search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைப்புழுக்கள்"

    • விதைத்த நாள் முதல் சரிவர மழை பெய்யாததால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்தன.
    • படைப்புழுக்களின் தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம், புதூர், அரியநாயகிபுரம், மேலக்கரந்தை, உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடப்பாண்டு ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் புரட்டாசி முதல் வாரத்திலேயே பருவமழை முன்கூட்டி தொடங்கிவிடும் எனக் கருதிய விவசாயிகள் ஆவணி மாதக்கடைசியில் இருந்து புரட்டாசி 10-ந்தேதி வரை உளுந்து, பாசி, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, எள், வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, கொண்டைக்கடலை என அடுத்தடுத்து வரிசையாக பட்டத் தேதிக்கேற்றவாறு விதைப்பு செய்தனர்.

    விதைத்த நாள் முதல் சரிவர மழை பெய்யாததால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்தன. சிலரது நிலங்களில் விதைகள் மண்ணில் மக்கி கெட்டுப் போய்விட்டது. இதனால் ஒருமுறைக்கு பலமுறை விதைப்பு செய்ய நேரிட்டது.

    இருப்பினும் பல்வேறு பருவமாற்றங்களுக்கு இடையே தற்போது மக்காச்சோளம் முளைத்து ஒரு மாத பயிராக உள்ளது. கூலி ஆட்களை வைத்தும், ரசாயான மருந்து தெளித்தும் களையை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு படைப்புழுக்களின் தாக்குதலால் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல், இந்தாண்டும் படைப்புழுக்களின் தாக்கு தலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி மாரீஸ்குமார் கூறிகையில்:-

    கடந்த 2018-ம் ஆண்டு படைப்புழுக்களின் தாக்குதலால் தமிழகத்தில் மக்காச்சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    படைப்புழுவை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவிடவும் தமிழக அரசுக்கு அதிகாரிகள் படைப்புழுவில் இருந்து மக்காச்சோளம் பயிரை காப்பாற்றவும் சக்திவாய்ந்த டெலிகேட், கோரஜென் எனப்படும் மருந்துகளை மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க பரிந்துரை செய்தது.

    அதனடிப்படையில் ஏக்கருக்கு 80 மிலி மருந்துடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து தண்டுப்பகுதியில் தெளிக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர். 2019-ம் ஆண்டு விவசாயிகளுக்கு குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த மருந்து மானியம் தமிழக அரசு வழங்கியது.

    2021-ல் புதிதாக பொறுப்பேற்ற அரசு மக்காச்சோளம் பயிருக்கு மருந்து மானியம் வழங்கவில்லை. அதேவேளையில் படைப்புழுவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறது. அதிகாரிகள் கூறியபடி செயல் விளக்கம் செய்தால் வரவை மிஞ்சிய செலவாகிறது.

    இந்தாண்டும் மக்காச்சோளம் பயிரில் தண்டுப்பகுதியில் படைப்புழு அதிகம் தென்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து குருத்துப்பூச்சி மருந்து வாங்கி தெளிக்கின்றனர். அது மட்டுமல்லாது உளுந்து, பாசி, வெள்ளைச் சோளம், பருத்தி போன்ற பயிர்களில் தாக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்தவும் விலை உயர்ந்த மருந்துகளை தெளிக்க வேண்டி உள்ளது.

    கடந்த ஆட்சியில் உதவியது போல் படைப்புழு கட்டுப்படுத்த மருந்து மானியம் அல்லது இலவச மருந்துகள் வழங்க வேண்டும், என்று கூறினார்.

    • படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது.
    • கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் படைப்புழுக்களின் தாக்குதலை ஆரம்ப கட்டம் முதலே திட்டமிட்டு கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது. தாய் அந்துப்பூச்சி இலைகளின் அடியில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். இவ்வாறு ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தன் வாழ்நாளில் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதம் உண்டாக்கும். அடுத்தடுத்த நிலைகளில் குருத்து முதல் கதிர் வரை சேதம் உண்டாக்கி மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

    படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். இது மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். தப்பிப் பிழைத்த கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் முட்டையிட முடியாத அளவுக்கு செயலற்றதாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும். இந்த விதைகளில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்.எஸ். மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்.எஸ். என்ற கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். ஊடுபயிராக வேலிமசால் படைப்புழுக்களால் விரும்பப்படாத திரவத்தை வெளியிடக்கூடிய வேலிமசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

    விதை முளைத்த 2-ம் நாளிலிருந்தே அந்துப்பூச்சிகள் பயிர் சேதம் விளைவிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே விதைப்பு சமயத்திலேயே ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறிகளை வைக்க வேண்டும். இதன்மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். பயிர் உயரத்துக்கு ஏற்றாற்போல இனக்கவர்ச்சிப்பொறிகளின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதால் 30 முதல் 40 நாட்களில் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதன்பிறகும் பாதிப்பு அதிகமாக இருந்தால் (100 செடிகளுக்கு 10 செடிகளுக்கு மேல்) வேளாண்மைத்துறையினரின் ஆலோசனை பெற்று உரிய மருந்துகளைத் தெளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×