search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கழிப்பிடம்"

    • இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் இங்கு நடைபெற்று வருகிறது.
    • கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு உடனே இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை.

    குனியமுத்தூர்

    கோவை காந்திபார்க் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பொதுக் கழிப்பிடம் உள்ளது.

    கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

    ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்று பஸ் ஏறி பயணம் செய்கின்றனர்.

    இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் என்று வேறு எதுவுமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இந்த கழிப்பிடத்தை உபயோகப்படுத்தி வந்தனர்.

    ஆனால் தற்போது பல ஆண்டுகளாக இது மூடப்பட்ட நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.சிவானந்த காலனி, காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், சுங்கம், ராமநாதபுரம், புலியகுளம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று தான் பஸ் ஏறி செல்கின்றனர்.

    மேலும் இந்த பொதுக்கழிப்பிடத்தில் கதவு இல்லாததால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் இங்கு நடைபெற்று வருகிறது. உள்ளே சென்று பார்க்கும் போது குப்பை மேடுகளும், காலி பாட்டில்களும் காணப்படுகிறது.

    இது குறித்து மக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி இந்த பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி குத்தகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு வருமானம் வரும்.

    ஆனால் நகரின் மிகவும் முக்கியமான பகுதியாகவும், மையப் பகுதியாகவும் அமைந்துள்ள காந்தி பார்க் பகுதியில் இப்படி ஒரு பொதுக் கழிப்பிடம் பயன்பாட்டிற்கு இல்லாமல் வெறுமனே கிடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அவசரத்துக்கு செல்வதற்கு கூட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதை காண முடிகிறது.

    எனவே கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு உடனே இந்த கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×