search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private hosptal"

    • ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்
    • கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்(வயது72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் கோவை மத்திய ஜெயியில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் கைதான–வர்களை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    தொடர்ந்து அவர்களிடம் கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலீசார் ஆஸ்பத்திரி விவகாரம் தொடர்பாக கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

    அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் போலீசார் மேலும் சிலரிடம் விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடம் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 5 பேரையும் மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

    ×