search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai IIT"

    • தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
    • 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் சிரிஜா மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதான் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.ஐ.டி. மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களில் (சி பிரிவு) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.

    அறுவை சிகிச்சை (சி பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும்.


    மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்க கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாக தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

    தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவூருதல் ஆகியவை அதிகமாக காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையை பொறுத்தவரை 2016-ல் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் 49.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

    நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதிக எடை கொண்ட பெண்கள் குழந்தை பெற்று கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் 35-49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் 4 மடங்கு அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்று உள்ளது. சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்து உள்ளது.

    • மாமல்லபுரத்தில் சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்று நிறைவடைந்தது.
    • இதில் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த மாநாட்டை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை வகித்து நடத்தினார். அறிவியல் தொழில்துறை, ஆராய்ச்சிதுறை செயலர் மற்றும் கவுன்சில் தலைமை இயக்குனர் கலைச்செல்வி காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாநாட்டு தலைவரான சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் இன்ஜினியரிங் பிரிவு செயல் இயக்குனர் ராமமோகன், தர உறுதி செயல் இயக்குனர் தாமஸ் மேத்யூ மற்றும் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாநாட்டில் அணுசக்தி பாதுகாப்பு, ரசாயனம், விண்வெளி ஆய்வு, எண்ணெய் கிணறுகளின் கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மை, வருங்கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

    • தொழில்துறை நிதி உதவி கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
    • எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    சென்னை :

    சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. சென்னை ஐ.ஐ.டி. 2021-22-ம் நிதியாண்டில் மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து ரூ.768 கோடியும், தொழிலக ஆலோசனை வழியாக ரூ.313 கோடியும் பெற்றுள்ளது.

    கம்ப்யூட்டிங், 5ஜி ஆகிய துறைகளின் வளர்ச்சி காரணமாக தொழில்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னிலை வகிக்கிறது.

    மொத்த நிதி வளர்ச்சியை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தொழில்துறை நிதி உதவி கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களுக்கான நிதியை பெரு நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு நிதியில் இருந்து வழங்குவது தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ‘ரோபோ’வை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    சென்னை:

    இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் வி‌ஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர்.

    இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. அவர்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர்.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க சென்னை ‘ஐ.ஐ.டி.’ அதி நவீன ‘ரோபோ’வை (எந்திர மனிதனை) உருவாக்கி உள்ளது.

    இந்த ‘ரோபோ’க்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டு அது சுழலும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்று சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சுழலும் விசிறிகளை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.

    இதே முறையில் ஆயில் மற்றும் கியாஸ் துறைகளிலும் தொட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சியிலும் சென்னை ‘ஐ.ஐ.டி.’ பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’வின் செயல்பாடு குறித்த ஆய்வக பரிசோதனையை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மிக குறுகிய தெருக்களில் வாகனங்களையும், பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். #PoisonousGas #ToxicGas
    சென்னை ஐஐடி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ChennaiIIT #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளன. உணவை உண்பதற்கு தனித்தனியான தட்டுகளும், பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. கை கழுவும் இடங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதை அறிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இச்செயல் அப்பட்டமான சாதீய பாகுபாடாகும். பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மற்றும் பட்டியல் பழங்குடியின சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரான இச்சாதீய ரீதியான பாகுபாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதீய பாகுபாட்டை கடைபிடிக்கும் இக்கல்லூரி நிர்வாகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #ChennaiIIT #Mutharasan
    சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல் என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    5 மாநில தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு ஏற்பவே பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசுக்கு எதுவும் இல்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு எந்த கட்சியுடனும் பிரச்சனை இல்லை. இங்கு, இறப்பை முன்வைத்து அரசியல் செய்வது போன்ற மோசமான நடவடிக்கை எதுவும் இல்லை.

    தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் என்று கூறியுள்ளார். அந்த கப்பலில் தான் அவர் இதுவரை துணை கேப்டனாக இருந்தார்.


    இலங்கையில் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் அங்குள்ள தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் சுமூக உறவு ஏற்பட்டால் நல்லதுதான்.

    குமரிமாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியிருக்கிறார். ஒரு திட்டத்தின் மொத்த மதிப்பீடு என்ன என்பதை கூட தெரியாமல் கூறியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இது பற்றி பேசுபவர்கள் எந்த திட்டத்தில் எவ்வளவு ஊழல் என்பதை தெளிவாக கூற வேண்டும். இது பற்றி நான் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளேன்.

    குமரி மாவட்டத்தில் ஒரு திட்டங்கள் கூட நடைபெறாத போது வராதவர்கள் இப்போது வந்துள்ளார்கள். இங்கு மதம், ஜாதி பிரச்சனையை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
    சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #ChennaiIIT
    இந்தூர்:

    நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.களில் போதுமான பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சந்திரசேகர் என்ற ஆர்வலர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்து உள்ளது.

    அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. உள்பட நாட்டின் முக்கியமான 8 ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மொத்தம் 65,824 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 6,318 பேராசிரியர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 4,049 பேராசிரியர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதன் மூலம் 36 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

    இதில் அதிகபட்சமாக வாரணாசி ஐ.ஐ.டி.யில் 52 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் கரக்பூர் (46), ரூர்க்கி (42), கான்பூர் (37), டெல்லி (29), சென்னை (28), மும்பை (27), கவுகாத்தி (25) போன்ற ஐ.ஐ.டி.கள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன. நாட்டின் பழமையான மற்றும் முக்கியமான ஐ.ஐ.டி.களில் இவ்வாறு அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து கல்வியாளர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர். #ChennaiIIT

    2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது. #ChennaiIIT
    சென்னை:

    உயர் படிப்புக்கான ஜெ.இ.இ. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

    இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவ- மாணவிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு முதல் இப்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டு தோறும் தயாரிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    “2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யான இந்திய தொழில்நுட்ப கழகம் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    சென்னை ஐ.ஐ.டி.க்கு ஆய்வில் 88.95 சதவீதம் மதிப்பெண் கிடைத்துள்ளது. அங்கு 606 பேர் பி.எச்.டி. பட்டம் பெற தகுதியுடன் உள்ளனர்.

    இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளன. கரக்பூர் ஐ.ஐ.டி. 4-வது இடத்திலும், கான்பூர் ஐ.ஐ.டி. 5-வது இடத்திலும், ரூர்கி ஐ.ஐ.டி. 6-வது இடத்திலும், கவுகாத்தி ஐ.ஐ.டி. 7-வது இடத்திலும் இருக்கின்றன.


    இந்த தரவரிசைப் பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. ஐ.ஐ.டி. அல்லாத தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை இடத்துடன் அகில இந்திய அளவில் 8-வது இடத்தைப் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 67.04 சதவீதம் மதிப்பெண்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

    இந்த தரவரிசைப் பட்டியலில் திருச்சியில் உள்ள என்.ஐ.டி.யான தேசிய தொழில்நுட்பக் கழகம் 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 16-வது இடத்தில் இருக்கிறது. வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு 57.02 மதிப்பெண்கள் கிடைத் துள்ளது.

    பிலானி பிர்லா இன்ஸ்டிடியூட் 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி 29-வது இடத்தைப் பெற்றுள்ளது. #ChennaiIIT
    ×