search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar"

    • ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்.
    • எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில்,

    பெருந்தலைவர் காமராஜர் ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மகத்தான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

    தற்போது கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வியி னுடைய வளர்ச்சிக்காக முதல்வர் எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகளையே பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே அமைந்திருக்க இந்த திட்டம் அமைந்துள்ளது எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
    • காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார்.

    சென்னை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவில் பேசும்போது "கல்வி புரட்சிக்கு வித்திட்டது தி.மு.க என்றும், அதன்பின் தான் தமிழகத்தில் கல்வி கற்பவர் எண்ணிக்கை அதிகரித்தது" என்றும் பேசியிருப்பது வரலாற்றினை மாற்ற நினைக்கும் செயலாக தெரிகிறது.

    கர்மவீரர் காமராஜர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்ப பள்ளிகளை திறந்தார். தமிழகத்தில் கல்வி புரட்சி கொண்டு வந்தது காமராஜர் தான். இதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாராட்டி காமராஜரின் பிறந்தநாளை 2006 -ம் ஆண்டு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது.
    • தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

    3 முறை தமிழக முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் பதவி வகித்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராஜர்.

    காமராஜரின் இறப்புக்கு பின்பு அவரது எளிமையான வாழ்க்கையை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் நிறுவப்பட்டது. அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், அவர் பயன்படுத்திய 'செவர்லட்' கார்.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் காரை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவர் பயன்படுத்துவதற்காக டி.வி.எஸ். கம்பெனி நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இலவசமாக வழங்கினார். இந்த காரை தான் காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை பயன்படுத்தி வந்தார். காமராஜர் அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.

    கடந்த ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து எடுத்துவரப்பட்ட அந்த கார் கிருஷ்ணகிரியில் உள்ள பழுது பார்க்கும் ஆலையில் வைத்து புனரமைக்கப்பட்டது.

    அமெரிக்க நாட்டின் தயாரிப்பான செவர்லட் கார் 1952 ஆம் ஆண்டு மாடல் கொண்டதாகும். காரின் கதவுகள், இருக்கைகள், என்ஜின் போன்றவை ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு துருப்பிடித்த பாகங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. காரின் கதவுகளுக்கு இடையே வரும் சில்வர் கிரில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்டர் செய்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஓடாமல் இருந்த கார் என்ஜின் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    தற்போது புதுப்பொலிவுடன் காமராஜர் பயன்படுத்திய கார் அவரை போலவே கம்பீரமாக தோற்றமளிக்கிறது. தொழிலாளர்களின் கடின உழைப்பால் 30 நாட்களுக்குள் 40 ஆண்டு காலம் சிதலமடைந்து நின்ற கார் தற்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் வலம் வந்த செவர்லட் கார் கிருஷ்ணகிரியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    • ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன்.
    • காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது.

    சிலையின் முன்பு பிரசாரம் செய்தது நினைவுக்கு வருகிறது. காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே. இன்றைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்ப்பது நம் கடமை. அதை சரியாக செய்யும் ஆலங்குளம் பகுதி மக்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத்தொடும் அளவுக்கு ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளை குறைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காமராஜரின் 121-வது பிறந்த நாள் மற்றும் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கினர்.

    இதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

    • எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
    • பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...

    எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்

    புராதன அழுக்கைக் கொண்டது

    சிமினி விளக்கை ஏற்றியும்

    லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது

    அவர்களைச் சூழ்ந்த இருள்

    புழுதியும் சேறும்தான்

    அவர்களுடைய பகல்

    அத்தைகளைக் கட்டிக்கொடுக்க

    வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு

    அவர்களது இடக்கை பெருவிரல்

    வண்டிப்பசை பூசியது

    தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்

    அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது

    போய்ச் சேர பேருந்தின்

    வண்ணங்களை ஒடுக்குகளை

    அடையாளம் கண்டவர்கள்

    பாட்டிகள் அத்தைகளின் கதையோ

    இன்னும் மோசம்

    விறகுப் புகையில் இருமி

    பிள்ளைப் பேற்றில்

    செத்துப் போனார்கள்

    குக்கிராமங்களில்

    விலங்குகளைப்போல்

    வாழ்ந்த

    இவர்களைச் சிந்தித்தான்

    ஒரு தலைவன்

    அவனும் படிக்காதவன்

    ஏழை பாழைகளின்..

    பஞ்சைப் பராரிகளின்..

    ஏக்கங்களை..

    பெருமூச்சை..

    கண்ணீரை..

    குருதியைப்

    படித்த மா மேதை

    மண்சுவர் கொண்டு

    கூரை வேய்ந்து

    ஒரு கோவில் செய்தான்

    அதில் ஒரு தண்டவாளத்

    துண்டை மாட்டினான்

    வயிற்றுத் தீயை

    இரண்டு உருண்டை

    சோற்றுப் பருக்கைகளால்

    அணைத்து வைத்தான்

    ஒவ்வொரு குடிசையிலும்

    ஔவைப் பாட்டி

    வலதுகாலெடுத்து வைத்தாள்

    வள்ளுவர் வந்தார்

    கம்பர் வந்தார்

    ஷேக்ஸ்பியர் வந்தார்

    அல்ஜிப்ரா வந்தது

    நியூட்டன் வந்தார்

    குடிசையிலிருந்து

    அப்பா ஆசிரியராய்

    வெளிவந்தார்

    அக்காக்களுக்கு

    டீச்சர் ட்ரைனிங் கனவு

    மருமகள்களுக்கு

    மருத்துவக் கனவு

    எங்களை தெய்வங்கள்கூட

    சற்று தூரத்தில்

    இடுப்பில் துண்டைக் கட்டி

    நிற்க வைத்தது

    எம் கருப்புத் தலைவனோ

    எங்களுக்கு பாதுகாப்பான

    கூரையைத் தந்தான்

    ஆண்களோடு பெண்கள்

    சமமாக அமர

    நாற்காலி தந்தான்

    சாதியைக் காட்டி

    பிடுங்கிக் கொண்ட

    பாடப் புத்தகங்களை

    அவனே மீட்டுக் கொடுத்தான்

    வேறெப்படி சொல்லமுடியும்

    பெருந்தலைவனே..

    கருப்பாயிருந்தாலும்

    நீ விளக்கு

    நீ வெளிச்சம்

    சுயமரியாதை கூடிய

    இத்தலைமுறை

    வாழ்வு நீ தந்தது!

    -கவிஞர் கரிகாலன்

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
    • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது நினைவிடம், தி.நகரில் உள்ள அவரது இல்லம், ஜிம்கானா கிளப் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, முன் னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, டி.சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், சாய்சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அமைந்தகரையில் காமராஜர் தொடங்கி வைத்த மாநகராட்சி பள்ளியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதை தொடர்ந்து அங்கு படிக்கும் 300 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், வசந்தராஜ், குலாம், சீனிவாசன், எம்.ஆர்.ஏழுமலை, ராகுல், கொளத்தூர் ரஞ்சன், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான சிவராஜ சேகரன் ஜாம்பஜாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

    காமராஜர் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கல்வியிலும், தொழில் துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 121-ம் பிறந்தநாள். தமிழ் நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழி நடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌.
    • விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார்.

    விருதுநகர்:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா அவரது பிறந்த ஊரான விருதுநகரில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசு சார்பில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூற்பு வேள்வி நடத்தினர். அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார். விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜ் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கமிஷனர் லீனா சைமன், துணைத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    • காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
    • நங்கநல்லூர் அரசு பள்ளியில் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னை:

    காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது.

    அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டும் 15.7.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாக கொண்டாட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த 7,740 புத்தகங்களை அரசு பொது நூலகங்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    • தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறந்துவிட்ட காமராஜர், நாட்டின் வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளையும் திறந்துவைத்தார்.
    • காமராஜர் ஆட்சியின்போதுதான் பெரியார், குந்தா நீர்மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன

    "ஊர் ஊராக வந்து மதிய உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்"என்று ஒரு விழாவில் பேசினார், பெருந்தலைவர் காமராஜர்.

    மறுநாள், அதாவது 13-7-1956 அன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், மதிய உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார், அவர்.

    எங்கு தெரியுமா?

    வயிற்றுக்கு சோறிட வேண்டும்-இங்கு

    வாழும் மனிதருக்கு எல்லாம்;

    பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்

    பாரை உயர்த்திட வேண்டும் - என்று

    பாடிய தீர்க்கதரிசி கவிஞன் பாரதி பிறந்த எட்டயபுரம் மண்ணில், அந்தப் பாரதி படித்த பள்ளிக்கூடத்தில், அந்த முன்னோடித் திட்டம் முதல்முறையாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

    எவ்வளவு பொருத்தம் பாருங்கள்?

    வயிற்றுப் பசியை ஆற்றிவிட்டு, கல்வி அறிவை ஊட்டு. பிறகு நாட்டை உயர்த்திக் காட்டு என்று பாரதி எழுதிய அந்தப் 'பாட்டுச் சட்டத்தை' தமிழ்நாட்டில் அப்படியே அடிபிறழாமல் அமல்படுத்தி காட்டியவர் அல்லவா, அந்தப் படிக்காத மேதை!

    இன்று கல்வித்துறையில் தமிழகம் எட்டியிருக்கும் வளர்ச்சிக்கு வித்திட்டவர், அவரே.

    குலக்கல்வித் திட்டத்தை மூதறிஞர் ராஜாஜி கொண்டுவந்த போது, காங்கிரசில் எதிர்ப்பு வலுக்க, அவர் பதவி விலகவே,1954-ம் ஆண்டு புதிய முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் காமராஜர் முதலில் சிந்தித்தது, ஏழைப் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை தீர்த்து, கல்வி அறிவை எவ்வாறு ஊட்டுவது என்பது பற்றித்தான்.

    500 பேர் வசிக்கும் கிராமத்துக்கு ஒரு பள்ளிக்கூடம். பள்ளி இறுதி வகுப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி. இலவச சீருடை போன்ற முன்னோடி திட்டங்களை முன்னெடுத்தார்.

    நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றால், சிறந்த ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்தார்.

    1955-56 வரவு செலவு திட்டத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டத்தை நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். பிறகு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 1961-ல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அதை விரிவுபடுத்தினார்.

    வட்டம், மாவட்டங்கள் தோறும் நூலகங்களை நிறுவினார். பொது நூலகத்திற்கு என்று நாட்டிலேயே முதல் முறையாக சட்டம் இயற்றினார்.

    இவ்வாறு தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறந்துவிட்ட காமராஜர், நாட்டின் வளர்ச்சிக்காக தொழிற்சாலைகளையும் திறந்துவைத்தார்.

    'பாய்லர்' என்று சொல்லப்படுகிற ராட்சத கொதிகலன் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்துத்தர செக்கோஸ்லோவாக்கியா நாடு முன்வந்தது. அதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார், காமராஜர்.

    மத்திய அரசு அதிகாரிகளும், அந்த வெளிநாட்டு நிறுவனத்தினரும் இணைந்து அந்தத் தொழிற்சாலையை தமிழகத்தில் எந்த இடத்தில் அமைக்கலாம் என்று அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பரந்த சமவெளியான இடம், சுத்தமான தண்ணீர், தடையில்லா மின்சாரம், போக்குவரத்துக்கு ரெயில் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்ட இடம்தான் அந்தத் தொழிற்சாலைக்குத் தேவை என்று வெளிநாட்டு நிறுவனத்தினர் கூறினர்.

    அத்தனை வசதிகளையும் கொண்ட ஓர் இடத்தை தமிழக அதிகாரிகளால் அவர்களுக்குச் சுட்டிக் காட்டமுடியவில்லை. தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்துவிட்டு, சோர்ந்து போன வெளிநாட்டு நிறுவனத்தினர் தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் தகுந்த இடமில்லை என்ற முடிவோடு கிளம்பத் தயாரானார்கள்.

    அதை அறிந்த காமராஜர், தமிழக அதிகாரிகளையும், வெளிநாட்டு நிறுவனத்தினரையும் அழைத்து, "எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்த்தீர்கள்?" என்று விசாரித்தார்.

    தமிழக அதிகாரிகள் தாங்கள் அழைத்துச்சென்று காட்டிய இடங்களை பட்டியலிட்டதுடன், வெளிநாட்டு நிறுவனத்தார் எதிர்பார்க்கும் வசதிகள் ஒருசேர அமைந்த இடத்தைக்காட்ட இயலவில்லை என்றனர்.

    தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் தனது காலடி பதிய பயணம் செய்தவராயிற்றே, காமராஜர், ஒரு கணம் சிந்தித்துவிட்டு "திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தை காட்டினீர்களா?" என்று கேட்க, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

    "ஏன்?... இவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே... போய் முதல்ல அந்த இடத்தை காட்டிவிட்டு எங்கிட்ட வாங்க!" என்றார், அந்தப் படிக்காதமேதை.

    என்ன ஆச்சரியம்! அங்கே போய் பார்வையிட்ட வெளிநாட்டு நிறுவனத்தாருக்கு, அந்த இடம் பிடித்துப் போய்விட்டது. அது எல்லா வகைகளிலும் தொழிற்சாலை அமைக்கப் பொருத்தமானதாக இருந்தது. அந்த இடமே இறுதியாகத் தேர்வானது. ஏறக்குறைய 750 ஏக்கர் பட்டா நிலத்தையும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் மாநில அரசு அதற்காக ஒதுக்கிக் கொடுத்தது. அங்கே புதிய தொழிற்சாலை உருவானது.

    ஆரம்பத்தில் "ஹெல்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது.

    1-5-1963-ம் ஆண்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது. அப்போதைய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் திருச்சி பெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

    பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர் தொழில் வளர்ச்சி. தொழில் வளர தடையற்ற மின்சாரம் வேண்டும். இதில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் வழியாகவே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த அனல்மின் நிலையங்களை அமைக்க உதவுவதுதான் 'பெல்' நிறுவனத்தின் முதன்மைப் பணி. 'பெல்' நிறுவனத்தின் பங்களிப்பை எளிய மனிதனின் வார்த்தையில் சொன்னால், நம் வீட்டில் 4 விளக்குகள் எரிந்தால் அதில் 3 விளக்குகள் 'பெல்' நிறுவனத்தின் துணையோடுதான் எரிகின்றன என்பதே. உலக நாடுகளில் தொழில் புரட்சியை ஏற்படுத்தி வந்த 'மின்சாரம்' சென்னைக்கு தாமதமாக 1909-ம் ஆண்டுதான் வந்தது. சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேய அரசு மூன்று மின் திட்டங்களை நிறுவி இருந்தது. மூன்றுமே நீர்மின் திட்டங்களாக இருந்தன. அவைதான் பைக்காரா, மேட்டூர், பாபநாசம்.

    காமராஜர் ஆட்சியின்போதுதான் பெரியார், குந்தா நீர்மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. கீழ்பவானி, மணிமுத்தாறு, வைகை போன்ற பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. நீர்மின் திட்டங்களை போலவே மின்சார உற்பத்தியில் அனல்மின் திட்டங்களுக்கும் பெரிய பங்கு உண்டு. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டறியப்பட்டு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் அமைந்தது. அது எவ்வாறு அமைந்தது என்பதை வரலாறு எளிதாக மறந்துவிடாது!

    கடலூரைச் சேர்ந்தவர் பெருநிலக்கிழார் ஜம்புலிங்க முதலியார். அவருக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது.

    கடந்த 1932-33-ம் ஆண்டில் நெய்வேலியில் உள்ள தனது நிலத்தில் விவசாயத்திற்காக அவர், புதிய கிணறு வெட்டினார்.

    அப்போது, தண்ணீருடன் கரித்துகள்கள் கலந்து வருவதைக் கண்டார்.

    அதை அன்றைய ஆங்கிலேய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார். ஆனால் ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு அவரே தன் சொந்தச் செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்தார்.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரை, ஜம்புலிங்கம் முதலியார் அணுகி நிலக்கரி இருப்பது குறித்து விளக்கிச் சொல்ல அவர், அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    அதன்பிறகு நெய்வேலியைச் சுற்றிலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கே, பெருமளவில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரியவந்தது.

    அன்றைய தினம் நிலக்கரி நிறுவனம் தொடங்க ரூ.150 கோடி தேவைப்பட்டதால் அதற்கு நிதி உதவிதர இயலாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

    இருந்தாலும் காமராஜர் மனம் தளரவில்லை. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

    ஜம்புலிங்கம் முதலியார், நிலக்கரி சுரங்கம் உருவாக தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு தானமாகக் கொடுத்தார். காமராஜருக்கு அது உற்சாகத்தைத் தந்தது. நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அவர் கையில் எடுத்தார்.

    மத்திய அரசின் உதவி இல்லாமல் காமராஜர் தலைமையிலான சென்னை மாநில அரசே, நிலக்கரியை வெட்டி எடுக்க முடிவு செய்தது. நெய்வேலியைச் சுற்றியுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மின் உற்பத்தியும் செய்யலாம் என்ற உயரிய நோக்குடன் காமராஜர் அந்தப் பணியை முனைப்புடன் தொடங்க உத்தரவிட்டார்.

    அதற்குத் தேவையான ராட்சத உபகரணங்கள் ரஷிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து கப்பல் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் துறைமுகத்தில் இருந்து நெய்வேலிக்கு கொண்டுபோக போதிய வழித்தடம் இல்லை. அதனால் சென்னை துறைமுகத்திலேயே ராட்சத உபகரணங்களைச் சுமந்துகொண்டு கப்பல் ஓராண்டாக நின்றது.

    காமராஜர், மத்திய, மாநில பொறியாளர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். சரியான வழித்தடம் அமைத்தால் மட்டுமே உபகரணங்களை கொண்டு செல்ல முடியும் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு காமராஜர், "அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு மட்டும் வழித்தடம் அமைக்காமல், காலம் காலமாக மக்கள் அதைப் பயன்படுத்தும் வகையில் வழித்தடம் அமையவேண்டும்" என்றார்.

    உடனடியாக அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடற்கரை ஓரமாக ஒரே மாதத்தில் மண்சாலை அமைக்கப்பட்டது. (அந்தச் சாலைதான் காலத்தால் மறு உருப்பெற்று 'இ.சி.ஆர்.' சாலை என்று இன்றைக்கு அழைக்கப்படுகிறது) அந்த வழியாகத்தான் பல்வேறு வாகனங்களில் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு நெய்வேலியில் நிறுவப்பட்டன.

    நெய்வேலியில் ஆரம்பத்தில் சுரங்கம் தோண்டி நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட போது, நீரூற்று காரணமாக சுரங்கம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.

    அதன்பிறகு மத்திய அரசு 1956-ம் ஆண்டில் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஓர் அமைப்பை ஏற்படுத்தியது.

    நெய்வேலி கிராமத்தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) என பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள சுரங்கத்தை கடந்த 20.5.1957 அன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.

    என்.எல்.சி. தொடங்கியதோடு காமராஜரின் பணி முடியவில்லை. அவ்வப்போது நெய்வேலிக்கு சென்று சுரங்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்று காமராஜர் எடுத்த பெரும் முயற்சியால் இன்று என்.எல்.சி. ஆலமரமாய் வளர்ந்து, பல கோடி இல்லங்களில் விளக்கு எரிய காரணமாக அமைந்தது.

    அது மட்டுமா? சென்னை மாகாணத்தின் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு 5 லட்சம் கிலோ வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணுமின் நிலையத்தை கல்பாக்கத்தில் அமைக்க காமராஜர் முயற்சிகள் மேற்கொண்டார். மத்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, அத்திட்டத்தை பெறுவதில் வெற்றியும் கண்டார். அதன் பயனை தமிழ்நாடு மட்டும் அல்ல; தென் மாநிலங்களே இன்று அனுபவித்து வருகின்றன.

    இவ்வாறு கல்வி வளர்ச்சியிலும், தொழில் வளத்திலும் நாட்டை முன்னெடுத்துச் சென்ற காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தில் பேராளுமை முதல்வராக திகழ்ந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 1964-ம் ஆண்டு பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி, புதிய பிரதமராகுவதற்கு உதவினார். சாஸ்திரியின் திடீர் மறைவுக்குப் பிறகு 1966-ம் ஆண்டில் இந்திராகாந்தியை பிரதமர் ஆக்கினார். அகில இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' என அழைக்கப்பட்டார். 2-10-1975 அன்று தனது 78-வது வயதில் இந்த மண்ணைவிட்டு மறைந்தார். ஆனால் மக்கள் மனமெல்லாம் நிறைந்தார்.

    வாழ்ந்த காலங்களில் விருதுகளை விரும்பாத, அந்த விருதுப்பட்டி மகாராசனுக்கு இந்திய அரசு 'பாரத ரத்னா' விருதை அளித்து தன்னைக் கவுரவப்படுத்திக் கொண்டது. அவர் பிறந்த ஜூலை மாதம் 15-ம் நாளை (இன்று) கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி மகிழ்கிறது.

    • ‘காமராஜர் என்றாலே கல்வி’ என்ற நினைவு நமக்கு வரும்.
    • கர்மவீரா் காமராஜரை ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்று மக்கள் புகழ்ந்து போற்றினர்.

    சென்னை:

    தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'காமராஜர் என்றாலே கல்வி' என்ற நினைவு நமக்கு வரும். காரணம், அவா் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே கிராமங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்று, அதற்கு நல்ல திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்தி வெற்றி கண்டார்.

    அதனால், கர்மவீரா் காமராஜரை 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என்று மக்கள் புகழ்ந்து போற்றினர். காமராஜர், கல்விக்கு மட்டுமல்ல, தொழில் துறைக்கும், வேளாண்மைக்கும் தனது திட்டங்களால் தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர்த்தினார். அத்தகைய புகழ்மிக்க தலைவர் காமராஜரை நினைவு கூர்வது நமது கடமையாகும். சிந்தனை சிற்பி செயல்வீரா் காமராஜர் புகழ் ஓங்குகவே!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

    காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள மெக்கானிக் ஷெட்டிற்கு கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டு இந்த கார் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது கண்ணாடி, உதிரிபாகங்கள், விளக்குகள் பொருத்தப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ள காரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள். வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.

    ×