search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிய அறுவை சிகிச்சைகள்"

    • தங்களுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கவுதம், குப்தா இருவரும் கூறினர்
    • நுட்பமான இந்த அறுவை சிகிச்சைகள் இந்திய மருத்துவ சாதனையாகும்

    அரியானா மாநில ஃபரிதாபாத் நகரில் உள்ளது அம்ரிதா மருத்துவமனை (Amrita Hospital).

    10 வருடங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் டெல்லியை சேர்ந்த 65 வயதான கவுதம் டயால் (Gautam Tayal).

    இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தொழிற்சாலை விபத்தில் கவுதம் இடது கரத்தை இழந்தார்.

    சிகிச்சைக்காக அம்ரிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கவுதமிற்கு, தானே (Thane) நகரில் தலையில் காயம் பட்டு "மூளைச் சாவு" அடைந்த 40 வயதான ஒருவரின் கையை மருத்துவர்கள் பொருத்தினர்.

    வட இந்தியாவில் நடந்த முதல் "கை மாற்று" அறுவை சிகிச்சை இதுதான்.

    அது மட்டுமின்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவருக்கு கை மாற்று சிகிச்சை நடைபெறுவதும் இதுதான் நாட்டிலேயே முதல்முறை.

    மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். மோஹித் ஷர்மா (Dr. Mohit Sharma), "இது ஒரு அரிய சாதனை. அவரது கர அசைவுகள் படிப்படியாக செயல்பட தொடங்கி விட்டது. ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என தெரிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிவடைந்து கவுதம் சீராக உடல்நலம் தேறி வருகிறார்.

    டெல்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் தேவான்ஷ் குப்தா (Devansh Gupta).

    3 வருடங்களுக்கு முன் குப்தா ஒரு ரெயில் விபத்தில் இரு கரங்களையும், வலது காலையும் இழந்தார்.

    மூளைச்சாவு அடைந்த சூரத் நகரை சேர்ந்த ஒரு 33 வயது நபரிடமிருந்து இரு கரங்கள், உறுப்பு தானத்தில் பெறப்பட்டு, குப்தாவிற்கு மருத்துவர்கள் பொருத்தினர்.

    நுட்பமான இந்த அறுவை சிகிச்சை குறித்து உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர், டாக்டர் அனில் முரார்கா (Dr. Anil Murarka), "குப்தாவின் வலக்கரம், மேல் பகுதி வரை மாற்றி பொருத்தி இணைக்கப்பட்டது. இடக்கரம், முழங்கை வரை பொருத்தி இணைக்கப்பட்டது. இது சிக்கலான அறுவை சிகிச்சை. ஆனால், வெற்றிகரமாக நடந்தது" என தெரிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிந்து குப்தா, சீராக உடல்நலம் தேறி வருகிறார்.

    மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள கவுதம் மற்றும் குப்தா இருவரும், "இந்த மாற்று அறுவை சிகிச்சை எங்கள் வாழ்வில் ஒரு மறுவாய்ப்பையும், புதிய நம்பிக்கைகளையும் அளித்துள்ளது" என தெரிவித்தனர்.

    ஃபரிதாபாத் நகரின் செக்டார் 88 பகுதியில், 130 ஏக்கரில் பல்துறை சிறப்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைகளில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது அம்ரிதா மருத்துவமனை.

    2600 படுக்கை வசதிகளுடன் அதி நவீன அறுவை சிகிச்சைகளில் அனைத்து உயர் தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட இதனை 2022ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×