search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா முதலமைச்சர்"

    படிப்பு செலவுக்கு மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை கேரளத்தின் மகள் என்று கூறினார். #KeralaCM #PinarayiVijayan #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன். கல்லூரி மாணவி.

    ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஹனன் குடும்பச் செலவுக்கும், கல்வி கட்டணம் செலுத்தவும் திருச்சூரில் உள்ள தெருக்களில் மீன் விற்பனை செய்தார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.

    இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். மாணவியின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர். அதே நேரம் இன்னொரு தரப்பினர் ஹனனை விமர்சித்தனர்.

    கல்லூரி மாணவி ஹனனை ஆதரித்தும், விமர்சித்தும் வெளியான கருத்துக்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், ஹனன் படித்து வந்த கல்லூரி ஆசிரியர்கள் ஹனனுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட, இன்னொரு தரப்பு கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது.

    இதனை அறிந்து ஹனன் வேதனை அடைந்தார். அவர், தன்னை விமர்சிக்க வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார்.

    இதையடுத்து ஹனனை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. மாநில டி.ஜி.பி.க்கும் புகார் மனு அனுப்பியது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி பினராயி விஜயனும் உத்தரவிட்டார்.

    ஹனனை பாராட்டி பேசிய பினராயி விஜயன், ஹனனை தவறாக விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று சங்கனாச்சேரியைச் சேர்ந்த பிரசாந்த் பத்ரா என்ற வாலிபர் கைதானார். இவரையும் சேர்த்து இதுவரை 3 பேர் கைதாகி உள்ளனர்.

    மாணவி ஹனனை பாராட்டிய பினராயி விஜயன்.

    இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று மாணவி ஹனனை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் பாராட்டினார். அப்போது ஹனனை கேரளாவின் மகள் என்றும், அவருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்தார்.

    இதுபற்றி பினராயி விஜயன் பேஸ்புக்கிலும் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    மாணவி ஹனனை அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது கள்ளம்கபடமற்ற சிரிப்பை கண்டதும் மனம் நெகிழ்ந்தது. அந்த சிறுமிக்கு கேரளா துணை நிற்கும். அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும், சிறுமியை விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உளளார்.

    பினராயி விஜயனை சந்தித்த பின்பு ஹனன் கேரளா காதி வாரியம் நடத்திய புடவைகள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது நடந்த ஆடை அணிவகுப்பிலும் பங்கேற்றார். வெள்ளை நிற சேலையும், இன்டிகோ நிற ஜாக்கெட்டும் அணிந்து அவர் நடந்து வந்தார்.

    இதுபற்றி கேரள காதி வாரிய துணைத்தலைவர் ஷோபனா ஜார்ஜ் கூறியதாவது:-

    கேரளாவில் இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பெண்ணாக ஹனன் காணப்படுகிறார். எனவே அவரை காதி வாரிய சேலை அறிமுக விழாவில் பங்கேற்க அழைத்தோம். அவர் பங்கேற்றதின் மூலம் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை வளருமென்று நம்புகிறோம் என கூறினார். #KeralaCM #PinarayiVijayan #Hanan

    ×