search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniform Staffs"

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 6,119 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் காவல் துறையில் பணியாற்றிய தியாகிகளின் புத்தகம் வெளியிடும் விழா இன்று காலை நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 6,119 சீருடை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகத்திலேயே திறமை வாய்ந்த ஸ்கார்ட்லாண்டு யார்டு போலீசுக்கு இணையாக தமிழ்நாட்டு காவல் துறையின் பணி பாராட்டி பேசப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையம் அதிக அளவில் நிறுவப்பட்டது தமிழ்நாட்டில் மட்டும்தான். இத்தகைய பெருமை மிக்க காவல்துறையில் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    இன்று காவல் துறையில் சுமார் 5 சதவீதத்திற்கும் குறைவான பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அந்த இடங்களும் விரைவில் நிரப்பப்படும். தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குற்ற சம்பவங்களும் குறைந்துள்ளன.

    மெட்ரோ நகரங்களில் சென்னையும், கோவையும் பெண்கள் வாழ பாதுகாப்பான நகரங்கள் என புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் வீரத்துடன் பணிபுரிந்து மக்கள் நலனுக்காக தன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் விதமாக வீரத்தியாகிகள் என்ற புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒவ்வொருவரும் பெரும் சாதனைகளுக்காகவே பிறந்திருக்கிறோம். அவற்றை நிகழ்த்திக் காட்டும் திறனும், வலிமையும் நம் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றை உணர்ந்து செயல்படுவதே நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமி‌ஷனர் விஸ்வ நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    ×