search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கல்லூரி மாணவிகளுக்கு கை கொடுக்கும் போலீஸ் அக்கா திட்டம்
    X

    கல்லூரி மாணவிகளுக்கு கை கொடுக்கும் 'போலீஸ் அக்கா திட்டம்'

    • பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆதிகாலம் தொட்டே தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் அடுப்பங்கரை மட்டுமே பெண்களின் வாழ்க்கை என்று இருந்த நிலை மாறி இன்று விஞ்ஞானிகள், விமான பைலட்டுகள், போர் வீரர்கள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றனர்.

    ஆனால் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஜொலித்து வரும் இந்த காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சீண்டல்கள், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் உள்ளிட்டவை தொடரத்தான் செய்கின்றன.

    ஏராளமான கல்வி நிலையங்கள் நிறைந்த கோவை மாநகரில் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் இந்த மாணவிகள் சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான சீண்டல்கள், மன அழுத்தங்களை மற்றும் குடும்ப கஷ்டங்களை யாரிடம் கூறுவது என்று தவித்தனர். தங்களது சக தோழிகளிடம் இதுகுறித்து கூறினாலும் அதற்கான தீர்வு அவர்களுக்கு முழுவதும் கிடைக்காத நிலை இருந்தது.

    இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் 'போலீஸ் அக்கா' திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் போலீஸ் அக்கா திட்டத்திற்காக ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர். இதன்படி நியமிக்கப்பட்ட 37 பெண் போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு சென்று மாணவிகள் இடையே நட்புறவை வளர்த்து கொண்டு, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாநகரில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கோவை மட்டுமின்றி வெளியூர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி படுத்தவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எளிதாக போலீசாரிடம் தெரிவிக்கவும், அதில் இருந்து மாணவிகளை பாதுகாக்கவும் போலீஸ் அக்கா திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள பெண் போலீசார் மாதத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவார்கள். அப்போது மாணவிகளிடம் ஒரு சகோதரியை போல் பேசி, அவர்களால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கலாம். மேலும் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய எண்கள் கல்லூரி வளாகம், கேண்டின், வரவேற்பறை உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டன.

    இதையடுத்து மாணவிகளுக்கு பெரிதும் உதவும் போலீஸ் அக்கா திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் பெண் போலீசாரை எதிர்கொண்ட மாணவிகள், பின்னர் அவர்களுடன் சகஜமாக பேச தொடங்கினர். இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைத்தது. மாணவிகள் பெரும்பாலும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பெரும்பாலான மாணவிகள் தங்களது பெற்றோர் இடையே நிலவும் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    சில மாணவிகள் ஏழ்மை காரணமாக தங்களது படிப்பை தொடர முடியவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் பல மாணவிகள் கல்லூரி படிப்பு தொடர தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் பயன் அடைந்த மாணவிகள் போலீஸ் அக்கா திட்டத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 172 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் ஒரு மாணவி மட்டும் தனது படத்தை மாணவர் ஒருவர் கிராபிக்ஸ் செய்து மிரட்டுவதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 17 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர். ரசீது வழங்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் குடும்ப பிரச்சினை, நிதி உதவி குறித்தது. அதற்கு உரிய தீர்வு காணப்பட்டது.

    இதனிடையே செமஸ்டர் தேர்வு முடிவு பெற்று பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அப்போது விடுமுறையில் இருந்த பல்வேறு மாணவிகள் போலீஸ் அக்கா உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது மன அழுத்தம் குறித்து தெரிவித்தனர். இந்த புகாரின் பேரிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். மேலும் மாணவிகள் தங்களது தந்தை குடித்து விட்டு வருவதால் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் தந்தைக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×