search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துவையல் ரெசிப்பி"

    • பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை.
    • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சத்து மிகுந்த பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதன் சுவையிலோ அல்லது மனத்திலோ ஏதாவது பிடிக்காமல் போய்விட்டால் அதை நாம் உண்ண மறுத்து விடுவோம். அப்படி பிடிக்காத காய்களில் முள்ளங்கியும் ஒன்று. ஒரு சிலரே இந்த முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் இதை விரும்ப மாட்டார்கள்.

    முள்ளங்கியை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல், சிறுநீரகம், ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மலக்குடல் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் அதிக அளவு நீர் சத்தும், நார் சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை வைத்து எப்படி காரசாரமான துவையல் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி- கால் கிலோ

    சின்ன வெங்காயம்- 10

    காய்ந்தமிளகாய்- 4

    மல்லி - ஒரு ஸ்பூன்

    வேர்கடலை- ஒரு ஸ்பூன்

    கடலை பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- நெல்லிக்காய் அளவு

    பூண்டு- 4

    செய்முறை:

    முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பிறகு அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் லேசாக நிறம் மாறியதும் அதில் மல்லி சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வருத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

    மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லேசாக மாறிய பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்த பிறகு புளியை போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் நன்றாக வதக்க வேண்டும். இதையும் எடுத்து ஆற வைத்து விட வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் பருப்பு வகைகளை போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு அதில் ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலையை போட வேண்டும். கருவேப்பிலை நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    இதனை சூடான சாதத்தில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள முள்ளங்கி தொக்கு சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    • கடுகு சட்னி ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
    • சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    எப்போது பார்த்தாலும் தேங்காய் சட்னி, கார சட்னி, வேர்க்கடலை சட்னி என்று அரைத்து சாப்பிடுகின்றோம். அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமான ஆரோக்கியமான இந்த சட்னியையும் சேர்த்துக் கொள்வோமே. இது சுவையில் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு மிக மிக நன்மை தரக்கூடியது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    அதை விட சுடச்சுட சாதத்தில் இந்த கடுகு துவையலை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடுகு- 5 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- 5 ஸ்பூன்

    தக்காளி-2

    காய்ந்தமிளகாய்-4

    பூண்டு- 6 பல்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவேண்டும். கடாய் சூடானதும் அதில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். கடுகை கறியவிட்டுவிடக்கூடாது. அதன் பின்பு அதே கடாயில் பூண்டு, வரமிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை கலவையை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னி அரைப்பது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒருவேளை உங்களுக்கு இதில் கடுகின் கசப்பு தெரிகிறது என்றால் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தாளிப்பு வேண்டுமென்றால் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு தாளிப்பு தேவைப்படாது. சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். அது நம்முடைய விருப்பம் தான். நீங்க மிஸ் பண்ணாம உங்களது வீட்டில் டிரை செய்து பாருங்கள்.

     குறிப்பு: கடுகை வறுக்கும் போது கவனம் தேவை. கடுகு கருகி விட்டால் சட்னியின் ருசி மாறிவிடும்.

    • எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்தது நார்த்தங்காய்.
    • நார்த்தங்காய் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.

    ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும்.

    `நார்த்தங்காய்' என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.

    பயன்கள்:

    * உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

    * செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

    * வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.

    * குடல் பிரச்னைகள் சரியாகும்.

    * இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.

    * நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.

    * மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

    * அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

    * ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    நரம்பு நீக்கிய, சுத்தமான இளம் நார்த்தை இலை- 20

    காய்ந்த மிளகாய்- 4

    தேங்காய்- ஒரு கப்

    புளி- எலுமிச்சை அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    இளம் நார்த்தை இலைகளாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை கிள்ளி எடுத்துவிட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

     அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. குறிப்பு: இதனை தாளித்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்கு இந்த நார்த்தை இலை துவையல் மிகவும் நல்லது.

    ×