search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் இயக்கம்"

    • ஈரோட்டில் கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது.
    • 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து மதியம் 12.50 மணிக்கு கிளம்பும் ரெயில் நெல்லைக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கமாக காலையில் நெல்லையில் இருந்து கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலையில் ஈரோட்டுக்கு வந்தடையும். இந்த ரெயிலில் தினமும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து வந்தனர்.

    கொரோனா தொற்று பரவலால் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரெயிலை பயன்படுத்தி வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால், ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம், ஈரோடு- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது.

    அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.35 மணிக்கு ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரெயில் நெல்லைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து காலை 6.15 மணிக்கு கிளம்பும் ரெயில் மதியம் 2.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்தடையும்.

    இதேபோல் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை -சேலம் செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த ரெயில் இன்று காலை கோவையில் காலை 9 மணிக்கு கிளம்பி ஈரோடு வழியாக மதியம் ஒரு மணிக்கு சேலம் சென்றடைந்தது. இதேபோல் மதியம் 1.40 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி ஈரோடு வழியாக மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேப்போல் ஈரோட்டில் இருந்து மேட்டூர் அணை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இன்று அதிகாலை 5 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து கிளம்பிய மேட்டூர் அணை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.30 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று அடைந்தது. இதைப்போல் இரவு 7.25 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து கிளம்பும் ரெயில் இரவு 10.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்து அடையும். இந்த ரெயில் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×