search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajini kanth"

    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    ரஜினி - கமல்

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

    சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.

    என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார்.


    அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வி‌ஷத்தன்மைக் கொண்ட பாம்பை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான் என திருமாவளவன் கூறியுள்ளார். #BJP #Thirumavalavan
    திருவள்ளூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற் குழு கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது.

    சனாதன என்பது நவீன காலத்துக்கு பொருந்தாத இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடு. அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்தை காப்போம் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.

    இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சிலை அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை.

    அதே நேரத்தில் மகாத்மா காந்திக்கு சிலை அமைக்காமல் பட்டேலுக்கு உயரமான சிலை அமைப்பது ஏற்புடையதல்ல. பட்டேலுக்கு அமைத்த சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலை என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் காந்தியடிகளுக்கு மாற்றாக பட்டேலை பாஜக தூக்கி நிறுத்தியுள்ளது ஏற்புடையதல்ல.

    நடிகர் ரஜினிகாந்திடம் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு, அவர் ஆமாம், இல்லை என்ற பதில் கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து 10 கட்சிகளை தனியாக எதிர்த்து நிற்கும் கட்சி என்பதால் பலமான கட்சி என ஒரு சம்மந்தமில்லாத பதிலை கூறியுள்ளார்.

    பாம்பு வி‌ஷத்தன்மைக் கொண்டது. அதை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான்.அதற்கான பதிலை ரஜினி காந்த் நேரடியாக கூற வேண்டும்.



    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்து தீர்மானித்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் எப்போது நடந்தாலும், அதை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள், தி.மு.க. இடது சாரிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியினர் தயாராக உள்ளோம். எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    திருச்சி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட பல மாநில தலைவர்களை அழைத்துள்ளோம். அவர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Thirumavalavan
    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.

    அ.ம.மு.க. சார்பில் அத்தொகுதிகளில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இதனையும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் காரணம் தேடி தேர்தலை நிறுத்த முயன்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் வென்றாலே போதும் என பேசுகின்றனர்.


    தமிழகத்தில் 234 தொகுகளிலும் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயந்து வருகிறது.

    கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    ரஜினி காந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #JAnbazhagan
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தி.மு.க. ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி விமர்சித்துள்ளாரே?

    பதில்:- இப்போது தி.மு.க. 8 ஆண்டாக எதிர்க்கட்சியாக உள்ளது. நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது உள்ளதைவிட எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் அதிகமாக உழைக்கிறோம்.

    ஆனால் அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் வேகமாக செயல்படுவார்கள். உதாரணத்துக்கு 1996-ல் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றபோது தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 1,500 பேர் தான் கைதாகி சிறை சென்றனர்.

    நிறைய கம்பெனிகளை எடப்பாடி பழனிசாமியின் சொந்தக்காரர்கள் நடத்துவதால் அவருக்கு கம்பெனி நினைப்பு வருகிறது. கூவத்தூரில் நடந்த நிகழ்ச்சி இதற்கு ஒரு சான்று.

    கேள்வி:- தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளதாக பலர் குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:- அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது ஓ.பி.எஸ். மகன் அரசியலுக்கு வந்துள்ளாரே?

    தி.மு.க.வில் கலைஞருக்கு 4 மகன்கள். இதில் மு.க. ஸ்டாலின் மட்டுமே அரசியலில் பிரகாசிக்க முடிகிறது. காரணம் அவரது உழைப்பு, தியாகம், தொண்டர்களுடன் நெருங்கி பழகும் தன்மை, பொதுமக்களிடம் பரீட்சயம். இதை யார் செய்து முன்னுக்கு வருகிறார்களோ அவர்கள் மக்களால் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

    தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்றால் கலைஞரின் மற்ற 3 மகன்கள் அரசியலில் வர முடியவில்லையே. உதயநிதியை பற்றி கேட்கிறீர்கள். கமல், ரஜினி அரசியலுக்கு வரும் போது கலைத்துறையில் உள்ள உதயநிதி வருவது தவறல்ல.

    என்னை பொறுத்தவரை வாரிசையும் தாண்டி உழைத்தால்தான் தொண்டர்கள் அவர்களை முன் நிறுத்துவார்கள். நான் கூட வாரிசுதான். என் அப்பா பழக்கடை ஜெயராமன் தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்தவர். கலைஞரோடு நெருக்கமாக இருந்தார். நான் படிப்படியாக கட்சியில் உழைத்து உயர்ந்து மாவட்ட செயலாளர் வரை வந்துள்ளேன். தொண்டர்கள்தான் என்னை முன் நிறுத்தினார்கள்.

    கேள்வி:- கமல், ரஜினி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    பதில்:- கமல் அரசியலுக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கு அடிமட்ட பூத் கமிட்டி அளவில் ஆட்கள் கிடையாது. மேல்மட்ட அளவில் அவர் சென்றால் நடிகனாக மக்கள் பார்க்கிறார்கள்.


    ரஜினி அரசியல் பிரவேசம் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு சினிமா படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவராமல் போனால் அந்த படம் ‘பிளாப்’ ஆகி விடுகிறது. அதுபோல்தான் ரஜினியின் அரசியல். 1996-ல் இருந்து அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வந்தவர். இப்போது கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வேகமாக வருவதாக கூறினார்.

    இப்போது ரசிகர்களை குடும்ப வேலையை பாருங்கள். பணம் பதவியை எதிர் பார்த்து வராதீர்கள் என்று கூறி உள்ளார். எனக்கு தெரிய அவர் அரசியலுக்கு வர விருப்பப்பட மாட்டார் என்றுதான் தெரிகிறது.

    கேள்வி:- கூட்டணி அமைப்பதில் கலைஞர் வல்லவர். ஆனால் மு.க. ஸ்டாலின் அதில் அந்த அளவு இல்லை என்கிறார்களே?

    பதில்:- 2011-ல் இருந்து தி.மு.க. தோற்று வருவதை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்? அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் முன் வைக்கப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சனை. அதில் நாங்கள் காங்கிரசை விட்டு வெளியே வந்து நின்றோம். அதனால் தோல்வி.

    2016-ல் நல்ல கூட்டணிதான் அப்போது 3-வது அணி ஓட்டுகளை பிரித்ததால் அ.தி.மு.க. சிறிது வித்தியாசத்தில்தான் ஜெயித்தது. தி.மு.க. 98 இடங்களை கைப்பற்றியது. வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வலுவான கூட்டணி அமைப்பார். மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெறும்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்ததில் உங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறுகிறார்களே?

    பதில்:- அப்படி எதுவும் இல்லை.

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் பனியன் அணிந்து தொகுதிக்கு செல்வதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நீங்கள் பேசியதாக கூறப்படுகிறதே?

    பதில்:- பேசாத வி‌ஷயத்தை பேசியதாக கூறினால் எப்படி? அறைக்குள் நடந்ததை இங்கே கேட்காதீர்கள். அப்படி நான் எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #JAnbazhagan
    புதிய அரசியல் கட்சியை விரைவில் அறிவிக்க உள்ள ரஜினிகாந்த் கட்சிக்கான தொலைக்காட்சி, நாளிதழுடன் கொடி சின்னம் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்றத்தை பலப்படுத்தும் பணிகளில் இறங்கினார்.

    அரசியலில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்காமல் சினிமாவில் கவனம் செலுத்துகிறாரே என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விரைவில் சில அறிவிப்புகள் வர இருக்கின்றன. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பகிர்ந்த தகவல்கள்...

    ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு முழுக்க பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.

    சில இடங்களில் இந்த 30 பேர் இலக்கை எட்ட முடியவில்லை. சில இடங்களில் பொய்க்கணக்கு காட்டி இருந்தார்கள். இவர்கள் மீதுதான் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ரஜினி பூத் கமிட்டி வி‌ஷயத்தில் அதிக கவனம் காட்டுகிறார். ஒவ்வொரு தெருவிலும் ரஜினி மக்கள் மன்றம் இருக்க வேண்டும் என்று தனது அரசியல் வியூகத்தை அறிவித்த ரஜினிகாந்த், பூத் கமிட்டி என்பதை பலமிக்க கட்சி அமைப்பாகவே கருதியுள்ளார்.

    வாக்குச்சாவடி அளவில் அதிகாரப்பூர்வமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கட்சி மற்றும் ஆட்சி சார்ந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும்.

    மக்களோடு மக்களாக இருந்து, அவர் சொன்னதைப் போல் ‘காவலர்களாக’ கண்காணிக்கும் பொறுப்பு. பல மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் பூத் கமிட்டி நியமனங்கள் முடிந்துள்ளது. மேலும் சில மாவட்டங்களில் இன்னும் தொடர்கிறது.

    இப்போது ரஜினி காந்தைப் பார்த்து மு.க.ஸ்டாலினும் திமுகவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல தினகரனும் தனது கட்சியை பலப்படுத்த பூத் கமிட்டிகள் அமைத்து வருகிறார்.

    ரஜினிகாந்த் சில வி‌ஷயங்களை ரகசியமாக திட்டமிட்டு வருகிறார். அது உறுதியானதும் விரைவில் அறிவிப்புகள் இருக்கும். முக்கியமாக கட்சிக்கு தனியாக சேனல் (டி.வி.) இருக்கவேண்டும். பத்திரிகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமாக சேனல் ஒன்று இருக்கிறது. பெரிதாக பிரபலமாகாத அந்த சேனலை ரஜினி கையிலெடுத்து தனது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சிக்கு தனியாக பத்திரிகை தொடங்கும் திட்டமும் உள்ளது.

    ரஜினி மன்ற நிர்வாகிகள் வி‌ஷயத்தில் அடிக்கடி மாற்றங்கள் நடப்பதால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைய இருக்கிறது. அந்த படப்பிடிப்பு முடிந்த உடன் ரஜினி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்.

    திமுக, அதிமுக கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அவர் கவனித்து வருகிறார். ரஜினி தான் எதிர்பார்த்த சூழ்நிலை அமைந்து வருவதாக நம்புகிறார். எனவே இன்னும் சில வாரங்களில் கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது. கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி மன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சின்ன புகார் என்றாலும் எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப்படுகிறார்கள். இது அப்படியே ஜெயலலிதாவின் நடவடிக்கையை போல் உள்ளது. எனவே கட்சி தொடங்கிய பின்னரும் கூட ரஜினி நிர்வாகிகளிடம் இதே கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டீசர் ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவரும் என்று தகவல் வெளியானதால் அன்றைய தினத்தை ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

    ஆனால் ஆகஸ்டு 15-ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை-வெள்ளம் என இப்போது தெரிய வந்துள்ளது. “கேரள மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது,” என்று இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணிகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

    தலைவர்கள் மறைவால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளே கூட்டணி விசயத்தில் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த நிலையில் சிறிய கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது? என்ன முடிவெடுப்பது? என்ற பெருங் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளன.

    முதல் முறையாக கடந்த முறை தேர்தல்களத்தை சந்தித்த த.மா.கா.வுக்கு அந்த தேர்தல் ஒரு அக்கினி பரீட்சையாகவே அமைந்தது.

    கடைசி நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் சேரும் முடிவை ஜி.கே.வாசன் எடுத்தார். அந்த முடிவு மிகப்பெரிய சறுக்கலாகவே அமைந்தது.

    எனவே வருகிற தேர்தலில் மிகவும் ஜாக்கிரதையாகவே கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பார் என்று அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

     


    ரஜினி, கமல் இருவரது அரசியல் பிரவேசமும் அரசியல் கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.

    ரஜினியுடன் த.மா.கா.வை சேர்க்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜி.கே.வாசனுடன் நட்பு வைத்துள்ளார். 26-ந்தேதி நெல்லையில் நடைபெறும் கருணாநிதி புகழ்வணக்க கூட்டத்துக்கு ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரும் கலந்துகொள்கிறார்.

    இந்த நெருக்கம் கூட்டணிக்கும் கைகொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுபற்றி ஜி.கே.வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இவை எல்லாமே யூகங்களான தகவல்கள் தான். யூகங்கள் மட்டுமே கூட்டணியை உருவாக்கி விடாது.

    ரஜினி அரசியலுக்கு வருவதாக செய்திகள்தான் வருகிறது. ஆனால் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? என்று எதையும் அறிவிக்கவில்லை. வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள் தான்.

    கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யவேண்டியது. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. எனவே அதுபற்றிய சிந்தனையும் இல்லை. யோசிக்கவும் இல்லை. சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சியை பலப்படுத்தும் பணியைதான் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம்.

    வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது. மக்கள் மனநிலையும், தொண்டர்களின் உணர்வையும் அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வோம் என்றார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஒன்றை சொல்கிறேன்.

    மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நான் (தம்பித்துரை) ஆகிய 3 பேரும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதை இல்லையென யாராவது சொல்ல முடியுமா? தமிழக அரசின் சார்பில் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ? அது எல்லாம் கருணாநிதிக்கு செய்யப்பட்டது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? எனவே பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. புதைக்க இடம் கொடுக்காமலா? மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


    அண்ணா, எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்ட சிக்கல்கள் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்தார்கள். அதற்கு மேல் தமிழக அரசும் ஆட்சேபனை செய்யவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்.

    கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை கட்சியில் இருந்து தி.மு.க.வினர் நீக்கியதால் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    நடிகர் ரஜினிகாந்தின் 8 வழிச்சாலை குறித்த ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #ChennaiSalemExpressWay
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை கமல் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினியோ புதிய கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காமலேயே உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சியின் பெயரை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவை போல அரசியல் பயணத்திலும் இருவருக்கும் தனித்தனி பாதைகளில் பயணித்து வருகிறார்கள். 2 பேரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் நேர் எதிராகவே உள்ளன.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கமல் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை கூறிவரும் நிலையில் ரஜினியோ அந்த வி‌ஷயத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடங்கி சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் வரையில் ரஜினி-கமல் இருவரும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிக் கொள்கிறார்கள்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடிப்பதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று ரஜினி குற்றம் சாட்டியது பற்றி கருத்து தெரிவித்த கமல், போராடுபவர்கல் எல்லாம் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்று ஆவேசப்பட்டார்.

    தமிழக அரசின் மீது கமல் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியோ அதுபற்றி வாய்திறப்பதே இல்லை. அதற்கு மாறாக பாராட்டுக்களையே தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு கூட ரஜினி பதில் அளிக்கவில்லை.

    ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று வெளிப்படையாக பாராட்டினார். சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.

    விவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ரஜினி, 8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

    மத்திய அரசின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘‘சினிமா நடிகரான ரஜினிக்கு என்ன தெரியும்’’ என்று அவர் கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை குறித்த ரஜினியின் கருத்துக்கு கமலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த சாலையை ரஜினி வரவேற்பது பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது ரஜினியின் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.

    இதுதொடர்பாக கமல் அளித்த பேட்டியில், 8 வழிச்சாலையால் எங்கள் வாழ்க்கை தரம் தாமதப்பட்டு இருப்பதாக கூறி புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு வழிதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கிறன. இதைவிட குறைந்த செலவில் அந்த சாலைகளை விரைந்து முடிக்கவும் வழிகள் உள்ளன. 8 வழிச்சாலை பற்றி அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் கேட்பதில்லை என்றும் கூறினார்.

    எந்த வி‌ஷயமாக இருந்தாலும் இப்படித்தான், இதுதான் என்று மக்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கமல் கூறி இருக்கிறார். ரஜினிக்கு எதிரான கமலின் இந்த கருத்துக்கு 2 பேருக்கும் இடையேயான மோதலை மேலும் வலுவாக்கி உள்ளது. #ChennaiSalemExpressWay #KamalHaasan #Rajinikanth #MakkalNeedhiMaiam
    பள்ளிக்கல்வித்துறையை பாராட்டிய ரஜினிக்கு அரசின் சார்பில் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #Rajinikanth
    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ்.அகாடமி விரைவில் திறக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் இதை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதே போல சி.ஏ. படிப்பதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 மாணவர்கள் முதற்கட்டமாக சி.ஏ. எழுதுவதற்கும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு 12 புதிய பாடங்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். வரும்ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்ததும் அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களின் திறமைகள் உருவாக்கப்படுகின்றன.


    கே:- பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறாரே?

    ப:- அவருக்கு அரசின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே:- பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் எப்போது நடைபெறும்?

    ப:- இன்னும் 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Rajinikanth
    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி என்றும் அதில் தவறு இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சனை தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

    இதன் பிறகாவது கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் வீம்பு பிடிக்காமல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண முடியும் என்று கூறி வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இப்போது அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி நீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதன் பின்னர் குமாரசாமி, கமல் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவை விரும்புவதாகவும், தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார் என்றும் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

    அவருடன் இணைந்து பேட்டி அளித்த கமலும் 2 மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி பிரச்சனையை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பேச்சு எனதுஇதயத்தை நிரப்பி விட்டது என்றும் தெரிவித்தார்.

    கமலின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


    விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனும் கமலின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடு கமல் செயல்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் கமலின் இந்த முயற்சியை ரஜினி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி. அதில் தவறு இல்லை. பேச்சு தொடர வேண்டும். அவர்கள் ஒன்றும் எதிரி இல்லை. பெரிய பெரிய காரியங்கள் கூட பேசித்தான் தீர்க்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கி விட்டனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்க வைத்து அரசியலில் குதித்த ரஜினியும், என் பணி நடிப்பது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வந்து திடீரென அரசியல் களம் கண்ட கமலும் தனித்தனி பாதையில் பயணித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை குறி வைத்தே வெற்றிக் கோட்டையை பிடிக்க இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக தங்களது ரசிகர் பலத்துடன் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    ரஜினியோடு பல்வேறு வி‌ஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களையே கமல் கொண்டுள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியலில் தொடங்கி மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது வரையில் ரஜினியின் கருத்தோடு கமல் ஒத்துப்போகவே இல்லை. இருவரின் பார்வையும் வேறு மாதிரியே இருந்து வந்துள்ளது. மாணவர்கள் அரசியலில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜினி கூறிய கருத்துக்கு நேர்மாறாக கமலின் எண்ணம் இருந்தது. மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதுபோன்று பல்வேறு வி‌ஷயங்களில் இருவரின் கருத்துக்களும் முரண்பாடாகவே இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதே பிரச்சனைக்கு காரணம். போலீசாரை தாக்குவதை எதிர்ப்பேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்றும் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ரஜினியின் இந்த கருத்துக்கும் கமலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்று கூறிய கமல் தூத்துக்குடி போராட்டம் நல்ல பாதை என்றும், துப்பாக்கியே வந்தாலும் அதனை திறந்த மனதுடன் ஏற்கும் பக்குவத்தை தூத்துக்குடியில் பார்த்தோம்.

    தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினியின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அவர் கூறியது அவரது கருத்து. நான் மக்கள் பிரதிநிதியாகவே அவர்களது கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். மக்களிடம் கேட்டுதான் ஒட்டு மொத்த மக்களிடம் கருத்தாக நான் எதிரொலித்தேன். நானாக எந்த கருத்தையும் கூறவில்லை.

    போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது ரஜினியின் கருத்து. எனது கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததில்லை. அவர் இறந்த பிறகுதான் பிறந்தேன் போராட்டத்தின் தன்மை என்ன என்பதை காந்தியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து போராடுவது போராட்டம் அல்ல.

    போராட்டத்தில் வன்முறை இருந்தால் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்றும் கமல் தெரிவித்தார்.

    இதன் மூலம் ரஜினிக்கு எதிரான அரசியல் பயணத்தை கமல் ஒருபடி மேலே சென்று எதிர்க்க திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. அரசியலில் எதிராளிகளை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான பலவீனங்களை தங்களது பலமாக மாற்றிக்கொள்வதே வலு சேர்க்கும். அந்த வழியைத் தான் கமலும் பின்பற்றுகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் களத்தில் ரஜினி, கமல் ஆகிய 2 குதிரைகளும் போட்டி போட்டு வேகம் காட்டி வருகின்றன. இதில் முந்தப் போகும் குதிரை எது? கால் இடறி விழப்போகும் குதிரை எது? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். #KamalHaasan #Rajinikanth
    ×