search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Annamalai"

    தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே குடும்பம் என்ற தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே குடும்பம் என்ற தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    தி.மு.க. முரண்பாடுகளைக் கொண்ட கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் 5.5 கோடி கழிப்பிடங்கள்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்மூலமாக 56 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 2021-22-ம் ஆண்டில் தமிழகத்தை விட 8 மடங்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில்தொடங்க வரும் அந்நிய முதலீட்டாளர்களிடம் 30, 40 சதவீத கமிஷன் தொகையை கேட்கின்றனர்.இதன் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதல்வர் தெரிவித்ததுடன், அண்ணாமலை அரசியல் செய்வதாக தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 நாட்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் தான் என்னால் மேடையில் தைரியமாக பேசமுடிகிறது. இந்த 8 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் ஒரு துறை அமைச்சரின் மீது அலுவலக குண்டூசி திருடியதாகக்கூட புகார் தெரிவிக்க முடியவில்லை. அதே வேளையில், திராவிட மாடல் ஆட்சியில் ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் தற்போது நாக்கு தள்ளுகிறது.

    ஆகவே பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதான ஊழல் பட்டியல், ஊழல் புகார்கள், ஊழல் ஆதாரங்களை ஜூன் 5-ந்தேதி காலையில் மதுரையில் இருந்து வெளியிட தொடங்குவார்கள் என்றார்.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன், மாநிலச்செயலாளர் மலர்க்கொடி, செய்தித்தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார், மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×