search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயேசு"

    • இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு சீடர்கள் உத்தரவு சொன்னார்கள்.
    • இயேசுவை சுமக்க ஆரம்பித்த போது கழுதைக்கு புது வாழ்வு வந்தது.

    மிருகங்களில் அதிகம் விரும்பப்படாதது கழுதை. யாராவது கோபத்தில் நம்மை கழுதை என்று சொல்லிவிட்டால் நம் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    ஒரு கிராமத்தில் கழுதைக்குட்டி ஒன்றை இரு வழிச்சந்தில் ஒருவன் கட்டி வைத்துவிட்டு போனான். அவன் நினைத்தான், இந்த கழுதையினால் இனி யாருக்கும் பலனில்லை. இது எப்படியாவது மரித்துப்போகட்டும் என கட்டிவைத்தான்.

    அந்த கழுதையின் நிலைமையானது, விரும்பும் இடத்திற்கு போக முடியாது, விரும்பும் ஆகாரம் சாப்பிட முடியாது, அதை பராமரிக்க யாருமில்லை, அருகில் யாரும் வர முடியாமல் நாற்றமெடுக்கும் நிலைமை.

    இன்று அநேக மனிதர்களும் இப்படி தனித்துவிடப்பட்ட நிலைமையில் தான் உள்ளனர். கழுதையின் நினைவு, என் கட்டுகளை யார் அவிழ்ப்பார்கள்? எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? மற்ற மிருகங்களை போல என் நிலை எப்போது மாறும்? என ஏங்கி நிற்கிறது. அப்படிப்பட்ட கழுதையைத் தான் இயேசு பார்த்தார், மனதுருகினார்.

    இயேசு சீடர்களை பார்த்து சொல்கிறார், "உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்" (மாற்கு 11:2). "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள். உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான்" என்று சொல்லி, அவர்களை அனுப்பி னார் (மாற்கு 11:3).

    அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள் (மாற்கு 11:4).

    அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர், நீங்கள் கழுதை குட்டியை அவிழ்க்கிறது என்னவென்று கேட்டார்கள் (மாற்கு 11:5).

    இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு சீடர்கள் உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, சீடர்களைப் போகவிட்டார்கள். (மாற்கு 11: 6)

    இயேசுவிடம் அந்த கழுதை வந்தபோது கட்டப்பட்ட நிலை மாறியது, நாற்றமெடுக்கும் நிலைமை மாறினது, கழுதைக்கு வஸ்திரங்களை போட்டார்கள், இயேசு அதன் மேல் ஏறினார். யாருக்கும் பிரயோஜனமில்லாத கழுதைதான் இயேசுவை சுமக்கும் கழுதையாய் மாறினது. அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள் (மாற்கு 11:8).

    இயேசுவை சுமக்க ஆரம்பித்த போது கழுதைக்கு புது வாழ்வு வந்தது. என்றைக்கு நீ இயேசுவை சுமக்க ஆரம்பிக்கிறாயோ? அன்று உங்களுக்கும் உயர்வு வரும்.

    பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்றால், கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று. கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் என்னும் தீர்க்கதரிசி கழுதையை அடித்தான் (எண்ணாகமம் 22:23).

    ஒரு தீர்க்கத்தரிசியால் பார்க்க முடியாத தூதனை யாருக்கும் வேண்டாத கழுதையால் பார்க்க முடிந்தது. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமைப் பார்த்து, 'நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்?' என்றது. (எண்ணாகமம் 22:28).

    கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி, 'நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்' (எண்ணாகமம் 22:32).

    'கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று. எனக்கு நீ விலகாமல் இருந்ததனால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன்' என்றார் (எண்ணாகமம் 22:33).

    யாருக்கும் வேண்டாதவனாய் இருக்கிறேன் என கவலைப்பட வேண்டாம். இயேசுவை சுமக்க, பார்க்க, உனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை மிகப்பெரிய பாக்கியமாய் நினை. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார் (சகரியா 9:9) என்ற தீர்க்க தரிசன வார்த்தை வேதத்தில் எழுதி இருக்கிறது.

    கடவுளின் வாக்கு நிறைவேற எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்படுகிற நிலைமை சில சமயங்களில் ஏற்படலாம். ஆனாலும் பொறுமையோடு காத்திரு. யாருக்கும் தேவையற்ற நீதான் இயேசுவுக்கு வேண்டும். இயேசு கழுதையின் மேல் ஏறின போது கழுதைக்கு வாழ்வு வந்தது, மதிப்பு வந்தது. உன்னுடைய வாழ்க்கையிலும் இயேசுவை சுமக்க தீர்மானித்தால் உனக்கும் நல்வாழ்வு உண்டாகும்.

    கிறிஸ்துதாஸ், ரீத்தாபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.

    • முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.
    • நம்மை சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்வி இது.

    மனிதன் தன்னுடைய வாழ்வில் நன்மைகள் அனுபவிப்பதற்கும், சுகத்தோடு எல்லாவித வளமோடு வாழவும், அவன் தன் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும்.

    நாம் ஒவ்வொருவரும், நண்பர்களிடத்தில் அன்பாகவும், வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளை மதித்தும் நடக்கின்றோம், பணிவுடன் பேசுகின்றோம். ஆனால், நம்மைப் பெற்றெடுத்து, வளர்த்து, தங்கள் முழு உழைப்பையும் நமக்காகவே செலவழித்த தாய், தந்தையரிடம் அன்பாகவும், அவர்களை மதித்தும் நடக்கின்றோமா?

    நம்மை சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்வி இது. வேதாகமம் மூலம் இந்த கேள்விக்கு நாம் விடை பெறலாம்.

    "உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே" (நீதிமொழிகள் 23:12)

    "தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்தி விடுகிறவன் இலச்சையையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்" (நீதிமொழிகள் 19:26)

    "உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்து இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக" (எபேசியர் 6:2,3)

    இவ்வாறு வேதாகமம், தாய் தந்தையரை மதிக்கவேண்டும், அவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்த வேண்டும், அவர்கள் தேவையை அறிந்து அவர்கள் கேட்காமலே நாம் அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

    ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன?

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தன்னைப்பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையருக்கு வயதாகும் போது பலர் அவர்களை கவனிப்பதில்லை. ஒரு வேளை சாப்பாடு கூட கொடுக்காமல், அவர்களைத் திக்கற்றவர்களாக துரத்தி விடும் கல் நெஞ்சக்காரர்களும் இருப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.

    இதுகுறித்து வேதாகமம் கூறுகின்றது;

    "எவனாகிலும் தகப்பனையாவது, தாயையாவது நோக்கி நான் உனக்கு செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாக (பணம்) கொடுக்கிறேன்" என்று சொல்லி, தன் பெற்றோரை கவனிக்காமல் இருந்தால், அவன் தேவனுடைய கட்டளையை மதிக்காமல் இருக்கிறான் என்பது பொருளாகும்.

    பெற்றோரின் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு, அவர்களை நேரில் போய் பார்த்து நலம் விசாரிக்காமல் இருப்பது, அல்லது அவர்கள் வயதாகி பலம் குன்றியவுடனே முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது, அல்லது தாய், தந்தையாரின் அருகில் இருந்தும் அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடும் நிகழ்வுகள் பாவமான செயல்களாகும்.

    தன் மகனை, மகளைப் பார்க்க மாட்டோமா? பேரப்பிள்ளைகளை கொஞ்ச மாட்டோமா? என்று ஏக்கப் பெருமூச்சோடும், கண்ணீர் நீரூற்றோடும் தனிமையிலும், முதியோர் இல்லங்களிலும் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.

    இன்றைக்கு நம் பெற்றோருக்கு நாம் எதைச் செய்கின்றோமோ, அது நாளைக்கு நம் வாழ்விலும் நடக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    "தங்கள் தகப்பனைப் பரியாசம் பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை, நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்" (நீதிமொழிகள் 30:17) என்று வேதம் எச்சரிக்கிறது.

    வாருங்கள் நண்பர்களே, நம் வாழ்வு வளம் பெறவும், சுகமாய் வாழவும், இறைவனால் மேன்மை பெறவும், நம் பெற்றோரை மதித்து, அன்புடன் நடத்தி அரவணைப்போம். தேவனின் அருளும், பெற்றோரின் அன்பும் நம்மை மேன்மைப்படுத்தி வாழ்வில் வெற்றிகளைத்தரும்.

    நெல்லை மானக்ஷா.

    • காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள்.
    • ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள்.

    மனிதனுக்கு ஏற்படும் கவலை அல்லது துக்கம் என்பது பல வடிவங்களைக்கொண்டது. நெருங்கியவர்களின் இழப்புகள், தோல்விகள், உதவியற்று தனித்துவிடப்பட்ட நிலைகள், பணி நெருக்கடிகள், பண நெருக்கடிகள், விரும்பிய கல்வி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, நல்ல வரன் அமையவில்லை, என் சொந்த வீட்டார் கூட என்னை புரிந்து கொள்ளவில்லை... என்று இந்தப்பட்டியல் மிகவும் பெரியதாய் நீளும்.

    இவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு நிகழ்கால, எதிர்கால கவலைகள் வந்து அவன் மனதை, உடலை வாட்டி வருத்துகிறது.

    வேதத்தில், எருசலேமுக்கு அருகில் பெத்தானியா என்ற ஊரில் மார்த்தாள்-மரியாள் என்ற சகோதரிகளுக்கு லாசர் என்ற சகோதரர் இருந்தார். இயேசு இந்த சகோதரிகளிடத்திலும் லாசருவிடத்திலும் அன்பாய் இருந்தார். இந்த லாசரு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். அப்பொழுது அவனுடைய சகோதரிகள் இயேசுவினிடத்தில் ஆளனுப்பி 'நீர் சினேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான், வந்து சுக மாக்கும்' என்று வேண்டினார்கள்.

    இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது லாசரு இறந்து, உடல் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. மார்த்தாளும், மரியாளும் இயேசுவினிடத்தில் வந்து, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் மரித்து இருக்கமாட்டான்" என்று கூறி சத்தமிட்டு அழுதார்கள். அவளோடு கூட இருந்த உறவினர்களும் அழுதார்கள், இயேசுவும் கண்ணீர் விட்டார்.

    உடனே இயேசு கல்லறைக்குச் சென்று ''கல்லை எடுத்துப் போடுங்கள்'' என்றார். மரித்தவனுடைய சகோதரிகள் "ஆண்டவரே நாலு நாள் ஆயிற்று நாறுமே" என்றார்கள்.

    இயேசு அவளை நோக்கி "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" என்றார்.

    கல்லறையின் கல்லை எடுத்தார்கள், பின்பு "லாசருவே வெளியே வா" என்று உரத்த சத்தமாய் இயேசு கூப்பிட்டார்.

    மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். எல்லோரும் மிகவும் களிகூர்ந்து, மகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். கவலையான சூழ்நிலை, சந்தோசமாக, குதூகலமாக மாறியது.

    இன்றைக்கு நாமும் வாழ்க்கையில் எல்லாமே இழந்து விட்டோம், இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்று கண்ணீரோடு, கவலையுடன் நிற்கும்போது இறைமகன் இயேசுவிடம் கையேந்தினால் நிச்சயம் நம் வாழ்வும் சந்தோஷமாக மாறும்.

    இயேசு சொல்கிறார், "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்". (மத்தேயு 6:27, லூக்கா 12:25).

    ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள். அவை விதைக்கிறதுமில்லை, நடுகிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால் அவைகளையும் பரமபிதா எந்த குறைவுமின்றி நடத்துகிறார்.

    காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள். அவை நெய்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. ஆனாலும் அவைகளின் இலைகள், மலர்கள் எவ்வளவு அழகாக மகிமையாக உள்ளது.

    இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல் போகும் பறவைகள், செடிகளுக்கு தேவன் இவ்வளவு சிறந்ததை தரும் போது அவருடைய சாயலாக உள்ள நமக்கு எல்லாமே நிறைவாக தருவார்.

    ஆகவே நாம், நம்முடைய முயற்சியை மட்டும் சரியாக செய்து விட்டு எல்லா கவலைகளையும், வேதனைகளையும், துக்கங்களையும், கண்ணீரையும் இறைவன் மீது வைத்து விடுவோம். மரித்து நான்கு நாளான லாசருவின் சரீரத்தை உயிரோடு எழுப்பிய இயேசு, நிச்சயமாக நம்முடைய வாழ்விலும் உள்ள கண்ணீர், கவலை, துக்கத்தை நீக்கி, நம்மை சந்தோஷமாக மாற்றி ஆனந்த கிரீடத்தை தருவார்.

    நெல்லை மானேக்சா.

    • விவிலியத்திலுள்ள வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு நிபந்தனையுடன் தான் வருகின்றன.
    • வசனங்களை முழுமையாய்ப் படித்து புரிந்து கொள்வோம்.

    இன்சூரன்ஸ் வாங்கும்போது அதில் பளபளப்பான, வசீகரமான வாக்குறுதிகள் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். விற்பனை செய்யும் நிறுவனமும் அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை மூளைச் சலவை செய்யும். விண்ணப்பத்தின் கடைசியில் நட்சத்திரக் குறியிட்டு, 'சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது' என நிறைய விஷயங்களைப் போட்டிருப்பார்கள். அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

    ஒரு தேவைக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகும் போது அவர்கள் அந்த வசீகரக் கொட்டை எழுத்துத் தகவல்களைக் கண்டு கொள்வதில்லை, அந்த நட்சத்திரக் குறியிட்ட சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்பதையே பார்ப்பார்கள்.

    'சாரி... உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது, ஏன்னா நீங்க இதைச் செய்யல. அல்லது இதை தப்பா செஞ்சுட்டீங்க' என மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போட்டு நம்மை அதிர்ச்சியடையச் செய்வார்கள்.

    அப்படித் தான் பல வசனங்களை கிறிஸ்தவர்கள் இன்று பயன்படுத்துகிறார்கள். "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்" எனும் பிரபல வசனம் ஒன்று உண்டு. போட்டோக்களிலும், காலண்டர்களிலும் அதை எங்கும் காணலாம். அதை வீட்டின் வரவேற்பறையில் தொங்க விட்டுக்கொண்டு, 'நம்ம வாழ்க்கை இனிமேல் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல் இருக்கும்' என நினைத்துக் கொள்பவர்கள் எக்கச்சக்கம்.

    உண்மையில் இது பாதி வசனம் தான், இதன் முழுமையான வசனம் அதற்கு முன் வருகிறது. நட்சத்திரக் குறியிட்ட சட்ட திட்டங்களைப் போல.

    "பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால் நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்…" என்பதே முழுமையான வசனம்.

    நாம் செய்ய வேண்டியதை வசதியாக உதறிவிட்டு, கடவுள் ஆசி வழங்குவார் என நம்புகிறோம். அழகான அட்டைகளில் பாதி வசனங்களை மட்டும் எழுதி வரவேற்பு அறையில் தொங்கவிட்டு ஓய்வு எடுக்கும் போது அது 'பயனற்ற வழிபாட்டுக்கு இணையான செயலாக' மாறிவிடுகிறது.

    வெறுமனே பிரியாணி, பிரியாணி என வாசித்துக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுவதில்லை. நல்ல சிலிர்ப்பூட்டும் வசனங்களை அரைகுறையாய் வாசித்துக் கொண்டே இருப்பதால் வாழ்வு மலர்ந்து விடுவதில்லை. இதை மனதில் கொள்ளவேண்டும்.

    ஆறுதலான மகிழ்ச்சியான வசனங்களை அடிக்கடி பார்ப்பதும், படிப்பதும் நல்லது தான், ஆனால் அந்த வசனங்கள் உண்மையிலேயே நமது வாழ்க்கையில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதையே கவனிக்க வேண்டும்?

    "35 மதிப்பெண்கள் வாங்கினால் நீ பாசாவாய்". இப்படி ஒரு அறிவிப்பு பள்ளிக்கூட பலகையில் எழுதப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதை மாணவர்கள் பார்க்கின்றனர். ஒருவன் குறைந்த பட்சம் 35 மார்க் வாங்க வேண்டும் என மனதில் எழுதிக்கொள்கிறான். அதற்காக உழைக்கிறான்.

    இன்னொருவனோ கடைசி இரண்டு வார்த்தைகளான, "நீ பாசாவாய்" எனும் வார்த்தைகளை மனதில் எழுதுகிறான். திரும்பத்திரும்ப அதையே மனதில் சொல்லிக் கொள்கிறான். ஆனால் படிக்கவில்லை. கடைசியில் யார் வெற்றியடைவார்? யார் தோல்வியடைவார்? என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    விவிலியத்திலுள்ள வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு நிபந்தனையுடன் தான் வருகின்றன. அதை அறிந்தும் அறியாதது போல நாம் நடந்து கொள்வதும், எல்லாம் நடக்கும் என மூட நம்பிக்கை கொள்வதும் வேடிக்கை தான்.

    உதாரணமாக, "கர்த்தரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்" எனும் வசனத்தை பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். பல விஷயங்களை நாம் நமது விருப்பப்படி ஆரம்பித்து விட்டு, "கர்த்தரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்" என நம்பிக்கொள்கிறோம்.

    சங்கீதம் 37:5 சொல்வது இதைத் தான்: "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்".

    திருவிவிலியம் இதை "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்" என்கிறது.

    அதாவது இரண்டு விஷயங்களை நாம் செய்தால் தான் கடவுள் அந்த செயலை நிகழ்த்திக் காட்டுவார். ஒன்று, நமது வழியை ஆண்டவரிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது, அவரையே நம்பியிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று பிழைத்தாலும் அது நடைபெறாது.

    கடவுளிடம் வழியை ஒப்படைக்கிறோம், ஆனால் நம்பவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். "உன் விசுவாசத்தின் படியே உனக்கு ஆகட்டும்" என கடவுள் சொல்லி விடுவார்.

    கடவுளிடம் வழியை ஒப்படைக்காமல், அவரை நம்புகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். "விதைக்காத இடத்தில் அறுவடை செய்ய முயல்வதைப் போல" அது முடிந்து விடும்.

    எனவே, அரைகுறை வசனங்களைப் பேசி நம்மை துண்டிவிடுபவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்போம். வசனங்களை முழுமையாய்ப் படித்து புரிந்து கொள்வோம். எந்த ஒரு ஆசீர்வாதத்தைப் பெறவும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவோம். இறைவனின் வழியில் நிலைத்திருப்போம்.

    சேவியர், சென்னை.

    • உன் முழு இருதயம், முழு ஆன்மா, முழு உள்ளத்தோடு கடவுளுக்கு அன்பு செய்.
    • மனிதனை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வதற்கு சமம் என்று சொன்ன இயேசு,

    ஒரு முறை திருச்சட்ட நூல்களைக் கரைத்துக் குடித்திருந்த ஒருவர் இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "திருச்சட்ட நூலிலேயே தலை சிறந்த கட்டளை எது?". பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பார்த்தால் 613 கட்டளைகள் உண்டு. யூதர்களைப் பொறுத்தவரை இவை எல்லாமே மிக முக்கியமானவை, கடைபிடிக்கப்பட வேண்டியவை. இயேசு என்ன சொல்லப் போகிறார்?, அவர் ஒன்றைச் சொன்னால் இன்னொன்றைச் சொல்லி அவரை மடக்கலாம் என அவர்கள் காத்திருந்தார்கள்.

    இயேசு அமைதியாய்ச் சொன்னார்: "திருச்சட்டத்திலுள்ள அத்தனை கட்டளைகளையும் இரண்டே இரண்டு கட்டளைகளில் அடக்கி விடலாம். உன் முழு இருதயம், முழு ஆன்மா, முழு உள்ளத்தோடு கடவுளுக்கு அன்பு செய். உன் மீது நீ அன்பு செய்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய். எல்லா கட்டளைகளுக்கும் அடிப்படை இவை தான்" என்றார். கிறிஸ்தவத்தின் தலையாய கட்டளைகள் இவை தான். "கடவுளை நேசி, மனிதனை நேசி". இன்னொரு இடத்தில் இயேசு சொல்வார்: 'கண்ணில் காணும் மனிதனை அன்பு செய்யாமல், கண்ணில் காணாத கடவுளை அன்பு செய்யவே முடியாது' என்று.

    இதில் மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால், 'மனிதனை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வதற்கு சமம்' என்று சொன்ன இயேசு, 'கடவுளை அன்பு செய்வது மனிதனை அன்பு செய்வது போல', என சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாய்ச் சிந்தித்தால் உண்மையான அன்பு உள்ளத்தில் நிறைந்திருந்தால், நமது செயல்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தால் அதுவே மிகச் சிறந்த கிறிஸ்தவ வாழ்வு என்கிறார் இயேசு.

    நற்செய்தியை அறிவிப்பதையோ, ஆராதனைகளை நடத்துவதையோ, போதனைகள் செய்வதையோ, ஏன் விசுவாசத்தையோ கூட இயேசு முன்னிலைப்படுத்தவில்லை. அன்பை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார். அன்புக்கு முன்னால் சாதீய, இன வேறுபாடுகள் அடிபட்டுப் போகின்றன. மத, திருச்சபை நிகழ்வுகள் பின் வரிசைக்குச் சென்று விடுகின்றன. என்பதை எல்லாம் 'யார் அயலான்' எனும் கதையில் இயேசு விளக்குகிறார்.

    எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. விண்ணகத்திற்கான நுழைவுச் சீட்டும் அன்பின் செயல்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு மிக ஆழமாகப் பதிவு செய்கிறார். கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் அன்பின் செயல்களைச் செய்து, அன்பின் வடிவமாய் மாறும்போது தான் நாம் இறை சாயலை அணிந்து கொள்கிறோம். நமது சொல், செயல், சிந்தனை எல்லாமே அன்பை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். கட்டளையைப் புரிந்து கொள்வோம். அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்.

    ×