search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் குழு"

    • பீகார் குழுவினர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    கோவை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இது பீகார் மாநிலத்திலும் எதிரொலிக்கவே, அந்த மாநில அரசு உண்மை நிலையை கண்டறிவதற்காக ஊரக வளர்ச்சி திட்ட செயலளர் பாலமுருகன் தலைமையில் நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது.

    அந்த குழுவினர் நேற்றுமுன்தினம் சென்னை வந்து தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று அவர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்க்கும் 3 நிறுவனங்களுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து குறைகளை கேட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு எந்தவித குறையும் இல்லை. சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    பீகார் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்து கொண்டு நேற்றிரவு கோவைக்கு வந்தனர்.

    கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர்.

    இன்று காலை பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன், நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்களிடம் உங்களுக்கு இங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது? ஏதாவது குறைகள் உள்ளதா? அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? யாராவது உங்களுக்கு எந்தவிதத்திலாவது பிரச்சினை கொடுக்கின்றனரா? என்ப து குறித்தும் கேட்டனர்.

    அதற்கு தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசிய குழுவினர் பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பீகார் மாநில குழு பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், தொழில் அமைப்பினர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற பீகார் மாநில குழுவினரிடம், கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கு கடந்த சில நாட்களாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்ததும் குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விரிவாக விளக்கி கூறினர். இதை அனைத்தையும் கேட்டு கொண்ட பீகார் மாநில குழுவினர் வடமாநில தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டது.

    • பாலமுருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பீகார் குழு இன்று காலை சென்னை வந்தது.
    • பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சமீப ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறார்கள்.

    அதிக நேர உழைப்பு, குறைந்த கூலி என்பதால் தமிழகத்தில் பல்வேறு தொழில் நடத்துபவர்களும் வடமாநில தொழிலாளர்களை அதிகளவில் பணியில் வைத்துள்ளனர். இதற்கு எதிராக சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் பணியாற்றும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போல இரு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால் இந்த இரு வீடியோக்களும் போலியானது என்று தமிழக அரசு மறுத்துள்ளது.

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இது தொடர்பாக விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். போலியாக வீடியோ தயாரித்து வதந்தி பரப்புவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் எதிரொலித்தது. அந்த மாநில பா.ஜ.க. நேற்று சட்டசபையில் இந்த பிரச்சினையை கிளப்பியது. தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் கடும் அமளியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.

    அதற்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், தமிழகத்தில் உள்ளூர் மக்களால் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோக்களில் உண்மையில்லை என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

    மேலும் வதந்தி பரப்புவது பா.ஜனதாவின் வழக்கம். தங்களது அரசியல் லாபங்களுக்காக மாநிலங்கள் இடையே பகையை தூண்ட அக்கட்சி முயற்சிக்கிறது. தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்களா? என்பதை கேட்டறிந்துதான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு பீகார் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இணையதளத்தில் பரவும் 2 வீடியோக்களும் மிக பழையவை.

    ஒரு வீடியோ பீகார் மற்றும் ஜார்க்கண்ட் தொழிலாளர்களுக்கு இடையேயான மோதல் தொடர்பானது. மற்றொன்று உள்ளூர் மக்களுக்குள் நிகழ்ந்த மோதல் தொடர்பானது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு குறிப்பிட்டு உள்ளார்.

    பா.ஜனதாவுக்கு எப்போதுமே உண்மைகளில் விருப்பம் கிடையாது. வதந்திகளைப் பரப்புவதே அவர்களின் வாடிக்கை. தமிழகம் தொடர்புடைய விவகாரத்தில் நாங்கள் கூறுவதை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நம்பாவிட்டால், மத்திய உள்துறை மந்திரியிடம் சென்று விசாரணைக்குழு அமைக்க முறையிடுங்கள்.

    இவ்வாறு துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறினார்.

    இதற்கிடையே தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்களா? என்பதை உறுதி செய்ய பீகார் எம்.எல்.ஏ.க்கள் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து தமிழகத்துக்கு பீகார் போலீஸ் அதிகாரிகள் குழு சென்று உண்மை நிலையை கண்டறியும், நிலைமையை தலைமை செயலாளர், டி.ஜி.பி. தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டார்.

    இதையடுத்து தமிழகத்துக்கு வரும் குழுவை பீகார் மாநில அரசு அமைத்தது.

    பாலமுருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் அந்த பீகார் குழு இன்று (சனிக்கிழமை) காலை சென்னை வந்தது. அந்த குழுவில் உள்ள அதிகாரிகள் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தமிழக தொழிலாளர் நலத்துறை கமிஷனரை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தமிழகத்தில் இருக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் அமைதியான முறையில் பணிபுரிந்து வரும் தகவலை தமிழக அதிகாரிகள் பீகார் குழுவிடம் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.

    இதையடுத்து பீகார் மாநில குழுவினர் மிகுந்த திருப்தி தெரிவித்தனர். மேலும் பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை தமிழக அதிகாரிகள் ஆவண செய்வதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரையும் பீகார் குழுவினர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். மேலும் பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.

    ×