search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் திரைப்படம்"

    • "சட்டம் ஒரு இருட்டறை" விஜயகாந்த் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்
    • ரஜினி, கமல் என இரு துருவங்களுக்கு இடையே அவர்களுக்கு இணையாக வெற்றி பெற்றார்

    1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.

    செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க விரும்பி 70-களின் மத்தியில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ். கதாநாயகனாகவே நடிக்க விரும்பியதால், திரைப்படங்களில் பல சிறு சிறு வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் அனைத்தையும் துணிச்சலாக உதறி தள்ளினார். இருந்தாலும், ஆரம்பத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை.


    பல போராட்டங்களுக்கு பிறகு அப்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எம்.ஏ. காஜா இயக்கத்தில் "இனிக்கும் இளமை" திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். திரைப்படத்திற்காக "விஜயகாந்த்" என மாற்றப்பட்ட அவர் பெயர், காலமெல்லாம் அவருக்கு நிலைத்தது.

    பிறகு விஜயகாந்த் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன.

    1980ல் கே. விஜயன் இயக்கத்தில் அவர் மீனவராக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய "தூரத்து இடி முழக்கம்" திரைப்படம் தேசிய விருது வென்றது. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதை அடுத்து, பிற இயக்குனர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள தொடங்கினர்.

    1981-ல் எஸ்.ஏ. சந்திரசேகர் (நடிகர் விஜய் அவர்களின் தந்தை) இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார். மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம், அதன் இயக்குனருக்கும் ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து தந்தது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரஜினிகாந்த், இந்தி திரையுலகில் நடிக்க விரும்பிய போது, "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தைத்தான் ரீமேக் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    இருவருக்கும் இடையேயான நட்பினால் தொடர்ந்து எஸ்.ஏ.சி., விஜயகாந்தை கதாநாயகனாக வைத்து பல படங்களை எடுத்தார். அவற்றில் பல பாக்ஸ் ஆபீசில் பெரும் வசூலை அள்ளி குவித்தன.

    எஸ்.ஏ.சி. விஜயகாந்தை அன்புடன் 'கேப்டன்' என அடைமொழி இட்டு அழைத்தார். அப்பெயரிலேயே விஜயகாந்தை, அவரது ரசிகர்கள் அழைக்க தொடங்கினர்.

    மேலும், தனது மகனை திரையுலகில் நிலைநிறுத்த எஸ்.ஏ.சி. மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவும் வகையில், "செந்தூர பாண்டி" எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரனாக ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்ததை பல பேட்டிகளில் எஸ்.ஏ.சி., கூறியிருக்கிறார்.

    "சிவப்பு மல்லி", "ஜாதிக்கொரு நீதி", "சிவந்த கண்கள்" உள்ளிட்ட பல படங்களில் புரட்சிகரமான தோற்றங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை அமைத்து கொண்டார் விஜயகாந்த். மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்து உணர்ச்சி பொங்க வசனம் பேசி நடித்து பாராட்டை அள்ளி குவித்தார்.


    அதனை தொடர்ந்து விஜயகாந்த், மனநல மருத்துவராக "நூறாவது நாள்", கிராமத்து பாடகராக "வைதேகி காத்திருந்தாள்", பாட்டு வாத்தியாராக "அம்மன் கோவில் கிழக்காலே", மூர்க்கமான ஜமீந்தாராக "நானே ராஜா நானே மந்திரி" உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

    ஆக்ஷன் ஹீரோவாகவும், திரில்லர் படங்களின் கதாநாயகனாகவும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட விஜயகாந்தின் திரைப்படம் என்றாலே சண்டை காட்சிகளுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் பஞ்சம் இருக்காது என நம்பி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்த காலம் உண்டு. முகம் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களையோ பெரும்பாலும் தவிர்த்து வந்ததால், ரசிகைகள் கூட்டமும் விஜயகாந்திற்கு குறைவின்றி இருந்தது.

    1986-ல் வெளிவந்த திரைப்பட கல்லூரி மாணவர்களின் பிரமாண்ட வெற்றி படைப்பான "ஊமை விழிகள்" திரைப்படத்தில் டி.எஸ்.பி. தீனதயாள் எனும் வயது முதிர்ந்தவராக, நரை எய்திய தலையுடன் இடைவேளை நெருங்கும் தறுவாயில் திரையில் தோன்றும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக, மிக சிறப்பாக நடித்தார்.

    அதனை தொடர்ந்து விஜயகாந்தின் திரைப்பட வாழ்வு ஏறுமுகத்தில் சென்றது.


    தொடர்ந்து திரைப்பட கல்லூரி மாணவர்களின் முதல் படங்களுக்கு கதாநாயகனாக நடித்து அவர்களை ஊக்குவித்தார். அனுபவம் மிக்க இயக்குனர்களின் படங்களுக்கே முன்னணி கதாநாயகர்கள் நடிக்க ஒப்பு கொள்ளும் காலகட்டத்தில், பல இயக்குனர்களின் முதல் படத்தில் முழு ஒத்துழைப்பு தந்து அப்படங்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர். இதன் மூலம் அந்த இயக்குனர்களுக்கும் திரைப்படத்துறையில் ஒரு வலுவான அடித்தளம் உருவானது.

    நடிகனாக மட்டும் இல்லாமல் தன் நண்பரான இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து "புலன் விசாரணை", "கேப்டன் பிரபாகரன்", "உழவன் மகன்" உட்பட பல திரைப்படங்களை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து அத்திரைப்படங்களை வெற்றிப்படங்களாகவும் உருவாக்கியவர் விஜயகாந்த்.

    தனக்கென சில கோட்பாடுகளை வைத்து கொண்டு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர் விஜயகாந்த். இறுதியாக "ஓம் சக்தி" (1982) எனும் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அவர், அதன் பின் திரைப்படத்துறையில் இறுதி வரை வில்லனாகவோ, குணசித்திர நடிகராகவோ நடிக்காமல் கதாநாயகனாகவே நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

    விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்பதையும் ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார்.


    அதே போல், தனது படங்களை அவரை வைத்தே வேற்று மொழிகளில் எடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்த போதும், தமிழ் மொழி தவிர பிற மொழிகளில் நடிக்காமல் இருந்தார்.

    தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் அதிக முயற்சிகள் எடுத்து கொண்டதால், ரஜினி, கமல் படங்களை விட இவர் நடித்த படங்களில் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருந்தன. பல ஸ்டண்ட் காட்சிகளில் 'டூப்' போடாமல் இவரே நடித்ததுண்டு.

    ஆர்.வி. உதயகுமாரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "சின்ன கவுண்டர்" திரைப்படம் இன்றளவும் பேசப்படும் அவரது பல திரைப்படங்களில் ஒன்று.

    "மீனாட்சி திருவிளையாடல்" எனும் பக்தி படத்திலும் சிறப்பாக நடித்த விஜயகாந்தால் மட்டுமே "ரமணா" எனும் திரைப்படத்தில் அரசாங்கத்தால் தூக்கிலடப்படும் குற்றவாளியாகவும் உயிரோட்டத்துடன் வித்தியாசமாக ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்கின்றனர் விமர்சகர்கள்.

    2010-ல் வெளியான விருத்தகிரி எனும் திரைப்படத்தில் வழக்கம் போல ஆக்ஷன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த்திற்கு, அதன் பிறகு உடல்நிலையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொள்ள வேண்டி வந்தது.


    கிட்டத்தட்ட 154 திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், ஒரு நடிகர் என்பதை தாண்டி அவரது தன்னார்வ பொதுநல தொண்டுகளின் காரணமாக லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படும் மனிதராக வலம் வந்தவர்.

    சத்யராஜ், சரத்குமார், அருண்பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பதை மிகவும் ஊக்குவித்த விஜயகாந்த், தன்னலமில்லாமல் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுத்து உதவினார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு துருவங்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ் திரையுலகில் அவர்களுக்கு இடையே போட்டி போட்டு தனக்கென ஒரு பாணியை அமைத்து தனியிடத்தை பிடித்தவர் விஜயகாந்த்.

    தோற்றத்தில் கருப்பு நிறமுடையவர்களும் தமிழ் திரையுலகில் ஜெயிக்க முடியும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் நிரூபித்தார். அவரை தொடர்ந்து திரையுலகில் கால் பதித்த விஜயகாந்த், ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக ஒருவர் வெற்றிகரமான கதாநாயகனாகவே பல ஆண்டுகள் உலா வரவும் முடியும் என்பதையும் தன் வாழ்நாளில் சாதித்து காட்டினார்.

    ×