search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாத்மா காந்தி பிறந்தநாள்"

    தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமங்களில் நோய்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #MahatmaGandhi #CleanIndia #Modi
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி மாளிகையில், ‘மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை பிரசார மாநாடு’ கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. நேற்று அதன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    உலகத்தை தூய்மைப்படுத்த 4 ‘பி’ (ஆங்கில எழுத்து) எழுத்து மந்திரங்கள் தேவைப்படுகிறது. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாக செயல்படுதல், மக்கள் பங்கேற்பு ஆகியவையே அந்த மந்திரங்கள்.

    இன்று ஏராளமான நாடுகள், தூய்மை பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. இது, முன்பு எப்போதும் கேள்விப்படாதது. ஒரு இந்திய பிரசாரம், உலகின் மாபெரும் மக்கள் இயக்கமாகி இருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

    4 ஆண்டுகளுக்கு முன்பு, உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்துள்ளது. 4 ஆண்டுகளில், 90 சதவீதம் பேர் கழிப்பறைகளை பயன்படுத்தும் பழக்கத்துக்கு வந்துவிட்டனர்.



    5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவை ஆகியுள்ளன. 25 மாநிலங்கள் தங்கள் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லை என்று அறிவித்துள்ளன. இவையெல்லாம் ‘தூய்மை இந்தியா’ இயக்கம், மக்களின் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள். கிராமப்புறங்களில் நோய்களின் எண்ணிக்கை குறைந்ததுடன், மருத்துவ சிகிச்சைக்கு செலவிடும் பணத்தின் அளவும் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட மகாத்மா காந்தி, தூய்மை பணிக்கு முன்னுரிமை கொடுத்தார். 1945-ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘ஆக்கப்பூர்வ திட்டங்கள்’ பட்டியலில், கிராமப்புற தூய்மை முக்கிய இடம் பிடித்திருந்தது. காந்தியின் கொள்கைகளை ஆழமாக புரிந்து கொண்டிருக்காவிட்டால் தூய்மை பிரசாரம், எனது அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பிடித்து இருக்காது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் காந்தியும், அவரது போதனைகளும்தான் என்னை வழிநடத்தின என அவர் பேசினார்.

    இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பங்கேற்றார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக பிரதமரை அவர் பாராட்டினார்.

    அதன்பின்னர், மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான ‘வைஷ்ணவ் ஜன தோ தேன் ககியே?’-ன் சர்வதேச வடிவத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இது, 5.34 நிமிடம் ஓடும் வீடியோவாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலை 124 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பாடியுள்ளனர்.

    மேலும், மகாத்மா காந்தி உருவம் பொறித்த 7 அஞ்சல் தலைகளையும் மோடி வெளியிட்டார். இவை, வட்ட வடிவ அஞ்சல் தலைகள் ஆகும். சுதந்திர இந்தியாவில் இத்தகைய அஞ்சல் தலைகளை வெளியிடுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #MahatmaGandhi #CleanIndia #Modi
    காந்தியடிகளின் தனிச் செயலாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய வி. கல்யாணம், காந்தியடிகள் பற்றிய தனது நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு கட்டுரை. #GandhiJayanti150 #MahatmaGandhi
    காந்தி அடிகளின் 150-வது ஜெயந்தியை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடி வருகின்றன. அது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால் இந்தியாவை பற்றிய அவரது கனவு நனவாகியதா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி.

    ஒரு பெண் கழுத்தில் நகை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியாக, நிம்மதியாக நடந்து செல்லும் நிலை எப்போது வருகிறதோ அப்போது தான் இந்த நாட்டுக்கு உண்மையான விடுதலை என்றார், காந்திஅடிகள்.

    மது அருந்துதல், புகைபிடித்தல், தீண்டாமை, லாட்டரி, சூதாட்டம், மனித உரிமை மீறல், அரிஜன பாகுபாடு ஆகிய பழக்க, வழக்கங்களை மக்களிடமிருந்து அகற்ற வேண்டும் என்றார்.

    ஒருமுறை ஆங்கிலேயே பெண் போர்க்ஒயிட், காந்தியிடம், ‘நீங்கள் 120 வயது வரை வாழ்வேன் என்றீர்களே. அது எப்படி என்று கேட்டதற்கு ஆமாம் அது உண்மைதான். ஆனால் அதை தற்போது மாற்றிக் கொண்டேன். நடக்கிற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது மரணிப்பதே மேல் என்றே கருதுகிறேன்’ என்று அப்போதே அவரின் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதுதான் அவருடைய கடைசி பேட்டி.

    நான்கு வகையான பிரசித்தி பெற்ற போராட்டங்களை காந்தி நடத்தினார். 1919-ல் ரவுலட் சட்டத்துக்கு எதிராக நடத்தியது தான் முதல் போராட்டம். 1921-ல் ஒத்துழையாமை இயக்கம். 1930-ல் தண்டியாத்திரை, 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்கள் காந்தியின் பின் இந்திய மக்கள் அணிதிரள வழிவகுத்தது.

    இந்திய பிரிவினையின் போது என் சடலத்தின் மீது தான் இந்த தேசம் பிளவுபடும் என்றார். காங்கிரசை கலைத்து விட்டு, ‘லோக் சேவக் சங்க்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து புதிய தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்று முழங்கினார்.

    ஆங்கிலேய ஆட்சியில் அதிக சம்பளம் தருகிறார்கள். இனி நாம் அமைக்கும் ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை குறைக்க வேண்டும். நம் நாடு ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடு. இதை கட்டமைக்க மக்கள் சேவகர்கள் அதிக சம்பளம் பெறலாகாது என்றார்.

    சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, தங்கள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்குத் தான் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்த வேண்டும். அதிக சம்பளம் வாங்கும் பேராசை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

    இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது. நகர்புறங்களில் உள்ள அனைத்து வசதிகளும் கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னோடிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார்.


    நாட்டின் பிரதமராக ஒரு விவசாய குடிமகனை அமர வைக்க வேண்டும். அவருக்கு செயலாளராக நேரு போன்றவர்களை அமர்த்த வேண்டும். உலக மக்கள் அமைதியோடும், அன்போடும் வாழ வாழ்வியல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    காந்தி காங்கிரசில் சேர்ந்தார் என்பதை விட காங்கிரஸ் காந்தியுடன் சேர்ந்துகொண்டது என்பதுதான் சரியானது.

    நாடு விடுதலை அடைந்த அன்று நவகாளியில் நாங்கள் காந்தியுடன் தான் இருந்தோம். இந்து, முஸ்லிம் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். ராட்டை நூற்றார். நேரு, பட்டேல் அழைத்தும் சுதந்திரதின விழாவில் பங்கேற்க மறுத்து, இந்து-முஸ்லிம் ஒற்றுமை தான் எனக்கு முக்கியம். சுதந்திரம் எனக்கு முக்கியமல்ல என்று வரமறுத்து விட்டார். 1947-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தான் நாங்கள் டெல்லி வந்தோம்.

    ஒரு முறை நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் டெல்லியில் காந்தியை சந்தித்த பின் ரத்தமும், சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என வரும் தலைமுறை நிச்சயம் நம்ப மறுக்கும் என்றார்.

    காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானத்தில் சென்றதில்லை. ஏன் விமானத்தை பார்த்ததேயில்லை. அவரிடம் ஒருமுறை லேடி மவுன்ட் பேட்டன், நீங்கள் நீண்டதூரம் செல்லும்போது விமானத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்று கேட்டதற்கு, ‘நான் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால் மக்களை பார்க்க முடியாது’ என்று காந்தி கூறினார்.

    காந்தி படுகொலை செய்யப்பட்டதை அறிந்த உடன் நேரு அதிர்ந்து போனார். தழுதழுத்த குரலில் வானொலியில் பேசினார். நமது வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து விட்டது. தேசத் தந்தை மறைந்து விட்டார். ஆறுதல் அடைவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ இனி அவரிடம் போக முடியாது என்றார்.

    உலகம் முழுவதும் செய்தி பரவியது. நடந்து கொண்டிருந்த ஐ.நா. சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. உலகின் பல நாட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.

    அளவுக்கு மீறி நல்லவராக இருப்பதும் கூட ஒரு வகையில் கொடியது தானோ? என எண்ணத் தோன்றுகிறது என்றார் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. காந்தியை நான் பார்த்ததில்லை. இந்தியாவுக்கு நான் சென்றதில்லை. காந்தியை பற்றி நான் படித்திருந்தேன். அவரது மரணத்தால் என் வீட்டில் யாரோ மரணித்ததை போல் உணர்கிறேன் என்றார், பிரெஞ்சு பிரதமர் லியோன் பிளம்.

    இனியாவது காந்தி கண்ட கனவை நனவாக்க முயல வேண்டும். காந்தியடிகளோடு பணியாற்றிய வாய்ப்பை பெற்ற நான் பெரும் பாக்கிய சாலியாகவே கருதுகிறேன். 5 ஆண்டுகள் அவருக்கு தொண்டு செய்து பணியாற்றிய நினைவுகள் அவரை பிரிந்து 70 ஆண்டுகள் கடந்த பின்பும் என் நினைவில் அப்படியே உள்ளது.

    97 வயது ஆகிய எனக்கு தற்போதைய நிகழ்வுகள் மறந்து விடுகின்றன. ஆனால் பழைய நினைவுகள் எதுவும் மறக்கவில்லை. எப்படி இருப்பினும் அவரது 150-வது ஜெயந்தி விழாவை மிக விமரிசையாக கொண்டாடுகின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.  #GandhiJayanti150  #MahatmaGandhi

    வி.கல்யாணம், காந்தியடிகளின் தனிச் செயலாளர்
    ×