search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன நிலங்கள்"

    • புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக இந்த பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது போதிய மழை பெய்யாத நிலையில் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அமராவதி அணை பாசனப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் நிலைப்பயிராக உள்ள கரும்புக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.மேலும் மக்காச்சோளம் உள்ளிட்ட இதர பயிர்களும் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்படும் நிலை உள்ளது.அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.நீர் இருப்பும் திருப்திகரமாக உள்ளது.எனவே, நிலைப்பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவைக்காகவும், அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாயில் சிறப்பு உயிர் தண்ணீர் திறக்க வேண்டும்.

    இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நிலைப்பயிர்கள் காப்பாற்றப்படும். மேலும் வழியோர கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கள்ளிராதினிப்பட்டி, கட்டாணிப்பட்டி ஆகிய பகுதிகள் வழியாக பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், கடந்த 7-ந் தேதி முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, தண்ணீர்திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே பெரியாறு பாசன திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு கட்டாணிப்பட்டி கால்வாய் 1 மற்றும் 2 மற்றும் 48-வது மடைகால்வாய் ஆகிய கால்வாய்கள் திறக்கப்பட்டு முருகினி, புதுக்கண்மாய், பெரியகோட்டை மற்றும் சின்னகுண்ணங்குடி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதுரையில் உள்ள குறிச்சி கண்மாய் பெருகி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் சீல்டு கால்வாய் மூலம் ஆதினிக்கண்மாய்க்கு தண்ணீர்வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 129 கண்மாய்களுக்கு தண்ணீர்வழங்கப்பட்டு, சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தாசியூஸ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×