search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்துறை"

    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 போலீசாருக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் விழுப்பரம், திருவண்ணாமலை, சேலம், கடலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், ஆவடி, சேலம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளை சேர்ந்த 429 பேருக்கு காவலர் பயிற்சி மற்றும் நீச்சல், ஓட்டுனர், முதலுதவி, தீயணைப்பு, கமாண்டோ மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    பயிற்சி வகுப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த இரண்டாம் நிலை காவலர் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், கனகவல்லிபுரம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான வீரபெருமாள், திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் பேசியதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையில் இளம் காவலர்கள் இணைந்து உள்ளனர். இந்த 429 பயிற்சி பெற்ற காவலர்களை மட்டுமல்லாது அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்துகிறேன். இந்த பயிற்சி பள்ளியில் 429 பேரில் 204 பேர் பட்டப்படிப்பு, 27 பேர் மேல்பட்டபடிப்பு, 83 பேர் பொறியியல். 57 பேர் பட்டயபடிப்பு, 5 பேர் ஐ.டி.ஐ. படிப்பு, 3 பேர் உடற்பயிற்சியில் பட்டய படிப்பு, 45 பேர் மேல்நிலை வகுப்பு, 9 பேர் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார்கள்.

    இது மிகப்பெரிய மாற்றமாகும். ஒரு காலத்தில் 8-ம் வகுப்பு படித்து போலீஸ் பணியில் சேர்ந்தனர். போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது. இது பொதுமக்களிடையே போலீசாரின் மதிப்பை அதிகப்படுத்தும்.

    பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நியாயமான சட்டத்திற்கு உட்பட்டு, எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிற்சி கல்லூரி துணை முதல்வர் கணேஷ் குமார், கவாத்து பயிற்சியாளர் பாஸ்கர், முதன்மை சட்ட பயிற்சியாளர் கலிய சுந்தரம் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×