search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறைபனி"

    • தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையும், அதிகளவில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது.
    • தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்ந்தது. பருவமழை ஓய்வதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் இரவில் இருந்து காலை வரை பனி கொட்டியது.

    அதிலும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையும், அதிகளவில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது.

    அந்தவகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

    மேலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது என்றும், குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வுமையம் கூறியிருக்கிறது.

    சென்னையை பொறுத்தவரையில், காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் கடும் உறைபனி நிலவுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும்.

    குளு, குளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.

    இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது.

    ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 24.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. அவலாஞ்சி அணை பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அவலாஞ்சி அணையில் உறைபனி காரணமாக தண்ணீர் ஆவியாக மாறியது.

    நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் கடும் உறைபனி நிலவுகிறது.

    தற்போது தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் புற்கள் மற்றும் வாகனங்கள் மீது படர்ந்து காணப்படும் உறபனியை கையில் எடுத்து கண்டு ரசிக்கின்றனர். அதனை புகைப்படம் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர். 

    • உறைபனி தாக்கம் தொடர்வதால் இத்தலார், காந்தி கண்டி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.
    • தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் அடியோடு குறைந்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக இருந்தது. நேற்று மைனஸ் ஒரு டிகிரி செல்சியசாக பதிவானது.

    கடுங்குளிர் நிலவுவதால் தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    உறைபனி தாக்கம் தொடர்வதால் இத்தலார், காந்தி கண்டி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் அடியோடு குறைந்துள்ளது.

    இதுகுறித்து சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் உறைபனி இருப்பதால் பயிர்கள் கருகி விடுகிறது. தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், அதில் இருந்து பச்சை தேயிலை பறிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். அதுவரை என்ன செய்வது என்பது தெரியவில்லை. எனவே பனியால் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அறுவடைக்கு தயாரான தேயிலை, எடுக்க முடியாத அளவுக்கு கருகியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். நாள்தோறும் 5 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகளுக்கு 2 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வழங்க முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது.
    • குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.

    தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன.

    புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மையாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா்.

    கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள்.

    இன்று 3-வது நாளாக நீலகிரியில் உறைபனி காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
    • ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் அதிகமாக இருக்கும்.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.

    தற்போது மழை குறைந்ததால் பனிப்பொழிவு குறைந்து உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக உறைபனியில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரும் நிலவுகிறது.

    ஊட்டியில் இன்று காலை தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.

    இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது.

    அதிகாலையில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள் வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 23.7 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இது புறநகர் பகுதிகளில் குறைந்து 2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.

    அதே சமயம், ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டியில் கடும் உறைபனி காணப்பட்ட நிலையிலும், குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • போடி அருகில் உள்ள மூணாறு செல்லும் சாலையில் சின்னகல்லாறு பகுதியில் தண்ணீர் உறைநிலைக்கு சென்று வருகிறது.
    • எப்போதும் குடிநீரை சுடவைத்தே குடிப்பதற்கும், மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் உறைபனி நிலவுவதால் வீட்டுமுன்பு நிறுத்தியிருக்கும் வாகனங்களின் மீது ஐஸ்கட்டிகள் படர்ந்து காணப்படுகிறது.

    கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது நடைபயிற்சிக்கு செல்பவர்கள் மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் போடி அருகில் உள்ள மூணாறு செல்லும் சாலையில் சின்னகல்லாறு பகுதியில் தண்ணீர் உறைநிலைக்கு சென்று வருகிறது.

    பிரிட்ஜில் பீரிசரில் வைத்த ஐஸ்கட்டியை போல தண்ணீர் பாட்டிலில் பிடித்து வெளியில் வைக்கப்பட்ட தண்ணீர் மாறி வருகிறது. இதனால் எப்போதும் குடிநீரை சுடவைத்தே குடிப்பதற்கும், மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து நாளுக்குநாள் அதிகரித்து வரும் உறைபனியால் பொதுமக்கள் மற்றும் அதிகாலையில் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    • வயல்வெளிகள், மைதானங்களில் பனி போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது.
    • வீட்டில் உள்ள குடிநீர் ஐஸ்கட்டி போல உறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் வானியல் மாற்றங்களால் புயல், மழை என பொதுமக்களை வாட்டி எடுத்து வந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மழைக்காலம் முடிந்தவுடன் லேசான பனிக்காலம் ஆரம்பமானது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பகலில் வெயில், மாலை நேரங்களில் பனி என ஆரம்பமான உறை பனிக்காலம் தற்போது பொதுமக்களை உறைய வைக்கும் காலமாக மாறி உள்ளது. 10 டிகிரி, 8 டிகிரி என உறைந்து வந்த பனியின் நிலைமை தற்போது 5 டிகிரிக்கும் குறைவாக நிலவி வருகிறது.

    இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்வோர் கடும் உறைபனியால் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் விரைவாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகிறது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் தற்போது நிலவி வரும் கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் ஏரிச்சாலைப்பகுதி மற்றும் தங்கும் விடுதிகளில் தீ மூட்டி குளிர் காயும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

    பொதுமக்களும் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஸ்வெட்டர், ஜர்க்கின், குல்லா போன்ற துணி வகைகளால் மூடி பயணிக்கும் சூழலும் உருவாகி உள்ளது. இனி வரும் காலங்களில் மைனஸ் டிகிரி வெப்பநிலையை தொடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை 7 மணிக்கு மேல் காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு போல் பனி சாரல் மழை போல் விழுந்ததையும் காண முடிந்தது.

    கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மலைகிராமங்களிலும் இதுபோன்ற நிலை நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கிப் போய்உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதால் வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். வயல்வெளிகள், மைதானங்களில் பனி போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது. வீட்டில் உள்ள குடிநீர் ஐஸ்கட்டி போல உறையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    • நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.
    • ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரையிலோ அல்லது மார்ச் முதல் வாரம் வரையிலோ உறைபனி விழுவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு மாத தொடக்கத்தில் மழை பொழிவு இருந்ததால் பனிக்காலம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

    கடந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் நீர் பனி கொட்டியது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.

    இன்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், உறைபனி விழுந்தது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம், கோத்தி போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார் போல வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது.

    இதேபோல் தாவரவியல் பூங்கா, தாழ்வான பகுதிகளில் இருக்க கூடிய புல்வெளிகளிலும் உறைபனி காணப்பட்டது.

    காலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இருப்பினும் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவோர் வழக்கமாக பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

    ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. உறைபனியுடன் கடும் குளிரும் வாட்டுவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ×