search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidney Stone"

    • அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது.
    • தற்போதைய சாதனையை கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம் உறுதி செய்தது.

    கொழும்பு:

    இலங்கையின் ராணுவ மருத்துவர்கள் குழு, உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுநீரக கல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உலக சாதனை படைத்திருக்கின்றனர். இதுவரை இந்திய மருத்துவர்கள் 2004ம் வருடம் அகற்றியிருந்த கல்தான் மிகப் பெரியதாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில், கொழும்புவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஒரு நோயாளிடமிருந்து அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது என ராணுவம் தெரிவித்துள்ளது.

    கின்னஸ் உலக சாதனை பட்டியலில், இதுவரை அகற்றப்பட்ட கற்களிலேயே, இந்தியாவில் 2004ம் வருடம் அகற்றப்பட்ட 13 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கல்தான் பெரியதாக பட்டியலிடப்பட்டிருந்தது. அதே போன்று, மிக அதிக எடையுள்ள கல் என 2008ம் வருடம் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் கல் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இலங்கையின் தற்போதைய சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த கேனிஸ்டஸ் கூங்கே என்பரின் சிறுநீரகத்திலிருந்து 13.372 சென்டிமீட்டர் (5.264 இஞ்ச்) உள்ள ஒரு சிறுநீரக கல், கடந்த 1-ம் தேதி அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் கே.சுதர்சன் தலைமையில், டாக்டர் பதிரத்னா மற்றும் டாக்டர் தமஷா பிரேமதிலகா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. சிறுநீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம்.
    சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற்கள் உருவாகலாம். ஆனால் சில நோய்கள் மற்றும் நிலைபாடு காரணமாக மருந்து எடுத்து கொள்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது, மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கால்சியத்தால் உருவானவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் உருவானவை. சிறுநீர் ஓட்டத்தின் அடைப்பும் கல் உருவாவதற்கு வழிவகுக்கும்.

    கீல்வாதம் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து யூரிக் அமில கற்கள் உருவாக்க வழிவகுக்கும். சிறுநீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களும் கற்கள் வளரும் ஆபத்து அதிகரித்துள்ளது.

    குடல் அழற்சி நோய் இருப்பவர்களுக்கு கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சிறுநீரக கற்கள் அதிகரிக்க ஆபத்து உள்ளது. 
    சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை தவிர்க்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுநீரக கல் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். அதோடு பழ ஜூஸ்வகைகள், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவைகளையும் பருக வேண்டும். அவை சிறுநீரக கல் உருவாகுவதை தவிர்க்க உதவும்.

    கால்சிய சத்து கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். கால்சிய உணவுகளை தவிர்க்கும்போது உடலில் ஆக்சலேட் எனும் உப்புச்சத்து அதிகரிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும். அதை தவிர்க்க சோயா பால், தயிர், பாதாம், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில் சாக்லேட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காபி, வேர்க்கடலை போன்றவற்றில் ஆக்சலேட் அதிகம் கலந்திருக்கும். ஆதலால் அவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, துளசி, மிளகாய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். புரத சத்து உடலுக்கு அவசியமானது. எனினும் புரதம் கலந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றில் அமிலத்தன்மையும், யூரிக் அமிலமும் அதிகம் சேர்ந்திருக்கும். அவை சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். ஆதலால் சிறுநீரக கற்கள் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்கள் மாட்டிறைச்சி, கோழி, மீன், பன்றி இறைச்சி போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
    சிறுநீரக கற்கள் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 சதவீதம் பேர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.

    சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெளியில் இருந்து வருவது. இது, உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணிகளை உள்ளடக்கியது. இன்னொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் பாதிப்பு கடத்தப்படுவது ஆகும்.

    போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக கோடை காலங்களில் வெளியில் செல்லும்போதும், அதிகபடியான வியர்வை ஏற்படும். அந்த சமயத்தில் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது மிக முக்கியம்.

    வெயிலில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயிகள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், திறந்தவெளியில் நடந்து செல்பவர்கள், வெயில் காலங்களில் தாகம் தீரும் வரை தண்ணீர் அருந்துவதும் மிக மிக முக்கியம். இருதயம் பலவீனமானவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது.

    ஏன் தண்ணீர் குடிப்பது முக்கியம் என்றால், சரியான அளவு குடிக்காவிட்டால் போதுமான சிறுநீர் வெளிவராது. அப்படியே வந்தாலும், சிறுநீர் மிகவும் இறுகிய திரவமாக வரும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    சிறுநீரில் அளவுக்கதிகமாக கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட், பாஸ்பேட் சத்துகள் வெளியேறும். அவற்றை திரவ வடிவில் கரைத்து சிறுநீரில் வெளியேற்ற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இல்லையென்றால், சிறுநீரில் வெளியேறும் கால்சியம், யூரிக் அமிலம், ஆக்சலேட் உப்புக்கள் திரவ தண்ணீரில் முழுமையாக கரைய முடியாமல் சிறுநீர் பாதையில் தங்கி படிந்துவிடும். பிறகு சிறுநீரக கல்லாக வளரும்.

    பொதுவாக, சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தினுள், சிறுநீர் சேகரமாகும் பையில், சிறுநீர் வரும் பாதையில் என 3 இடங்களில் வரலாம். ஒரு சிறுநீரகத்திலும் இந்த பாதிப்பு வரலாம் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீரகத்திலும் வரலாம். இவை பல்வேறு அளவுகளில், பல்வேறு வடிவங்களில் வரலாம்.



    சிறுநீரக கற்கள் மொத்தம் 5 வகைபடும். முதல் வகை கால்சியம் பாஸ்பேட் ஆக்சலேட் வகை கற்கள்.

    இந்த வகை கற்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக உருவாகிறது. சிறுநீரக கல் நோயாளிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த வகை கற்களால் தான் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான கால்சியம் சத்துகள் சிறுநீரில் வெளியாவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

    அதாவது, அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து மாத்திரைகள், அதிகமான வைட்டமின் டி மாத்திரைகள், ஸ்டாய்டு மருந்துகள் உண்பவர்கள், அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவோர், லிட்டர் கணக்கில் பால் அருந்துபவர்கள், கால்சியம் சத்து நிறைந்த தண்ணீரை கொதிக்க வைக்காமல் குடிப்பவர்கள் இந்த வகை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கற்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மறுபடியும், மறுபடியும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது. நாளடைவில் அவர்களுக்கு சிறுநீரக பாதையில் கற்களால் அடைப்பும், கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது.

    இத்தகைய கற்கள் உண்டாவதை தடுக்கும் சக்தி சிட்ரிக் அமிலத்துக்கு உண்டு. எலுமிச்சை, ஆரஞ்சு சாறு சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.

    இதற்கு அடுத்தபடியாக பாதிப்பை தரும் வரிசையில் யூரிக் ஆசிட் கற்களை சொல்லலாம். இந்த பாதிப்பை எக்சரே படம் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அல்ட்ரா ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடிக்க முடியும்.

    அசைவ பிரியர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் வரும். குறிப்பாக கல்லீரல், மூளைக்கறி எனக் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவோருக்கு யூரிக் ஆசிட் கற்கள் பாதிப்பு அபாயம் எந்த நேரமும் உண்டு. சில மருந்து, மாத்திரைகளாலும் யூரிக் ஆசிட் கற்கள் வரும். பரம்பரை நோயாக கூட சிலருக்கு இந்த பாதிப்பு வருகிறது.

    3-வது வகை ஆக்சலேட் கற்கள். உணவில் அதிகமாக தக்காளி, பசலைக் கீரை போன்ற சில வகை கீரைகளை அதிகம் சேர்ப்பது, சாக்லெட் சாப்பிடுவது, தேநீர் பருகுவது, முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிடுவது இந்த பாதிப்புக்கு வித்திடும்.



    4-வது வகை சிஸ்டீன் கற்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு இது. அல்லது பரம்பரையாகவும் வரலாம். பெரியவர்களுக்கு அரிதாக ஏற்படும்.

    5-வது வகை கற்கள் சிறுநீர் நோய் கிருமித் தாக்குதலால் வரும் இன்பெக்‌ஷன் ஸ்டோன். இது மிகவும் அபாயகரமான பாதிப்பு. ஏனெனில் இந்த பாதிப்பால் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. திரும்ப திரும்ப சிறுநீர் தொற்று வருபவர்களுக்கும் இந்த கற்கள் வரலாம். எனவே, சிறுநீர் தொற்று தானே என அலட்சியப்படுத்தக் கூடாது.

    சிறுநீரக கல் பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். கடுமையான வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டின் இரண்டு புறமும் வலி அல்லது ஒருபுறம் வலி, அடி வயிறு வலி, குறிப்பாக சிறுநீர் கழிக்க செல்லும்போது வலி ஏற்படுதல் போன்றவற்றை சொல்லலாம். சில நேரங்களில் சிறுநீர் ரத்தமாகவும் போகலாம்.

    சிறிய அளவிலான கற்கள் தானாகவே வெளியேறிவிடும். ஆனால், 8 மி.மீ. அளவுக்கு அதிகமான கற்கள் இருந்தால், தானாக வெளிவரும் வாய்ப்பு குறைவு. இதற்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சை தேவை.

    மேலும், ஒரு முறை சிறுநீரக கல் ஏற்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர்களுக்கு மீண்டும் கல் வராமல் பார்த்துக்கொள்ள முறையான கண்காணிப்பு சிகிச்சை, தொடர்ந்து சில மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.

    கல் வராமல் இருக்க அல்லது கல் வந்த பிறகும் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். அசைவ உணவுப் பிரியர்கள் அளவோடு இறைச்சிகளை உண்ண வேண்டும். மீன், முட்டை சாப்பிடலாம். லிட்டர் கணக்கில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு சேர்க்கக்கூடாது.

    சிறுநீர் கல் வராமல் இருக்க காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது, வெறும் தண்ணீராக மட்டுமின்றி, இளநீர், எலுமிச்சை சாறு, பழ ரசங்களாகவும் இருக்கலாம்.

    டாக்டர் சவுந்தரராஜன்,

    சிறுநீரக நிபுணர்
    ×