search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவை சிகிச்சை பிரசவங்கள்"

    • தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
    • 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் சிரிஜா மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதான் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.ஐ.டி. மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களில் (சி பிரிவு) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.

    அறுவை சிகிச்சை (சி பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும்.


    மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்க கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாக தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

    தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவூருதல் ஆகியவை அதிகமாக காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையை பொறுத்தவரை 2016-ல் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் 49.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

    நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதிக எடை கொண்ட பெண்கள் குழந்தை பெற்று கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் 35-49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் 4 மடங்கு அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்று உள்ளது. சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்து உள்ளது.

    ×