search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்பனை எந்திரம்"

    • தி.மு.க. அரசை, அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
    • மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது தி.மு.க அரசு.

    சென்னை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டை போதைப்பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டமன்றத்திலும், ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி உள்ளேன். டாஸ்மாக் மதுபான கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

    இந்தநிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி எந்திரம் மூலம் மதுபான விற்பனையை தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தி.மு.க. அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டு திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது எந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி எந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி எந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட இந்த அரசுக்கு இல்லையா? ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்துக்கு கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது தி.மு.க அரசு.

    மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

    நவீனமயமாகி வரும் கல்வித்துறை, சுகாதாரத்துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் தி.மு.க. அரசு கொண்டு வந்ததாக தெரியவில்லை. கொலை களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களை பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களை குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் தி.மு.க. அரசை, அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. எந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது.

    சென்னை:

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை தடுக்கும் கையில் 4 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் நிறுவ நடவடிக்கையில் உள்ளது.

    இந்த தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை எந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது.

    மேலும், தானியங்கி மதுபான எந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப் பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் மூலம் கடை பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.

    தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த எந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது.

    இதுகுறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×