search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவுத்திடல்"

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
    • சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தொழில் பொருட்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது. 2 மாத காலம் நடைபெறும் இந்த பொருட்காட்சியை காண சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதனால் பல்வேறு சிறப்புகளுடன் பொருட்காட்சியை சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    புயல், மழையால் தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி சற்று தாமதம் ஆன நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள் 40, 100-க்கும் மேலான ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

    சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதூகலப்படுத்தும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன.

    பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய வகையில் அறிவியல் அரங்கம் நிறுவப்படுகிறது. இதுதவிர சுற்றுலா ரெயில், மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தீவுத்திடலில் இருந்து 'டிரைவ் இன்' ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்தபடியே குடும்பமாக உணவு மற்றும் பொழுதுபோக்கும் வகையில் பிரமாண்டமான திரை அமைக்கப்படுகிறது. அதிக அளவில் கார்களை நிறுத்தி இந்த ஓட்டலில் உணவு சாப்பிடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்படுகிறது.

    இந்த டிரைவ் இன் ஓட்டல் நிரந்தரமாக அங்கு எப்போதும் செயல்படும் வகையில் சுற்றுலாத்துறை சீரமைத்து வருகின்றன. அரசு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை இருந்த நுழைவு கட்டணத்தை விட 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும்.

    பொருட்காட்சி நுழைவு வாயில் பாரம்பரிய சிறப்புடன் அமைகிறது. வருகிற 23 மற்றும் 28-ந்தேதிக்கு இடையே பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    • தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
    • பட்டாசு கடைகள் 17-ந்தேதிக்குள் திறக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இதையொட்டி தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தற்போதைய சூழலில் தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜார்ஜ்டவுன் அனைத்து வணிகர் நல சங்க தலைவர் பி.அனீஸ்ராஜா கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீவுத்திடலில் எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி 40 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பணிகள் முழுவதும் நிறைவடைந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதிக்குள்ளாக பட்டாசு கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தீவுத்திடல் பட்டாசு கடைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவரிடம் அனுமதியும் கேட்டிருக்கிறோம். அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். அதாவது பட்டாசு கடைகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து 21-ந்தேதி வரை பட்டாசுகளை 25 சதவீத தள்ளுபடி விலையில் பொதுமக்கள் வாங்கிடலாம். 21-ந்தேதிக்கு பிறகு இந்த சலுகை இருக்காது. தேவைப்படும் பட்சத்தில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

    அதேபோல இந்த ஆண்டு பசுமை பட்டாசுகள் அதிகளவில், அதிக ரகங்களில் தயாராகி விற்பனைக்கு வரவிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, விபத்துகளை ஏற்படுத்தாத வகையிலும் வெடிகள் தயாராகி இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கொரோனா தாக்கம் ஓய்ந்த நிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முறை பட்டாசு தொழிலை முன்னெடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×