search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor vending machine"

    • தி.மு.க. அரசை, அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
    • மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது தி.மு.க அரசு.

    சென்னை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டை போதைப்பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டமன்றத்திலும், ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி உள்ளேன். டாஸ்மாக் மதுபான கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

    இந்தநிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி எந்திரம் மூலம் மதுபான விற்பனையை தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தி.மு.க. அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டு திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது எந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி எந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி எந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட இந்த அரசுக்கு இல்லையா? ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்துக்கு கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது தி.மு.க அரசு.

    மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

    நவீனமயமாகி வரும் கல்வித்துறை, சுகாதாரத்துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் தி.மு.க. அரசு கொண்டு வந்ததாக தெரியவில்லை. கொலை களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களை பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களை குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் தி.மு.க. அரசை, அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. எந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×