search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் அக்கா திட்டம்"

    • ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநகர போலீசார் சார்பில் போலீஸ் அக்கா திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக கல்லூரிக்கு ஒரு பெண் போலீஸ் வீதம் 60 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் அக்கா திட்டத்துக்கான போலீசார் அடிக்கடி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவிகளுடன் கலந்துரையாடி பொது இடங்களில் வாலிபர்கள் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி தங்களின் செல்போன் நம்பரை கொடுத்து தைரியப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எண்ணற்ற கல்லூரி மாணவிகள் போலீஸ் அக்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாக தெரிவிப்பதால் போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பவ இடங்களில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய முடிகிறது.

    கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா திட்டம் மட்டுமின்றி மாநகரில் இயங்கி வரும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் பெற்றோரை போலீசார் நேரடியாக சந்தித்து பேசி, அந்த பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க செய்து வருகின்றனர்.

    கோவை மாநகரில் அமலில் இருக்கும் போலீஸ் அக்கா மற்றும் ஆபரேஷன் ரீபூட் ஆகிய திட்டங்கள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளை நட்புரீதியில் தெரிவிக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 400-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகள் தெரிவித்து உள்ள கருத்துக்களின்படி அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பெண்கள் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக போலீசார் புறப்பட்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட பணிகள் நடைபெறுகிறது.

    பெண்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகள், சட்டரீதியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்வது ஆகிய 3 கோணங்களில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நடைமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன.

    பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் போலீசார் நேரடியாக சென்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆதிகாலம் தொட்டே தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் அடுப்பங்கரை மட்டுமே பெண்களின் வாழ்க்கை என்று இருந்த நிலை மாறி இன்று விஞ்ஞானிகள், விமான பைலட்டுகள், போர் வீரர்கள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றனர்.

    ஆனால் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஜொலித்து வரும் இந்த காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சீண்டல்கள், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் உள்ளிட்டவை தொடரத்தான் செய்கின்றன.

    ஏராளமான கல்வி நிலையங்கள் நிறைந்த கோவை மாநகரில் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் இந்த மாணவிகள் சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான சீண்டல்கள், மன அழுத்தங்களை மற்றும் குடும்ப கஷ்டங்களை யாரிடம் கூறுவது என்று தவித்தனர். தங்களது சக தோழிகளிடம் இதுகுறித்து கூறினாலும் அதற்கான தீர்வு அவர்களுக்கு முழுவதும் கிடைக்காத நிலை இருந்தது.

    இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் 'போலீஸ் அக்கா' திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் போலீஸ் அக்கா திட்டத்திற்காக ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர். இதன்படி நியமிக்கப்பட்ட 37 பெண் போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு சென்று மாணவிகள் இடையே நட்புறவை வளர்த்து கொண்டு, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாநகரில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கோவை மட்டுமின்றி வெளியூர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி படுத்தவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எளிதாக போலீசாரிடம் தெரிவிக்கவும், அதில் இருந்து மாணவிகளை பாதுகாக்கவும் போலீஸ் அக்கா திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள பெண் போலீசார் மாதத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவார்கள். அப்போது மாணவிகளிடம் ஒரு சகோதரியை போல் பேசி, அவர்களால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கலாம். மேலும் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய எண்கள் கல்லூரி வளாகம், கேண்டின், வரவேற்பறை உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டன.

    இதையடுத்து மாணவிகளுக்கு பெரிதும் உதவும் போலீஸ் அக்கா திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் பெண் போலீசாரை எதிர்கொண்ட மாணவிகள், பின்னர் அவர்களுடன் சகஜமாக பேச தொடங்கினர். இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைத்தது. மாணவிகள் பெரும்பாலும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பெரும்பாலான மாணவிகள் தங்களது பெற்றோர் இடையே நிலவும் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    சில மாணவிகள் ஏழ்மை காரணமாக தங்களது படிப்பை தொடர முடியவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் பல மாணவிகள் கல்லூரி படிப்பு தொடர தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் பயன் அடைந்த மாணவிகள் போலீஸ் அக்கா திட்டத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 172 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் ஒரு மாணவி மட்டும் தனது படத்தை மாணவர் ஒருவர் கிராபிக்ஸ் செய்து மிரட்டுவதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 17 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர். ரசீது வழங்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் குடும்ப பிரச்சினை, நிதி உதவி குறித்தது. அதற்கு உரிய தீர்வு காணப்பட்டது.

    இதனிடையே செமஸ்டர் தேர்வு முடிவு பெற்று பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அப்போது விடுமுறையில் இருந்த பல்வேறு மாணவிகள் போலீஸ் அக்கா உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது மன அழுத்தம் குறித்து தெரிவித்தனர். இந்த புகாரின் பேரிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். மேலும் மாணவிகள் தங்களது தந்தை குடித்து விட்டு வருவதால் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் தந்தைக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போலீஸ் அக்கா திட்டம் தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.
    • போலீஸ் அக்கா திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை:

    கோவை மாநகரில் ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் என பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி படித்து வருகின்றனர்.

    கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியான என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.

    இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் போலீஸ் அக்கா என்ற திட்டத்தை கோவை மாநகர போலீசார் தொடங்கி உள்ளனர்.

    இந்த திட்டம் தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்திற்காக பிரத்யேகமாக 37 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை என்பது மாணவிகளை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைப்பது தான். போலீசார் பொறுமையாக மாணவிகளின் பிரச்சினைகளை கேட்டு அதற்கான தீர்வினை காணுவார்கள். அதற்காக போலீசாருக்கு பிரத்யேகமாக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக கோவை மாநகரில் 60 கல்லூரிகளில் இந்த போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் உள்ள பெண் போலீசார் மாதத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவார்கள்.

    அப்போது மாணவிகளிடம் ஒரு சகோதரியை போல் பேசி, அவர்களால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கலாம்.

    அவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாணவிகள் கூறி முடிக்கும் வரை மிக பொறுமையாக இருந்து அதனை கேட்டு, அந்த பிரச்சினைக்கு தீர்வும் கண்டு கொடுப்பார்கள்.

    கல்லூரிகளில் மாணவர்கள் யாராவது மாணவிக்கு தொந்தரவு கொடுத்தால் முதலில் மாணவரை அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவர்.

    சமூக வலைதளங்களில் ஏதாவது மிரட்டல்கள் அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதனை கேட்டு கொண்டு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    இதுதவிர கல்லூரிகளில் நடைபெறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உளவியல், பாலியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்து கூறி அந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவார்கள்.

    கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் கருத்து மோதல்கள், போதை பொருட்கள் விற்பனை பற்றிய தகவல் போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு தெரியவந்தால் அவர்கள் அதனை கல்லூரி நிர்வாகத்தினருக்கு கொண்டு சென்று அந்த பிரச்சினையையும் தீர்த்து வைப்பார்கள்.

    மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக இருந்து, அவர்கள் கொடுக்கும் அனைத்து தகவல்களையும் ரகசியமாக பாதுகாத்து அதற்கும் தீர்வும் கண்டு கொடுப்பர்.

    பெண் போலீசார் கல்லூரிகளில் சென்று மாணவிகளை சந்தித்து பேசும் போது, நேரில் சொல்வதற்கு பலர் தயக்கம் காட்டுவார்கள். அப்படி தயக்கம் காட்டுபவர்களுக்கு வசதியாக கல்லூரி அறிவிப்பு பலகை மற்றும் மாணவிகளிடம் போலீஸ் அக்கா திட்டத்தில் உள்ள பெண் போலீசாரின் செல்போன் எண்கள் வழங்கப்பட்டு விடும்.

    நேரில் தெரிவிக்க முடியாத மாணவிகள், செல்போனில் பெண் போலீசை தொடர்பு கொண்டு தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தால் அதற்கான தீர்வுகளையும் காண்பார்கள்.

    இந்த திட்டத்தின் மூலம் குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்க முடியும். மாணவிகள் பாதிக்கப்பட்ட பின் போலீஸ் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். எனவே மாணவிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் புகார்களை பெண் போலீசாரை போலீசாராக எண்ணாமல் தங்களை சகோதரியாக நினைத்து புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×