search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டர்கள் மோதல்"

    திருச்சி விமான நிலையத்தில் இன்று வைகோ- சீமான் முன்னிலையில் ம.தி.மு.க. -நாம் தமிழர் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #TrichyAirport #MDMK #NaamThamizharkatchi
    திருச்சி:

    தமிழகத்தில் காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வைகோவை பற்றியும் அவரது போராட்டம் பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். மேலும் அக்கட்சியினரும் வைகோவை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சீமான் மற்றும் அக்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருப்பினும் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.

    திருச்சி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதற்காக 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது கட்சி கொடிகளுடன் விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்தனர்.


    வைகோ, சீமான் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் , வைகோவை அவரது கட்சி தொண்டர்களும், சீமானை அவரது கட்சி தொண்டர்களும் கோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர். ஒரே இடத்தில் நின்று 2பேரையும் வரவேற்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனிடையே வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், வைகோவை பற்றி கிண்டலாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் தட்டிக்கேட்டனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் இரு தரப்பினரும் தாங்கள் வைத்திருந்த கொடி கம்பங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலால் விமான நிலைய வளாக பகுதியானது போர்க்களம் போல் காட்சியளித்தது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வந்த உறவினர்கள் பலர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.


    இந்த மோதலில் நாம் தமிழர் கட்சி தொண்டர் கரிகாலன் என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும் மற்றொரு தொண்டருக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். இதையறிந்ததும் விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியய்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காயமடைந்த 2பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு கட்சி தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வைகோவும், சீமானும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport #MDMK #NaamThamizharkatchi
    ×