search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple Trustee kidnapping"

    திண்டுக்கல் அருகே கோவில் அறங்காவலர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் வண்டிகருப்பணசாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வாகனங்களும் இந்த கோவிலை கடந்து செல்லும்போது சூறை காணிக்கை செலுத்தி செல்வது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

    இக்கோவிலில் அறங்காவலராக இருந்து வருபவர் ரெங்கநாதன். இவர் அய்யலூர் அருகில் உள்ள தங்கம்மாபட்டியில் இருந்து கோவிலுக்கு வந்து செல்வார்.

    சம்பவத்தன்று இவர் கோவில் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென அவரை குண்டுகட்டாக தூக்கி காருக்குள் போட்டது.

    அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் கண் இமைக்கும் நேரத்தில் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது. அதன்பின்னர் கோவிலுக்கு வராததால் அங்கிருந்தவர்கள் ரெங்கநாதனை தேடினர். அப்போது கோவில் முன்பு இருந்த கண்காணிப்பு கேமிராவில் ரெங்கநாதன் கடத்தப்பட்ட வீடியோ காட்சி பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சமூக ஊடகங்களிலும் வீடியோ வேகமாக பரவியது.

    வண்டிகருப்பணசாமி கோவிலில் கடந்த பல வருடமாகவே இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது. கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மோதல் உருவாகி கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி காணிக்கைகளை பங்கிடுவதிலும், வாகன நிறுத்த பிரச்சினையிலும் தகராறு இருந்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் ரெங்கநாதன் கடத்தப்பட்டு இருப்பதால் அவரை யார்? கடத்தி சென்றார்கள் என கோவில் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராவில் பெண் போலீசார் ஒருவரின் உருவம் பதிவாகி இருப்பதால் பல சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவருக்கு மனைவி இல்லாததால் இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×