search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீதாஜீவன் எம்.எல்.ஏ"

    கயத்தாறில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.கிழக்கு ஒன்றியம், இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரகூட்டம் ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமையில் கயத்தாறில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் கயத்தாறு பேரூர் இளைஞரணி அமைப்பாளர் அருண்பாண்டியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர்கள் செல்வகுமார். சுரேஷ்கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பஹீர், நகர துணை செயலாளர் குருசாமிப்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ராகவன், மாவட்ட பிரதிநிதி கொம்பையா, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யாத்துரை,

    மாவட்ட பிரதிநிதி, பவுன்ராஜ், எட்டுராஜ், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சந்தனமாரியம்மாள், ஒன்றிய வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் ஒன்றிய ,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய, நகர இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    30.3.2018 அன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தூத்துக்குடி பகுதி மக்களின் எண்ணத்திற்கேற்ப, ‘ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும்’ என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, நீதிமன்ற அனுமதியுடன், 4.4.2018 அன்று தி.மு.க.வின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தூத்துக்குடி பகுதி கிராம மக்களை தொடர் போராட்டத்தின் 100-வது நாளை மிகவும் எழுச்சியுடன் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், 20.5.2018 அன்று சப்-கலெக்டர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் போராட்டக் குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், போராட்டக் குழுவினர் முற்றுகை போராட்டத்தினை நடத்திட அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    தி.மு.க. சார்பில் 22.5.2018 அன்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அறவழியில் பேரணியாக சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்படி இருக்கையில் தி.மு.க. மீது முதலமைச்சர் பழி சுமத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாதது.

    தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்தில் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. அது ஒரு தன்னெழுச்சியான மக்களின் போராட்டமே தவிர தி.மு.க. உள்பட எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் அல்ல.

    உண்மை நிலை இவ்வாறிருக்க சட்டசபையில் முதல்அமைச்சர் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் கீதாஜீவன், எம்.எல்.ஏ., என்று கூறுவது வடிகட்டிய பொய் மட்டுமல்ல தி.மு.க. மீது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுமத்தும் வாடிக்கையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகவே உள்ளது.

    தி.மு.க. மீது பழி சுமத்தும் போக்கில் துயரத்தில் மூழ்கி தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் முயற்சியில் முதலமைச்சரே இறங்கியிருப்பது வேதனைக்குரியது. துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் அனுதாபம் தெரிவிக்க முடியாமலும் இருக்கும் முதலமைச்சர் என் மீது குற்றம் சாட்டுவது தனது தோல்வியை என் மீது போட்டு தப்பிக்க முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

    காவல்துறை, உளவுத்துறை கையில் வைத்திருக்கும் முதல்அமைச்சர் நடந்த நிகழ்வுகள் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பதா, அல்லது தெரிந்து கொள்ளும் அளவிற்கு மாநில உளவுத்துறை முதல்அமைச்சருக்கு தகவல்களை கொடுப்பதில்லையா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

    எனவே முதலமைச்சரின் பொய்க்குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியலில் இருக்கும் என் மீது பழி போடுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் மீது பழி போடுவதாக நினைத்து உணர்வுடனும், தன்மானத்துடனும், தன்னெழுச்சியாக போராடிய என் மாவட்ட மக்களை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் என்பதை மட்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×