search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாநந்தியா"

    • ஸ்வீடன் சென்ற ஷெட்வின் கடிதங்கள் மூலம் கணவருடன் பேசி வந்தார்.
    • ஒரு வருடம் கழித்து மகாநந்தியா தனது காதல் மனைவியை சந்திக்க திட்டமிட்டபோது விமான டிக்கெட் எடுத்து செல்ல அவரிடம் போதுமான பணம் இல்லை.

    சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் 1975-ம் ஆண்டு டெல்லி வந்திருந்தார். அப்போது டெல்லியில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மகாநந்தியா என்பவரை சந்தித்தார். ஏழை மாணவரான அவர் பார்ப்பவர்களின் உருவ படத்தை அப்படியே வரையும் திறன் படைத்தவர்.

    அவரது கையால் தனது உருவ படத்தை வரைந்து தருமாறு ஷெட்வின் கேட்டார். அதன்படி அவரும் வரைந்து கொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்த நிலையில், ஷெட்வின் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் ஷெட்வின் சொந்த நாடு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதால் அவர் தனது கணவரை தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது மகாநந்தியா தனது படிப்பை முடிக்க வேண்டி இருந்ததால், நான் ஸ்வீடன் வந்து உன்னை சந்திக்கிறேன் என கூறினார்.

    பின்னர் ஸ்வீடன் சென்ற ஷெட்வின் கடிதங்கள் மூலம் கணவருடன் பேசி வந்தார். ஒரு வருடம் கழித்து மகாநந்தியா தனது காதல் மனைவியை சந்திக்க திட்டமிட்டபோது விமான டிக்கெட் எடுத்து செல்ல அவரிடம் போதுமான பணம் இல்லை. இதனால் தன்னிடம் இருந்த அனைத்து பொருளையும் விற்று ஒரு சைக்கிள் வாங்கினார். பின்னர் சைக்கிளிலேயே ஐரோப்பாவுக்கு 1977-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

    தினமும் 70 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வழியாக 4 மாதங்கள் பயணம் செய்து மே 28-ந் தேதி ஐரோப்பாவை அடைந்துள்ளார். பின்னர் ரெயிலில் கோதன்பர்க் சென்று தனது காதல் மனைவி ஷெட்வினை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது 2 குழந்தைகளுடன் வசிக்கும் இந்த ஜோடியினர் இப்போதும் 1975-ல் இருந்ததை போலவே ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறுகிறார்கள். இவர்களது காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×