search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியுடன் கூட்டணியா? - ஜி.கே.வாசன் பேட்டி
    X

    ரஜினியுடன் கூட்டணியா? - ஜி.கே.வாசன் பேட்டி

    வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணிகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

    தலைவர்கள் மறைவால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளே கூட்டணி விசயத்தில் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த நிலையில் சிறிய கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது? என்ன முடிவெடுப்பது? என்ற பெருங் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளன.

    முதல் முறையாக கடந்த முறை தேர்தல்களத்தை சந்தித்த த.மா.கா.வுக்கு அந்த தேர்தல் ஒரு அக்கினி பரீட்சையாகவே அமைந்தது.

    கடைசி நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் சேரும் முடிவை ஜி.கே.வாசன் எடுத்தார். அந்த முடிவு மிகப்பெரிய சறுக்கலாகவே அமைந்தது.

    எனவே வருகிற தேர்தலில் மிகவும் ஜாக்கிரதையாகவே கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பார் என்று அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

     


    ரஜினி, கமல் இருவரது அரசியல் பிரவேசமும் அரசியல் கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.

    ரஜினியுடன் த.மா.கா.வை சேர்க்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜி.கே.வாசனுடன் நட்பு வைத்துள்ளார். 26-ந்தேதி நெல்லையில் நடைபெறும் கருணாநிதி புகழ்வணக்க கூட்டத்துக்கு ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரும் கலந்துகொள்கிறார்.

    இந்த நெருக்கம் கூட்டணிக்கும் கைகொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுபற்றி ஜி.கே.வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இவை எல்லாமே யூகங்களான தகவல்கள் தான். யூகங்கள் மட்டுமே கூட்டணியை உருவாக்கி விடாது.

    ரஜினி அரசியலுக்கு வருவதாக செய்திகள்தான் வருகிறது. ஆனால் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறாரா? என்று எதையும் அறிவிக்கவில்லை. வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள் தான்.

    கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யவேண்டியது. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. எனவே அதுபற்றிய சிந்தனையும் இல்லை. யோசிக்கவும் இல்லை. சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சியை பலப்படுத்தும் பணியைதான் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம்.

    வருகிற தேர்தலில் த.மா.கா. கூட்டணி என்பது எந்த யூகத்தின் அடிப்படையிலும் அமையாது. மக்கள் மனநிலையும், தொண்டர்களின் உணர்வையும் அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வோம் என்றார்.

    Next Story
    ×