search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணு உலைகள்"

    • இணையதள தாக்குதல்கள் உள்பட அனைத்து வகையான ஊடுருவல்களில் இருந்தும் அணு உலைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டு உள்ளன.
    • இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் இயங்கி வருகின்றன.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, அணு உலைகள் மீது இணையதள தாக்குதல் நடப்பதை தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு மத்திய அணுசக்தி இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    அணு உலைகளில் பல்வேறு மட்டங்களில் கண்காணிப்பு பணி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இணையதள தாக்குதல்கள் உள்பட அனைத்துவகையான ஊடுருவல்களில் இருந்தும் அணு உலைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டு உள்ளன.

    கூடங்குளத்தில், தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகள் அமைப்பதற்காக ரஷிய கூட்டமைப்புடன் அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

    இவற்றில் 2 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. மீதி 4 அணு உலைகளின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அவற்றின் மொத்த உற்பத்தி திறன் 6 ஆயிரத்து 780 மெகாவாட் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவையில், அருணாசலபிரதேசத்தில் நடந்த இந்திய-சீன படைகள் மோதல் பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    சமீபத்தில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சர்வர்கள் மீதான இணையதள தாக்குதல், சீனாவில் இருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சீனா நம்மை அழிக்க பார்க்கிறது. எல்லையில் மோதலில் ஈடுபடுகிறது. ஆனால், சீனாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. சீனாவுக்கு எதிராக அரசு எப்போது சிவந்த கண்களை காட்டும்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியதாவது:-

    இந்தியாவில் முதல்நிலை மற்றும் 2-வது நிலை நகரங்களுக்கிடையே விமான போக்குவரத்து வசதி தாராளமாக உள்ளது. மூன்றாம்நிலை நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம்.

    கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 20 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் திட்டம் மூலம் கடைக்கோடி நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை கொண்டுவர விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவையில், மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்து 364 பேர், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இதுவரை மாநில, யூனியன்பிரதேச அரசுகளுக்கு எதிராக 60 லட்சத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

    அவற்றில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 866 புகார்கள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக 2 லட்சத்து 72 ஆயிரத்து 552 புகார்கள் வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    நாடு முழுவதும் வாகனங்களின் தடையற்ற பரிமாற்றத்துக்காக 'பாரத்' என்ற புதிய பதிவு குறியீட்டுடன் பதிவு செய்யும் முறை, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 49 ஆயிரத்து 600 வாகனங்கள், 'பாரத்' குறியீட்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

    தி.மு.க. எம்.பி. கிரிராஜன் பேசுகையில், வடசென்னையில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கெட்ட வாயு கசிந்து வருவதாகவும், அதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    ×