search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி உரிமையாளர் போராட்டம்"

    • கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
    • நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 'இனி தொழில் செய்யவே முடியாது' என்ற நிலைக்கு வந்துள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரி அனுமதி பெற்றிருப்போர் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள், கடந்த 3 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்குக் காரணம், சரளைக் கற்கள் போன்ற சிறு கனிமத்திற்குகூட கனிமத் திட்டம் அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாகவும், இதுபோன்ற நிபந்தனைகளுடன் தொழிலை தொடர முடியாது என்றும், பெரிய கனிமத்திற்குத்தான் இது பொருத்தமாக இருக்கும் என்றும், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

    கல் குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்துப் பேசி அதற்கு ஒரு சுமூக தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
    • அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்க வேண்டும், லைசென்ஸ் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் ,சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கடந்த 4 நாட்களாக பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700க்கு மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட குவாரி உரிமை யாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: -

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்க வில்லை. கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். போராட்டத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×