search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State school volleyball"

    மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் பாரதியார் (ஆத்தூர்) அணி, செயின்ட் மேரிஸ் (சேலம்) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் பாரதியார் (ஆத்தூர்) அணி 25-9, 25-18, 25-16 என்ற நேர்செட்டில் செயின்ட் மேரிஸ் (சேலம்) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    3-வது இடத்தை ரோட்லர் (சென்னை) அணியும், 4-வது இடத்தை ஜேப்பியார் (சென்னை) அணியும் பெற்றன. ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் என்.ஜி.என்.ஜி. (பொள்ளாச்சி) அணி 25-20, 26-24, 25-17 என்ற நேர்செட்டில் காஜா மியான் (திருச்சி) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வேலம்மாள் (சென்னை) அணி 25-11, 25-23 என்ற நேர்செட்டில் சபர்பன் (கோவை) அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சிறந்த வீரர் விருதுக்கு நந்தகோபால் (என்.ஜி.என்.ஜி.), பாலகுமார் (வேலம்மாள்), ரிஜித் கண்ணா (என்.ஜி.என்.ஜி.) கோகுல் (காஜாமியான்), செல்வகணபதி (சபர்பன்) ஆகியோரும், சிறந்த வீராங்கனை விருதுக்கு எழில்மதி (பாரதியார்), ஜீவஜோதி (பிரசிடென்சி), சுவீனா (பாரதியார்), பிரியா (செயின்ட் மேரிஸ்), அனுப்பிரியா (ரோட்லர்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு விருதுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    அத்துடன் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையுடன், பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவுக்கு சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாவட்ட கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன், ரத்னா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு கைப்பந்து சங்க துணைசேர்மன் பி.பாலச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் டி.வசீகரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள். சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 
    மாநில பள்ளி கைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவுக்கான தொடக்க ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்றது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் வருமான வரி கூடுதல் கமிஷனர் ஏ.சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார். செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழும நிர்வாக இயக்குனர் பி.பாபு மனோகரன், இயக்குனர் வி.சசிசேகர், சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 21 அணிகளும் பங்கேற்றுள்ளன.

    நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ் (சென்னை) அணி 25-14, 25-14 என்ற நேர்செட்டில் எஸ்.பி.ஓ.ஏ. அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வேலம்மாள் (சென்னை) அணி 25-12, 25-9 என்ற நேர்செட்டில் அயனாவரம் மேல் நிலைப்பள்ளி (சென்னை) அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் எம்.சி.டி.எம். (சென்னை) அணி 25-12, 25-23 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜார்ஜ் அணியை சாய்த்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லேடி சிவசாமி (சென்னை) அணி 25-8, 25-7 என்ற நேர்செட்டில் மெட்ராஸ் சேவாசதன் அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் மகரிஷி வித்யாலயா அணி 25-18, 25-6 என்ற நேர்செட்டில் பிரான்சிஸ் சேவியர் (சென்னை) அணியையும், சத்ரியா (விருதுநகர்) அணி 25-19, 25-27, 25-8 என்ற செட் கணக்கில் குண்டூர் சுப்பையா (சென்னை) அணியையும் வீழ்த்தின. #tamilnews
    ×