search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாவரங்கள்"

    தாவரங்கள் வெட்டும்போது அவற்றின் உணர்வு மண்டலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது குறித்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.
    நியூயார்க்:

    இயற்கையின் கொடைகளில் ஒன்றாக கருதப்படும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஞானிகளின் ஆத்மார்த்த கருத்து. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்துள்ளன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளும், அதற்கான ஆதாரங்களும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தாவரங்கள் தாக்கப்படும்போது, அவற்றின் நரம்பு மண்டலங்கள் வழியே உணர்வுகள் கடத்தப்பட்டு இதர பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கொண்டு அவை அடுத்து என்ன செய்யும்? என்பது குறித்தான ஆய்வு நீண்டு கொண்டு வருகிறது.

    எனினும், நரம்பு மண்டலமே இல்லாத தாவரங்கள், விலங்குகளை போல தங்கள் உணர்வுகளை அடுத்த பாகங்களுக்கு கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஃப்ளூரோசெண்ட் புரதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமே தாவரங்களின் உணர்வுகள் கடத்தப்படுவது வெளிப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக தாவரவியலாளர் சைமன் கில்ராய் கூறுகையில், ‘இந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்களை தூண்டுகிறது. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது’ என தெரிவித்தார்.

    இதன்மூலம், நாம் அன்றாடம் மிக அலட்சியமாக வெட்டி வீழ்த்தும் தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணர்ந்து, தாவரங்களை வெட்டுவதை குறைத்து இயற்கையையும் பாதுகாக்க முயற்சிப்போம்.


    ×