search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளி கோவில்"

    • சோழ தேசத்து மக்களால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட தெய்வம் “நிசும்பசூதனி”
    • தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள்.

    தமிழகத்தில், இன்று பிளாஸ்டிக் பைகள் மிதக்க பாய்ந்து கொண்டிருக்கும் அதே காவிரி ஆற்றங்கரையில் நாம் கற்பனை கூட செய்து பார்க்காத அளவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் அற்புதமான நாகரீகம் ஒன்று தழைத்து செழித்திருந்தது. இன்றைக்கு இருக்கும் சாமானிய மக்களை விட அதிக நேர்மையாகவும் நாணயமாகவும் அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

    போரில் அவர்களை அவ்வளவு எளிதில் யாராலும் வெல்ல முடியாது. கட்டிடங்களை அவர்கள் போல் பிரம்மாண்டமாக எழுப்ப முடியாது. கல்லிலும், உலோகங்களிலும் அவர்களைப் போல் கலை வளர்க்க முடியாது, விவசாயம் அவர்களை போல் செய்ய முடியாது.

    இப்படி எல்லா வளங்களையும், நலன்களையும் குறைவில்லாமல் அந்த காவிரிக்கரை மக்கள் பெற "நிசும்பசூதனி" என்ற பெண் தெய்வம் துணையாய் இருந்திருக்கிறாள். விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் போருக்கு செல்லும் முன்னரும், கோயில்களை எழுப்பும் முன்னரும் இந்த காளியை வணங்கிச் சென்றுள்ளனர்.

    சோழ தேசத்து மக்களால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட தெய்வம் அவள். யார் அந்த "நிசும்பசூதனி" பேரரர்சர்கள் வணங்கும் அளவிற்கு அப்படி என்ன சிறப்பு? இன்று எங்கிருக்கிறாள்?

    சோழ சாம்ராஜ்யம் பற்றி இன்றும் நாம் பேச காரணம் சாக்த வழிபாடு. ராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடுகளின்படி கடைச்சோழர் வம்சத்தைத் தோற்றுவித்த 'விஜயாலயன்' தன் தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றிக் கொண்ட போது, அந்த நகரின் கிழக்கில் அமைந்திருந்த நகரப் பகுதியில் தன் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுப்பித்தான் என்பது தெளிவாகிறது.

    இன்று கீழ வாசலில் உள்ள பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் உள்ள "ராகு கால காளி" என்ற பெயரில் உள்ள "நிசும்பசூதனி", மற்றொன்று "குயவர் தெருவில்" எழுந்தருளியிருக்கும் "உக்கிர காளி அம்மன்" என்ற பெயரில் உள்ள "நிசும்பசூதனி".

    இதில் எது விஜயாலயன் எழுப்பிய "நிசும்பசூதனி" ஆலயம் என்ற சர்ச்சை இன்று வரை இருந்தாலும் நாம் இவ்விரண்டிலும் காலம் விழுங்கிய தன்மையினை உணரலாம்.

    புராணம்:

    சும்பன், நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே "நிசும்பசூதனி" எனும் பெயர் வழங்கப்படுகிறது. இது நாம் அறியும் புராணக் கதை.

    நாம் ஏற்கெனவே கண்டது போல விசயாலயன் எதிரிகளை ஒழித்து தஞ்சையையும், வல்லத்தையும் வென்று சோழப் பேரரசை நிறுவியதால், அந்தக் கருத்தமைப்புடன் இந்தத் தேவியின் சிற்பத்தை அமைத்திருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    முகத்தில் ஆவேசம் பொங்க சும்பனை ஒரு காலிலும் நிசும்பனை மறு காலிலும் மிக ஆக்ரோஷமாக மிதித்துக் கொல்லும் அந்த சிலையைக் கண்டால், பெண் என்பவள் ஏளனம் செய்யக்கூடியவள் அல்ல சீண்டினால் எந்த ஆணுக்கும் இந்த கதி தான் என்பதை ஒரு நொடிப் பொழுதில் உணரவைக்கும் கலை வடிவம், வற்றிய மார்புகளுடன், மிகுந்த ஒடிசலான தேகமுமான சிற்பமாக "தூமவதி" என்ற சக்தி உடல் ரீதியாக பெண் என்பவள் வலிவு குறைந்தவளாக இருப்பினும் மனதளவில் ஆற்றல் மிக்கவள் என்பதை உணர்த்தும் தெய்வம்.

    "தையலை உயர்வு செய் " என்ற பாரதியின் வரிகளை நினைவில் கொண்டு நம் வரலாற்றோடு தாய், மனைவி,மகள் போன்ற பல பரிமாணங்களில் நம்மை சுற்றி இருக்கும் பெண்மையை உணர்ந்தால் வாழ்வும் சிறக்கும். தஞ்சை செல்லும் போது சோழர்கள் வணங்கிய நிசும்பசூதனியை தரிசித்து வாருங்கள், சோழர்களை போல் உங்கள் வாழ்வும் வளமானதாக இருக்கும்.

    ×