search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு கவிழ்ந்து பலி"

    • படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள்.
    • அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

    இங்குள்ள முனா தீவில் இருந்து சுலவேசி தீவுக்கு நேற்று ஒரு படகு சென்றது. இந்த படகில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். தெற்கு சென்சாஷி பகுதியில் சென்ற போது திடீரென அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படகு கவிழ்ந்ததில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் வந்த பலர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ஏரியில் நடுப்பகுதிக்கு சென்றபோது திடீரென படகு கவிழ்ந்தது.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு, நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம், தோடேரு பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கிரண், மகேந்திரா, மகேஷ், பாலாஜி, கல்யாண், ரகு பிரசாந்த், டெல்லி ஸ்ரீகாந்த், சுரேந்திரா ஆகிய 10 வாலிபர்கள் நேற்று மாலை கடடேம் அருகே உள்ள ரத்தனகிரி ஏரிக்கு சென்றனர்.

    100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். நேற்று மாலை 5.30 மணிக்கு ஏரிக்கு சென்ற 10 வாலிபர்களும் படகில் உல்லாச பயணம் சென்றனர். ஏரியில் நடுப்பகுதிக்கு சென்றபோது திடீரென படகு கவிழ்ந்தது.

    5 பேர் மட்டுமே செல்லக்கூடிய மீன்பிடிப்படகில் 10 பேர் சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. சுமார் 20 அடி ஆழமுள்ள இடத்தில் படகு கவிழ்ந்ததால் தங்களைக் காப்பாற்றுமாறு வாலிபர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதில் விஷ்ணு, கிரண், மகேந்திரா, மகேஷ், ஆகியோர் நீச்சல் அடித்துக் கொண்டு கரைக்கு வந்தனர்.

    6 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட கரையில் இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் வெளிச்சம் இல்லாமல் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இரவு 9.30 மணிக்கு ஜெனரேட்டர் கொண்டுவரப்பட்டு விளக்குகள் அமைத்து வெளிச்சத்தில் மீண்டும் தேடும் பணி தொடங்கியது.

    இரவு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி நடந்தும் அவர்கள் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆந்திர அமைச்சர் கக்கனி கோவதனின் சொந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதால் தேடுதல் பணி மேலும் தீவிர படுத்தப்பட்டது.

    இதையடுத்து கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திலிருந்து படகு கொண்டு வரப்பட்டு 8 நீச்சல் வீரர்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது.

    சம்பவ இடத்திற்கு நெல்லூர் எஸ்பி விஜயராவ், மாவட்ட வருவாய் அலுவலர் மலோலா, டிஎஸ்பி வீர ஆஞ்சநேயலூ மற்றும் அதிகாரிகள் வந்து தேடுதல் பணியை துரிதப்படுத்தினர்.

    வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் கல்யாண் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இளம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். மேலும் பிரசாந்த் என்பவர் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×