடை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:

    வாரத்திற்கு சராசரியாக 500 மாடுகள் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 200 மாடுகள் கூட விற்பனைக்கு வரவில்லை. வற்ற கறவை மாடுகளை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர்.

    ×