search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் வாங்கி"

    • பெண் கிராம நிர்வாக அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு
    • இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    ஈசாந்திமங்கலம் அருகே நாவல்காடு துர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 62). இவர் இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஜே.எம்.-2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும் எறும்புக்காடு தம்மத்துகோணத்தை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புத்தன்துறை பகுதியை சேர்ந்த தாமஸ் பெக்கெட் அவருக்கு சொந்தமான இடம் தேரேகால்புதூர், கோதை கிராமம் பகுதியில் உள்ளதாகவும், அந்த நிலத்தை குறைந்த விலையில் வாங்கி தருவதாகவும் என்னிடம் கூறினார்.

    தாமஸ்பெக்ெகட்டிடம் சென்று கேட்டபோது ரகுநாதனிடம் பேசிக்கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து ஒரு சென்ட் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீதம் பேசி முடிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.5 லட்சம் பணம் கொடுத்தேன். அதன்பிறகு ரகுநாதன் அவரது மனைவி உஷா தேவி, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருவதாக என்னிடம் கூறினார். கரம், சிட்டா, பட்டாவை இலவசமாக எடுத்து தருவதாக என்னை நம்ப வைத்து மேலும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த இடத்தை கிரயம் செய்து தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன்.

    ஒரு லட்சத்து 50 ஆயிரம் திரும்பிக்கொடுத்தனர். அதன்பிறகு மீதமுள்ள ரூ.9 லட்சம் பணத்தை திரும்ப கேட்டேன். அப்போது வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதாக கூறினார். ஆனால் ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு மீதி தொகையை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நம்ப வைத்து ஏமாற்றியதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கோட்டார் போலீசார் ரகுநாதன் அவரது மனைவி உஷா தேவி மற்றும் தாமஸ் பெக்கெட் மீது மோசடி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×