search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருநூற்றுமலை"

    • சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதிகளில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.
    • சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியில் புலிகுத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சைமலை என மலைகள் சூழ்ந்த மாவட்டமாகும். இதில் கல்வராயன் மலையின் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ளது அருநூற்றுமலை. அருநூற்று மலையில் ஆலடிப்பட்டி, பெலாப்பாடி, சிறுமலை ஆகியவை உள்பட 8 கிராமங்கள் உள்ளன.

    பெரும்பாலான மலைக்கிராமங்களில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர்.பழமை மாறாமல் சில வழக்கங்களை இன்றளவும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.ஆங்காங்கே சில ஊர்களில் ஊருக்குப் பொதுவான இடங்களில் வழிபாட்டில் எண்ணற்ற பழங்கால நடுகற்களும், புதிய கற்கால கருவிகளும் உள்ளன.

    பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் சில இடங்களில் அடர்ந்த காடுகள் சில இடங்களில் காணப்படுகின்றன.அரியவகை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் புகலிடமாய் கல்வராயன் மலை உள்ளது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை, புலி போன்றவை அதிகளவில் காணப்பட்டுள்ளன என்று ஆங்கிலேயர் கால ஆவணமான "இந்தியன் கெசட்டியர்" சான்று கூறுகிறது.

    இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த ஏ.டி.மோகன், பெரியசாமி, ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், முத்தையன் , நித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த நடுகற்களைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை தெரிவித்தனர்.

    இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    16,17-ம் நூற்றாண்டுகளில் இங்கே விலங்கு- மனித மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.குறிப்பாக புலிகள் மக்களைத் தாக்க முயலும்போது, புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வீரத்துடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு இங்கே நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன.

    வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் மரபு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த வகையில் அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி கிராமங்களில் 16-ம் நூற்றாண்டு நடுகல்லொன்று காணப்படுகிறது. இதில் வீரனுக்கு வலது புறத்தில் நின்று கொண்டிருக்கும் ஆக்ரோஷமான புலி வீரனைத் தாக்குவது போலவும், அவ்வீரன் தனது இரு கைகளால் ஈட்டியைக் கொண்டு புலியைக் குத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலையில் அழகிய கொண்டையும், காதணி மற்றும் சரபலி, ஆரம், காப்பு மற்றும் காலில் வீரக்கழல் போன்ற அணிகலன்களை அணிந்துள்ளான்.

    இதனை மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மேலும் பெலாப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு நடுகல் காணப்படுகிறது. இந்நடுகல்லில் வீரனுக்கு இடதுபுறத்தில் புலி ஒன்று வீரனை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது.வீரன் தனது இடது கையில் கட்டாரியை கொண்டு புலியின் வாயில் குத்துவது போன்றும், வலது கையில் ஈட்டியை கொண்டு புலியின் வயிற்றில் குத்துவது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த வீரனின் தலையில் அழகிய கொண்டை கட்டப்பட்டுள்ளது. காதணிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும்.

    பொங்கல் பண்டிகையின் கரிநாளின்போது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் எண்ணற்ற இன்னும் பல வரலாற்றுச் சின்னங்களும், அவை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×