search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடவிநயினார் அணை"

    • தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்றும் அதிகாலையில் 5 மணிக்கு தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் ஒரு மணி நேரம் வரை மழை கொட்டியது. பேட்டை, சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

    மாநகரிலும் லேசான சாரல் பெய்தது. காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து வருகிறது. அதே நேரத்தில் காலையில் பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. காலையில் நெல்லை-தென்காசி நான்கு வழி சாலைகள் தெரியாத அளவிற்கு பனி படர்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரையிலான நிலவரப்படி களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    அதிகபட்சமாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15.4 மில்லிமீட்டரும், நெல்லை, சேரன்மகாதேவியில் தலா 11.5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசத்தில் 84.35 அடியும், சேர்வலாறு அணையில் 96.13 அடியும் நீர் இருப்பு உள்ளது. அந்த அணைகளுக்கு 347 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து நெல் நடவு பாசனத்திற்காக வினாடிக்கு 504 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    இதன் காரணமாக அம்பையில் தொடங்கி வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், சுத்தமல்லி, கோபாலசமுத்திரம், மாநகர பகுதிகளில் கண்டியப்பேரி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டாவது மழை நன்றாக செழிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்ப இன்னும் 2 அடி நீர் மட்டுமே தேவைப்படுகிறது. 23 அடி கொண்ட நம்பியாறு அணையில் 12.49 அடியே நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சீதோஷண நிலை ஜில்லென மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதும், தணிவதுமாக இருக்கிறது. நேற்றிரவு கனமழையால் மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்த நிலையில், இன்று மழை சற்று குறைந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில் இன்று 55.50 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 1.50 அடி அதிகரித்து 113.25 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், கடனா நதி நீர்மட்டம் 59 அடியாகவும் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாத்தான்குளம், திருச்செந்தூர், கழுகுமலை, காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கீழ அரசடி, சூரன்குடி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கழுகுமலை மற்றும் சாத்தான்குளத்தில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு உள்ளனர்.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 3.20 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.80 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 70 அடியும், சேர்வலாறு அணையில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 45.35 அடியாக உள்ளது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சேரன்மகாதேவியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 19 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 15 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு உள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பிய நிலையில் தொடர்ந்து அந்த பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது . இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 11.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் என்னும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் 2.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் லேசான சாரல் பெய்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் அடவிநயினார் அணை உள்ளது. மொத்தம் 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும்.

    இந்த அணையின் நீர்பிடிப்பை ஒட்டிய பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தின் காரணமாக தீ முழுவதும் வேகமாக பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.

    எனினும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிக வேகமாக பரவி வந்தது. இதையடுத்து 2-வது நாளாக இன்றும் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

    ×