search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jesus"

    ‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.
    ‘அன்பின்றி அமையாது உலகு’ என்ற வாசகம் அனைவரும் அறிந்ததே. இவ்வுலகில் அன்பில்லை என்றால் வாழ்வதற்கு ஒரு சுவராசியமும் இருக்காது.

    ‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.

    உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அன்பின் வெளிப்பாடு இல்லையேல் ஒரு பயனும் இல்லை. அயலானிடம் இரக்கம் காட்டுபவன் தான் உண்மையான அன்புடையவன். அன்பின் வெளிப்பாடே இரக்கம். அதை நாம் அறிந்துகொள்ளவும் உணரவும் முடியும்.

    “இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்று அன்னை தெரசா தனது வார்த்தையின் படி வாழ்ந்து காட்டியவர். உலகமெங்கும் இரக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்தவர். மரணப் படுக்கையில் இருக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களை கட்டியணைத்து புன்னகை யோடு அவர்களுக்கு வேண்டியதை செய்தவர். இயேசுவின் வாழ்க்கையே, அன்னை தெரசாவுக்கு ஏழை பணி தான் தன் வாழ்வின் முதல் பணி என்று தேர்ந்தெடுக்க வைத்தது.

    நீதிமொழிகள் 21:21 வசனத்தில் “நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்” என சொல்லப்பட்டுள்ளது. தன்னை தான் தாழ்த்தி தன்னலம் துறந்து வாழும் மனிதனால் தான் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட முடியும். அதுவே உண்மையான இறைபணி.

    முதலாவதாக தயை உடையவர்கள் மற்றவர்களின் உணர்ச்சியை மதிப்பார்கள். வேதம் தெளிவாக சொல்கிறது “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரை சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்” (பிலிப்பியர் 2:4). தன்னலம் மறந்து பிறர் நலனுக்காக வாழும் வாழ்க்கையையே கடவுள் விரும்புகிறார்.

    குறைந்தபட்சம் நாம் சந்திக்கும் மக்களிடம் ஒரு புன்னகையாவது கொடுத்து விட்டுச் செல்லலாமே. நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லி சொந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட தயவாக பேச நேரம் செலவிட மக்கள் மறந்து விடுகிறார்கள். தினமும் வீட்டில் குடும்ப ஜெபமும் அன்றைய தினத்தை பற்றிய ஒரு சின்ன பகிர்தலும் இருப்பது மிகவும் நல்லது. அது குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்ப உதவும்.

    தயையுடையவர்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க தயங்க மாட்டார்கள். பல நேரங்களில் ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னாலே போதும், கவலையில் வாழும் மக்களுக்கு அந்த நிலையிலிருந்து மீண்டு வர அதுவே ஒரு வாய்ப்பாக அமையும். நம் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப உதவுகிறதா? இல்லை உடைத்து விழ செய்கிறதா என்று ஆராய வேண்டும்.

    நம் கடவுள் நமக்கு எப்போதும் ஆறுதலாக இருப்பவர். அவரை பின்பற்றும் நாமும் அதை போல தான் மற்றவர்களுக்கு ஆதரவாக வாழ வேண்டும்.

    2 சாமுவேல் 22:19 இப்படி கூறுகிறது: “என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்”.

    சற்று சிந்தித்து பார்ப்போம், கடைசியாக எப்போது பெற்றோரிடம் ஆறுதலாய்ப் பேசினோம்?, அவர்களுடைய தேவைகளை அவர்கள் கேட்கும் முன்பே நிறைவேற்றியிருக்கிறோமா?, நம்முடன் பணி புரிபவர்களின் துயரங்களைக் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? இல்லையேல் இனிமேலாவது நம் அயலாருக்கு ஆறுதலாக கர்த்தர் கற்பித்தபடி நடப்போமா?

    இரக்கமுள்ளவர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் வாழ்வார்கள். மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்து விட்டு அவருக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாக அறிந்தால் அப்படியே விட்டு விடுவதில்லை. நோயாளிக்கு வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யாமல் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதில்லை. எப்படியாவது அவரை குணப்படுத்த வேண்டும் என்று பிரயாசப்படுவார்.

    அதேபோல, நல்ல நண்பர்கள் சில சமயங்களில் நம் தீய செயல்களைக் கண்டு அப்படியே விட்டு விடாமல் கடிந்து கொள்வதுண்டு. அதுவும் இரக்கத்தின் வெளிப்பாடே.

    இரக்கம் என்பது எப்போதும் பணிந்து போவதல்ல, மாறாக தவறுகளை தட்டிக்கேட்டு திருத்துவது அதன் முக்கியமான சிறப்பம்சமாகும். உண்மையான நண்பன் நம் வாழ்வின் நன்மைக்காக ஏற்படுத்தும் காயங்கள் கூட நல்லது தான், ஒரு எதிரியின் முத்தத்தை விட.

    காலம் தாழ்த்தாமல் பிறருடைய தேவையை அறிந்து உடனே செயல்படுவதே முக்கியம். அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு. தாமதித்தால் அந்த வாய்ப்பு கைவிட்டு போகும். இப்படி நீங்கள் இழந்த வாய்ப்புக்கள் எத்தனை?

    இயேசு நம்மை பார்த்து பசியாயிருந்தேன் எனக்கு உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், தாகத்தை தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், ஏற்றுக்கொண்டீர்கள்; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக்கொண்டீர்கள் என்று சொல்லும்படியான ஒரு வாழ்க்கையை வாழ்வோம். எல்லோரையும் நேசிப்போம், இரக்கம் காட்டுவோம்.

    “இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்ற அன்னை தெரசாவின் வாழ்க்கை நமக்கு ஊக்கமூட்டட்டும்.

    துலீப் தாமஸ், சென்னை.
    தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.
    கண்களில் காண்பவைகளை எல்லாம் அனுபவிக்கும் தகுதியைப் பெறுவதும், நினைப்பதையெல்லாம் பெறக்கூடிய செல்வாக்கைப் பெற்று வாழ்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று பலரும் நினைக்கிறோம். தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.

    நாம் தேர்வு செய்துகொள்ளும் பாதைதான், நமது மற்றும் வாரிசுகளின் வாழ்க்கையில் இறைவன் அருளும் சமாதானத்தை அளி(ழி)ப்பதாக அமைகிறது.

    செல்வத்தை அடைந்தாலே மற்ற எந்த பிரச்சினைகளையும் சமாளித்துவிட முடியும் என்ற சிந்தனைதான், செல்வத்தை அடைய தீய வழிகளை நோக்கிச்செல்ல பாதை அமைத்துத் தருகிறது. இறைவனால் நிர்ணயித்துத் தரப்படும் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை மட்டுமே சிந்தித்து செயல்பட்டால், பிரச்சினைகளை வராமலேயே தவிர்த்துவிடலாம் என்பதுதான் வாழ்வியலின் சத்தியமாகும்.

    ஆனால் இந்த அடிப்படை சத்தியத்துக்கு முரணான போதனைகள்தான் செழிப்பை விரும்பும் பலரது சிந்தனைக்கு தீனி போட்டு தீயவழியில் நடக்கச் செய்கின்றன. இறைவனை வழிபடுவதற்கான வழிகளை பலரும் போதிக்கின்றனர்.

    மனிதன் கேட்டதையெல்லாம் இறைவன் கொடுத்துவிடுவாரா? அவற்றையெல்லாம் இறைவன் நமக்குக் கொடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பவை ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்விகள். இவற்றுக்கு யோவான்15:16-ம் வசனம் நேரடியாக பதிலளிக்கிறது. “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று இயேசு கூறியுள்ளார்.

    இந்த வசனத்தை பொருள் மாறாமல் சற்று விளக்கமாகச் சொன்னால், நமது பக்தி வாழ்க்கைக்குத் தேவையானது எது என்பதை முதலில் முடிவு செய்து, அதை இயேசுவின் மூலமாக பிதாவிடம் விண்ணப்பமாக வைக்க வேண்டும். அவர் கூறியுள்ளபடி கனி கொடுக்கும் வாழ்க்கையை வாழும்போது அதைப் பெறும் தகுதி கிடைக்கிறது.

    இந்த வசனத்தை மூன்றாகப் பிரித்து ஆராயலாம். முதலாவது, பிதாவைக் கேட்டுக்கொள்ளக்கூடியவை எவை? இரண்டாவது, அவற்றைப் பெறுவதற்காக வாழ்க்கையின் மூலம் கொடுக்க வேண்டிய கனிகள் எவை? மூன்றாவது, அந்தக் கனிகளை எப்படி, யாருக்குக் கொடுக்க வேண்டும்?

    வேதத்தில் பல சத்தியங்கள் மறைக்கப்பட்டதாயும், பல சத்தியங்களை சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மூலமாக அறியக் கூடியதாகவும் உள்ளன. இங்கு முதலாவது கேட்கப்பட்ட கேள்விக்கு வேதம் நேரடியான பதிலை தெளிவாக அளிக்கிறது. மத்.6:31-33-ம் வசனங்களில், “உண் பதையும், உடுப்பதையும் பற்றி கவலைப்படாமல், இறைவன் நம்மை ஆளும் படிக்கு நடந்துகொள்ள வேண்டிய அவரது நீதி என்னென்ன என்பதையே முதலில் தேடுங்கள்” என்று கூறுகிறது.

    அதாவது, வாழ்க்கையின் கடைசிவரை நல்ல உணவு கிடைப்பதற்காக நன்றாக சம்பாதிக்க வேண்டுமே; மற்றவர்கள் முன்பு நன்றாக உடுத்திக்காட்டுவதற்காக மிகுந்த செல்வாக்கை பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் அவற்றைத் தேடி ஓடினால், உலக பாவங்களில் விழுந்து நம்மையும், நமது வாரிசுகளின் வாழ்க்கையையும் பாழ்படுத்திவிட நேரிட்டுவிடும்.

    நமக்கு அமைந்துள்ள வாழ்க்கையில் நமது சம்பாத்தியம் சரியானதுதானா? நமது பேச்சில் உண்மையுள்ளதா? உள்நோக்கம் உள்ளதா? சிந்தனையிலும் பாவக்கறைகள் உள்ளதா? அடுத்தவரின் பொருளை அபகரித்து வைத்திருக்கிறோமா? என்றெல்லாம் சிந்தித்து, இறைநீதிக்கு உட்பட்ட செயல்பாடுகளைத் தேடித்தேடிச் செய்வதுதான் வாழ்வின் முழுமுதல் கடமையாகும் என்று அந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

    ஆக, இப்படிப்பட்ட அனைத்து காரியங்களிலும் இறைநீதிக்குட்பட்டு செயல்படாதபடி நாம் வாழ்ந்தோமானால், எங்கெல்லாம் தவறுகிறோமோ அங்கெல்லாம் செய்யப்பட வேண்டிய இறைநீதிதான், இறைவனிடம் நாம் கேட்க வேண்டியதாக உள்ளது என்பது முதல் கேள்விக்கான விடையாக அமைகிறது.

    இப்படி கேட்டதை இறைவன் கொடுக்க வேண்டுமானால், இயேசு கூறியபடி கனி கொடுத்தாக வேண்டும். அந்தக் கனிகள் எவை? மத்.3:8-ம் வசனம், ‘மனந்திரும்பு தலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்’ என்று உரைக்கிறது. அதாவது, சரீரத்தினால் செய்யப்படும் பாவங்கள், உள்ளத்தின் எண்ணங்களினால் செய்யப்படும் பாவங்கள், ஜென்ம சுபாவங்களினால் செய்யப்படும் பாவங்கள் ஆகியவற்றில் இருந்து மீண்டு, இயேசுவின் போதனைகளின்படி இறைப்பாதைக்கு திரும்பக்கூடிய மனந்திரும்புதல் என்பதுதான் முதல் கனியாகும்.

    இந்தக் கனியைக் கொடுத்தவனிடம் காணப்படும் மற்ற கனிகள் எவை என்பதை, கலா.5:22, எபே.5:9 ஆகிய வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாவது கேள்விக்கும் பதிலாக அது அமைகிறது. அதாவது, சாதி-மதம் பார்க்காமல் எல்லாரிடத்திலும் அன்புகாட்டுவது, எந்தப் பிரச்சினை வந்தாலும் சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமையாக இருப்பது, பகைப்பவனுக்கும் தயை காட்டுவது என பல நற்குணங்கள், கனி களாகக் கூறப்பட்டுள்ளன.

    இந்தக் கனிகளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற மூன்றாம் கேள்விக்கான பதிலை இயேசு நேரடியாகவே போதிக்கிறார். அதை மத்.5:39-44-ம் வசனங்களில் காணலாம். ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு; உன் வஸ்திரத்துக்காக வழக்காடுபவனுக்கு உன் அங்கியையும் சேர்த்துவிட்டுக்கொடு; கேட்பவன் எவனென்றாலும் அதை அவனுக்குக் கொடு; பகைப்பவனின் நன்மைக்காக ஜெபம் செய், என்றெல்லாம் பெரிய பட்டியலை, ஒவ்வொரு பக்தனும் வாழ்க்கையில் கொடுக்க வேண்டிய கனிகளாக இயேசு சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் நடத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்.

    ஆக, இப்படிப்பட்ட கனிகளை நம் வாழ்க்கையில் கொடுக்க முற்படும்போதுதான் யோவான்15:16-ம் வசனத்தில் கூறியபடி, நாம் கேட்டுக்கொண்டதை இறைவன் கொடுக்கிறார். அதோடு விட்டுவிடாமல், மத்.6:33-ல் சுட்டிக்காட்டியபடி, உலக காரியங்களையும் கூடுதல் ஆசீர்வாதமாக இறைவன் அளிப்பார்.

    எனவே தவறான போதனைகளில் சிக்கி, தேவையற்றதை இறைவனிடம் கேட்காமல், வேதம் கூறியபடி தகுதியுடன் அவரிடம் கேட்டு ஆசீர்வாதங்களைப் பெறுவோமாக.

    ஜெனட், சென்னை
    கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது.
    “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம். கிறிஸ்தவ ஆன்மிகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல்: திருப்பாடல்கள்.

    கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது. சொல்லப் போனால் ஆதிக்கிறிஸ்தவ போதகர்கள் திருப்பாடல்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து வைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்கிறது இறையியல் வரலாறு.

    மொத்தம் 150 பாடல்கள் கொண்ட இந்த நூலில் 2461 வசனங்களும், 43743 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன‌. உண்மையில் இது ஐந்து பாடல் புத்தகங்களின் தொகுப்பு. திருப் பாடல்கள் 41,72,89,106,150 ஆகியவையே ஒவ்வொரு நூலின் கடைசிப் பாடல்.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் சங்கமம் இது. தாவீதின் காலமான கி.மு. 1000-களில் பெரும்பான்மையான பாடல்கள் எழுதப்பட்டன. மோசேயின் காலமான கி.மு. 1300-ல் உள்ள பாடல்களும், கானானை விட்டு இஸ்ரேயலர்கள் வெளியேறி வாழ்ந்த கி.மு. 500-களின் பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

    திருப்பாடல்கள் இசைக்கும் போது நமது இதயத்தையே நாம் ஊடுருவிப் பார்க்கும் சிந்தனை எழுவது இதன் சிறப்பு. சர்வதேசத்துக்கும், சர்வகாலத்துக்கும் பொருந்தக் கூடியவகையில் திருப்பாடல்கள் இருப்பது உண்மையிலேயே வியப்பான விஷயம் தான்.

    எபிரேய மொழியில் இந்த நூல் ‘தெனிலிம்’ என அழைக்கப்படுகிறது. அதற்கு “புகழ்ச்சிப் பாடல்கள்” என்று பொருள். இந்த திருப்பாடல்களை இரண்டாக வகுக்க வேண்டுமெனில், “நான்” என தன்னை மையப் படுத்தி இறைவனைப் புகழும் தனிப்பட்ட பாடல்கள். “நாம்” என குழுவை மையப்படுத்தி இறைவனைப் புகழும் குழுப்பாடல்கள் என வகுக்கலாம்.

    உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருப்பாடல்கள் நிறையவே இந்த நூலில் உண்டு. “உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்” என்பது போன்ற வரிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. பண்டைய யூதர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. யாராவது இறந்து விட்டால், அவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பவர்கள் அதை ஒரு பாட்டிலில் சேமித்து தங்களது இரங்கலாக அனுப்பி வைப்பார்கள். அத்தகைய சமூகப் பழக்கங்கள் திருப்பாடல்களில் எதிரொலிப்பதை ஆங்காங்கே காணலாம்.

    கோபம், எரிச்சல், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளும், மகிழ்ச்சி, களிப்பு, ஆறுதல், நம்பிக்கை, சமாதானம் போன்ற நேர்மறை உணர்வுகளும் திருப்பாடல்களில் நிரம்பியிருக்கின்றன.

    இன்னொரு வகையில் திருப்பாடல்களைப் பிரிக்க வேண்டுமெனில் இறைஞ்சும் பாடல்கள், நன்றிப் பாடல்கள், வருந்தும் பாடல்கள் என பிரிக்கலாம். இதன் ஆன்மிகச் செழுமை காரணமாக மார்டின் லூதர் ‘இது பைபிளுக்கு உள்ளே உள்ள இன்னொரு பைபிள்” என்று குறிப்பிட்டார்.

    இந்த நூலின் மிகச்சிறிய அதிகாரம் 117. அதில் இரண்டே இரண்டு வசனங்கள் உள்ளன. மிகப்பெரிய பாடல் 119. அதில் 176 வசனங்கள் உள்ளன. பொதுவாக எபிரேயப் பாடல்கள் எல்லாமே சத்தமாய் பாடப்பட வேண்டிய பாடல்கள் தான். திருப்பாடல்களும் அதற்கு விதி விலக்கல்ல.

    இந்தத் திருப்பாடல்களில் 73 பாடல்களுக்கு மேல் தாவீது எழுதியிருக்கிறார். தாவீதைத் தவிர ஆஸாப் புதல்வர்கள் பன்னிரண்டு பாடல்கள், மோசே ஒரு பாடல், கோராவின் மகன்கள் பத்து பாடல்கள், ஹெர்மான் ஒரு பாடல், எசேக்கியா பத்து பாடல்கள், ஏதன் ஒரு பாடல், சாலமோன் இரண்டு பாடல்கள் என பங்களிப்பு செய்திருக்கின்றனர்.

    தாவீது மன்னனின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள இந்த பாடல்கள் உதவி புரிகின்றன. பத்சேபாவுடனான உறவுக்குப் பின் மனம் வருந்தி அவர் எழுதிய திருப்பாடல் 51 மிகப்பிரபலம். மொத்தம் பதினான்கு பாடல்கள் தாவீதின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.

    தற்போதைய பாடல்களைப் போலில்லாமல் திருப் பாடல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்படுத்தலாக இருப்பது சிறப்பு. பல பாடல்கள் குறிப்பிட்ட இறை சிந்தனையை நமக்கு விளக்குகின்றன. உதாரணமாக, ‘இறைவார்த்தையைப் படிக்க வேண்டும்’ எனும் சிந்தனையை திருப்பாடல் 119 பதிவு செய்கிறது, ஓய்வு நாளை கடைப்பிடிக்க வேண்டுமென திருப்பாடல் 92 வலியுறுத்துகிறது.

    இறைமகன் இயேசுவின் வாழ்க்கையை தீர்க்க தரிசனமாக உரைக்கும் பல பாடல்கள் திருப்பாடல்களில் உள்ளன‌. மனிதர்களால் இகழப்படுவார், ஆணிகளால் அறையப்படுவார், ஆடைகள் ஏலமிடப்படும், அவரது எலும்புகள் ஏதும் முறிபடாது என இயேசுவின் மரணத்தைக் குறித்தும் மிக விரிவாக இவை பேசு கின்றன.

    இறைவனைப் புகழவும், இறைவனோடு உள்ள உறவை வலுப்படுத்தவும் இன்றும் நமக்கு திருப்பாடல்கள் துணை செய்கின்றன. அற்புதமான இலக்கியச் சுவை, ஆழமான ஆன்மிகச் சுவை என திருப்பாடல்கள் நூல் வாசிக்கும் யாவரையும் வசீகரிக்கிறது.

    சேவியர்.
    திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது.
    திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும்.

    இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார். எட்டு அதிகாரங்களுடன், நூற்று பதினேழு வசனங்களுடன், இரண்டாயிரத்து அறுநூற்று அறுபத்து ஒன்று வார்த்தைகளுடன் அமைந்துள்ள அற்புதமான கவிதை நூல் இது. எட்டு அதிகாரங்களானாலும் இந்த நூலை 28 கவிதைகளின் தொகுப்பு என்கின்றனர் இறையியலார்கள்.

    விவிலியத்தில் 22 -வது நூலாக இது அமைந்துள்ளது. விவிலியத்தில் அமைந்துள்ள கவிதை நூல்களில் இது கடைசி நூல். இந்த நூலின் சாலமோன் மன்னனின் பெயர் ஏழு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு நூல்கள் பைபிளில் உண்டு. ஒன்று எஸ்தர், இன்னொன்று இந்த இனிமை மிகு பாடல்.

    ஒரு நாடகம் போல அமைந்துள்ள இந்தப் பாடலில் காதலே பிரதானம். இது கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையேயான உறவைச் சொல்லும் கவிதைகள் என சிலர் விளக்கம் தருகின்றனர். சிலரோ, பாலஸ்தீன நாட்டில் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட பாடல்கள் இவை என்கின்றனர். சிலர் இன்னும் பல வித்தியாசமான விளக்கங்களுடன் களமிறங்குகின்றனர்.

    ஆனால் இவை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முளைக்கின்ற காதலின் வரிகள் என்று சொல்வதே பொருத்தமானது. கிறிஸ்தவம் அன்பினால் கட்டமைக்கப்பட்டது. திருமணம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் அன்பும், காதலும் கசிந்துருகுதலும் இயல்பே. எனினும் இது சொல்லும் ஆன்மிகப் புரிதல்களை உள்வாங்கிக் கொள்ளுதல் அதிகம் பயன் தரும்.

    இந்தக் கவிதை நாவலை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன முன்னுரைக் கதையை விவிலிய அறிஞர் ஒருவர் தருகிறார். ஒரு ஏழை பெண் இருக்கிறார். அவள் மலை நாட்டில் திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்கிறாள். வசதியற்றவள் அவள். அவளுடைய குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை, வேலைக்காரியாய் நடத்துகிறார்கள்.

    அவளை ஒரு ஆட்டிடையன் காதலிக்கிறான். உண்மையில் அவன் தான் சாலமோன் மன்னன். அது அவளுக்குத் தெரியவில்லை. காதலில் கசிந்துருகுகின்றனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். திரும்பி வருவேன் என சொல்லிவிட்டு இடையன் சென்று விடுகிறான். நீண்ட நாட்களுக்கு மவுனம். காதலியின் இரவுகள் துயரம் கொள்கின்றன. பகல்கள் பரிதவிக்கின்றன.

    ஒருநாள் அவன் திரும்பி வருகிறான், அரசனாக. இவள் அதிர்ச்சியடைகிறாள். பல மனைவியரில் ஒருத்தியாக தான் இணைந்ததை அவள் புரிந்து கொள்கிறாள். அரசின் உயரிய இடம் அவளுக்குக் கிடைக்கிறது. ஆனாலும் அவளுக்கு நிம்மதியில்லை. மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்கு காதலனுடன் செல்ல ஆசைப்படுகிறாள்.

    இந்த கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு இந்தப் பாடலை வாசிக்கும் போது அது அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

    கிரேக்க இலக்கிய மரபும், கிரேக்கக் கலாசாரமும் உடலையும், ஆன்மாவையும் இரண்டாகப் பார்க்கிறது. இரண்டு விதமான வாழ்க்கையாகப் பார்க்கிறது.

    எபிரேய மரபு இரண்டுமே இறைவனின் படைப்பாக ஒன்றிணைந்த நிலையில் பார்க்கிறது. அந்த எபிரேயக் கலாசார மனநிலையில் இந்த நூலை வாசிப்பது அதிக புரிதலைத் தருகிறது.

    கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான அன்னியோன்ய உறவாக இந்த பாடலை பார்க்கலாம். இறைவன் திருச்சபையை மணப்பெண்ணாகப் பார்க்கும் விளக்கம் புதிய ஏற்பாட்டில் காணக்கிடைக்கிறது. கடவுள் இஸ்ரயேலை மணப்பெண்ணாகப் பார்க்கும் நிலை பழைய ஏற்பாட்டில் காணக்கிடைக்கிறது. அதுபோல கடவுள் மனிதனை மணப்பெண்ணாகப் பார்க்கும் வடிவம் இது எனக் கொள்ளலாம்.

    1005 காதல் பாடல்களை எழுதிய சாலமோன் மன்னனின் பாடல்களில் ஒன்று இது. மிக முக்கியமான பாடல் என்பதால் தான் இறைவன் இதைத் தேர்ந்தெடுத்து பைபிளில் இடம் பெறச் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

    கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஆலயம் செல்வதோ, பைபிள் வாசிப்பதோ, நற்செய்தி அறிவிப்பதோ அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனோடு ஒரு ஆழமான அன்புறவை கொண்டிருப்பது. அதைத் தான் இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது.

    இந்த நூலில் 15 நாடுகளைக் குறித்த செய்திகளும், இருபத்தோரு உணவுப் பொருட்களின் குறிப்புகளும், பதினைந்து விலங்குகளைக் குறித்த தகவல்களும் இருப்பதாய் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

    காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவது, ஆசை கொள்வது, துணையாய் இருப்பது, இன்பமாய் இருப்பது, இணைந்தே இருப்பது, பிரிந்து இருப்பது, நம்பிக்கையாய் இருப்பது, புகழ்வது என இந்தப் பாடல்கள் பல்வேறு உணர்வுகளைப் பதிவு செய்கின்றன.

    வியக்க வைக்கும் இந்த கவிதை நூல், நிச்சயம் தவற விடக் கூடாத நூல்.

    சேவியர்
    நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.
    விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு. திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு.

    இது கற்பனைக்கதையல்ல. காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறார். எசேக்கியேல் இறைவாக்கினர் தனது நூலில் மூன்று நீதிமான் களைப் பற்றி குறிப்பிடும்போது நோவா, தானியேல் மற்றும் யோபு என குறிப்பிடு கிறார். புதிய ஏற்பாட்டிலும் யோபுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது கற்பனை என சொல்பவர்கள் மனதில் நினைக்கும் காரணம் யோபுவின் வாழ்க்கையில் நடக்கின்ற அழிவுகள். தொடர்ச்சியாக அவரது கால்நடைகள், சொத்துகள், பிள்ளைகள் எல்லாரும் அழிகின்றனர்.

    எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார் போல் ஒரே ஒரு நபர் மட்டும் தப்பிப் பிழைக்கிறார். அதே போல கதாபாத்திரங்கள் எல்லாமே கவிதை நடையிலேயே பேசுகின்றன.

    இரண்டையும் கலந்து பார்த்தால் யோபு என்பவர் நிஜ மனிதர். ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒருவர் கற்பனை கலந்து கவிதை நூலாக வடித்திருக்கிறார் என ஒரு முடிவுக்கு வரலாம்.

    எபிரேயக் கவிதையான இந்த நூலில் கவித்துவம், நாடகத் தன்மை, வழக்காடுதல் என பல தன்மைகள் மிக அழகாக கோர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலின் அழகை மார்ட்டின் லூதர் உட்பட பல்வேறு வரலாற்றுத் தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

    இந்த நூல் கவித்துவ அழகு மட்டுமல்லாமல் பல்வேறு தத்துவச் சிந்தனைகளையும் விதைக்கிறது. நாம் ஏன் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம்? ஏன் நமக்கு துன்பம் வருகிறது? துன்பத்தை அனுமதிப்பது யார்? வாழ்க்கை என்றால் என்ன? நமது வாழ்க்கையில் சாத்தானின் பங்கும், கடவுளின் பங்கும் என்ன? நல்லவர்கள் ஏன் துன்பத்தைச் சந்திக்கின்றனர்? போன்ற பல கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது இந்த நூல்.

    கடவுள் இருக்கிறார், அவர் அன்பும் வலிமையும் உடையவர், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், தனது படைப்புகளோடு தொடர்பு கொண்டிருப்பவர் போன்ற பல சிந்தனைகளை நமக்கு இந்த நூல் தருகிறது. தொடக்கத்தில் உரைநடை, முடிவிலும் உரைநடை, இடையில் கவிதை என இந்த நூல் ஒரு அழகான கட்டமைப்பில் அமைந்துள்ளது.

    இதை ‘ஞான இலக்கியம்’ என்றும் சொல்வார்கள். அறிவார்ந்த சிந்தனைகளும், உரையாடல்களும் இந்த நூலில் நிறைந்துள்ளன. அவை எல்லா நேரங்களிலும் சரியாய் இருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    யூதர்களின் காலத்தில் நன்மைக்கான பயனும், தீமைக்கான பயனும் இந்த காலத்திலேயே கிடைத்து விடும் என நம்பினார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தில் இவ்வுலக வாழ்க்கையின் பயனானது அடுத்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் என நம்பு கிறோம். யோபு நூல் யூத சிந்தனைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

    ‘யோபு நேர்மையாளர்’ என கடவுள் சொல்ல, அவருக்கு வசதிகள் இருப்பதால் தான் அவர் இப்படி இருக்கிறார் என சாத்தான் வாதிடுகிறான். கடவுள் யோபுவின் செல்வங்களை, குழந்தைகளை அழிக்க சாத்தானுக்கு அனுமதி கொடுக்கிறார். பின்னர் யோபுவின் உடலில் நோய்களைக் கொடுக்கிறார்.

    கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தை யோபுவுக்குத் தெரியாது. அவர் விசுவாசத்தில் நிலைத்திருந்தாரா? மனைவியும், நண்பர்களும் அவரை அவமானப்படுத்துகின்றனர். குற்றவாளியாக்குகின்றனர். பாவி என்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டியும் யோபு நீதிமானாகவே இருக்கிறார்.

    பிரமிப்பூட்டும் யோபுவின் விசுவாசம் கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் சவால். விண்ணில் நிகழ்கின்ற விஷயங்களுக்கு மண்ணில் பாதிப்பு இருக்கும் என்பதும், மண்ணில் நாம் வாழும் வாழ்க்கை இறைவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதும் இந்த நூல் சொல்லும் இரண்டு பார்வைகளாகும்.

    இந்த நூல் சொல்லும் இரண்டு முக்கியமான பாடங்கள் வியப்பானவை. ஒன்று, சாத்தான் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடவுளைப் போல அவனும் எல்லா இடங்களிலும் இருப்பான் எனும் பொதுவான நம்பிக்கை தவறானது. இரண்டு, கடவுளின் அனுமதியில்லாமல் அவருடைய மக்களை சாத்தான் தொட முடியாது எனும் உண்மை. இந்த இரண்டு புரிதல்களும் நமக்கு யோபு நூலின் வாயிலாக கிடைக்கிறது.

    யோபுவின் நோய்க்குக் காரணம் அவனது பாவம் என அவனை குற்றம் சுமத்துகின்றனர் நண்பர்கள். யோபுவோ, தான் குற்றமற்றவன் என்கிறார். நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.

    சேவியர்
    உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.
    தேவனுடைய பிள்ளைகளுக்கும், உலக மக்களுக்கும், தேவ ஊழியர்களுக்கும் பல விதங்களில் பிரச்சனைகளை உண்டாக்கி ஆத் மாவில் சோர்வையும், சரீரங்களில் பலவீனங் களையும் பிசாசானவன் கொண்டு வருகின்றான்.

    நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஆண்டவர் உங்களைப் பார்த்து சொல்கிறார், ‘தைரியமாயிருங்கள்’.

    ஜெபத்தோடு வாசித்து தியானம் செய்யுங்கள்

    ‘நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்’. சங்.138:3

    அதைரியம், சந்தேகம் பலவிதமான மனக்குழப்பம் ஒரு தேவபிள்ளைக்கு மனதளவில் உண்டாகும்போது சரிவர ஜெபிக்க முடியாமல், வேதத்தை வாசிக்க விருப்பமில்லாமல், மேலும் தேவனை தேடுவதற்கு இருதயம் தாகம் கொள்ளாமல் போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது, அன்பான தேவனுடைய பிள்ளைகளே, ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். பிசாசானவன் உங்களுக்கு விரோதமாக கிரியை செய்து கொண்டிருக்கிறான்.

    இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? மேற்கண்ட சங்கீதத்தை மீண்டும் ஒருமுறை ஜெபத்தோடு வாசித்து தியானம் பண்ணுங்கள். நான் கூப்பிட்ட போது எனக்கு மறு உத்தரவு அருளினார். தேவனுடைய பிள்ளையே, நாம் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது நம்முடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்காத சூழ்நிலையில் ஆத்மாவிலே பலவீனம் தாக்கிவிடும்.

    அப்படியானால் நம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்க வேண்டுமல்லவா? சங்.37:5 சொல்லுகிறது, ‘கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்’.

    நாம் எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்பதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். சந்தோஷத்தோடு ஆண்டவரை நோக்கி நாம் ஜெபம் பண்ணும்போது கட்டாயம் ஜெபம் கேட்கப்படும். ஆகவே நம்முடைய சந்தோஷத்தை சத்துரு திருடி விடாதபடி நாம் காத்துக்கொள்ள வேண்டும். அவர் நமக்கு பதில் கொடுக்கும் போதெல்லாம் ஆத்மாவில் பெலன் உண்டாகும். அப்போது நம்மை அறியாத ஒரு தைரியம் நமக்குள்ளே ஏற் படுவதை உணருவோம். ஆகவே எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருங்கள். அவர் உங்களோடிருக்கிறார்.

    எனக்கு செவி கொடுக்கிறார் என்கின்ற தைரியம்

    ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. 1 யோவான் 5:14

    அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய நிருபத்தில் பரிசுத்த ஆவியில் ஏவப்பட்டு மேற்கண்ட வசனத்தை எழுதினார். அன்பானவர்களே, நாம் ஜெபம் பண்ணும்போது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகிறது. அதை கொடுக்கிறவர் கர்த்தர். ஆகவே உடனே தேவ சமுகத்தில் போய் ஜெபிக்கிறோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய கூடிய பெரிய உதவி ஒன்று உண்டானால் அது ஜெபம் என்று ஒரு பரிசுத்தவான் குறிப்பிடுகிறார்.

    அதே வேளையில் சிலர் ஜெபித்த பிறகும் ஆண்டவர் கொடுப்பாரா கொடுக்கமாட்டாரா? கிடைக்குமா கிடைக்காதா? போன்ற சந்தேக கண்ணோட்டத்தோடு ஆண்டவரைப் பார்ப்பார்கள்.

    நாம் ஜெபிப்பதற்கு முன்பு நாம் கேட்க வேண்டிய காரியங்கள் தேவனுக்கு சித்தம் தானா என்று முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் சொல்கிறது, ‘நாம் அவருடைய சித்தத்தின்படி எதையாகிலும் கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறார்’ என்பதே நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற தைரியம்.

    என் அன்பு சகோதரனே! சகோதரியே! அவருடைய சித்தம் அறிந்து ஜெபிக்கிறவர்கள் எப்போதும் தைரியமாயிருப்பார்கள். ஆகவே, மனம் தளராமல் சோர்ந்து போகாமல் ஜெபத்தைக் கூட்டுங்கள், தைரியமடைவீர்கள். ஏனெனில் இயேசு உங்களோடிருக்கிறார்.

    விசுவாசம் தைரியத்தை கொண்டு வரும்

    ‘அவரைப் பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது’. எபேசியர் 3:12

    நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கிற ஓர் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் வேதாகமம். அவருடைய வசனம் தான் நம்முடைய கால் களுக்கு தீபமாகவும், பாதைக்கெல்லாம் வெளிச்சமாகவும் இருக்கிறது.

    ஒரு மனிதனுக்கு, ‘ஆண்டவரால் எதையும் சாதிக்க முடியும்’ என்கிற தைரியம் வந்து விட்டால், எதையும் அவர்கள் சந்திக்க தயங்க மாட்டார்கள். ‘கர்த்தர் என்னோடிருக்கிறார்’ என்ற தைரியம் ஒரு தேவபிள்ளைக்குள் இருந்தால் ஆசீர்வாதங்களை அவர்கள் பெறுவது மிகவும் எளிது.

    ஆண்டவர் பேரில் நமக்கு எப்போதும் ஓர் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கவேண்டும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், ‘நன்றாக வேதம் வாசிப்பார்கள், ஜெபிப்பார்கள், ஆலயம் செல்வார்கள், ஏன்? ஆண்டவருக்கே ஊழியம் செய்வார்கள். ஆனால் அவர்களுடைய விசுவாசமோ, அவர்களது வேலை, அல்லது பணம், படிப்பின் மீது இருந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பிரகாசிப்பதில்லை என்பதை நான் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்.

    உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.

    ‘தைரியமாயிருங்கள், இயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார்’.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.
    நம் தந்தையாகிய கடவுள் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்று நாம் சிந்தித்ததுண்டா? நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். நமது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், திட்டங்கள் அனைத்தும் அவருக்கு தெளிவாக தெரியும்.

    நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.

    நமது நல்ல செயல்களை உலகறியச் செய்ய நமக்கு நன்றாகத் தெரியும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நமது தீய செயல்களை யாரிடமும் சொல்ல நாம் விரும்புவதில்லை. நமது தேவன் அதையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்றால் நமக்கு பயம் வருகிறது தானே?

    தேவன் நம் மேல் மிகுந்த அன்பும் பாசமும் வைத் திருக்கிறவர். ‘உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது’ என்று வேதத்தில் பார்க்கிறோம். நம் தாயின் கர்ப்பத்தில் இருந்தே நம்மை தெரிந்துகொண்டு அன்பை பொழியும் தேவனுக்கு நாம் நல்ல பிள்ளை களாக வாழ்வது தான் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும்.

    ஆன்மிக வளர்ச்சி என்பது சட்டென நடந்து விடும் காரியம் அல்ல. நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மாற்றம் என்பது நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தே அமையும். முதலாவதாக நம்முள் உள்ள கெட்ட சிந்தனைகளை அகற்றிவிட முயற்சி செய்வோம். அதற்கு கடவுளின் வழிநடத்துதல் மிகவும் அவசியம்.

    தொடர்ந்து நல்ல சிந்தனைகளை மனதுக்குள் புகுத்தினால் நல்ல உணர்வுகளை பெற்று கொள்வோம். இந்த நல்ல உணர்வுகள் ஏழைக்கு உதவுதல், நோயுற்றவர்களுக்கு ஆறுதல் கூறுதல், எல்லோரையும் மதித்தல், முதியோர்களை அரவணைத்தல் போன்ற நல்ல செயல்களை செய்ய தூண்டும். ஆதலால் நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. நம்முடைய வாழ்க்கை நல்வழியில் கட்டப்பட நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்வோம்.

    நாம் வேதத்தை தினமும் வாசித்தால் தேவன் நமக்கு நல்ல சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் கொடுப்பார். குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது தினமும் வேதத்தை படிக்க முயற்சி செய்யுங்கள்.

    ரோமர் 12:2 சொல்லப்பட்டது போல “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின் படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக”. அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

    நமது தேடல் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்போம். எப்படிப்பட்ட நண்பர்களை தேடுகிறோம், எங்கேயெல்லாம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம், பணம் சம்பாதிக்க சரியான வழியை தேடுகிறோமா இல்லை குறுக்கு வழியில் செல்கிறோமா என்று வினா எழுப்புவோம். நாம் உண்மையான பக்தியுடன் கடவுளின் ஆலயத்திற்கு செல்கிறோமா இல்லை மற்றவர்கள் கண்களில் நல்லவன் என்று தெரிவதற்காக செல்கிறோமா?

    சங்கீதம் ஒன்றாம் அதிகாரத்தில் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது: “நற்பேறு பெற்றவர் யார்?, அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவி களின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினால் அமராதவர். ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தை இரவும் பகலும் சிந்திப்பவர்”.

    ஆம் பிரியமானவர்களே, அவரது வசனத்தை தியானிப்பவருக்கு நல்ல சிந்தனைகளே மனதில் பிறக்கும்.

    நாம் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தால் எதுவும் தானாக நடக்காது. கடவுள் கொடுத்த நேரத்தை வீணடிக்காதீர்கள். மற்றவர்களுக்கு பயன்படும் செயலை முதலில் குடும்பத்தாரிடம் இருந்து ஆரம்பியுங்கள். பின்னர் அது மற்ற இடங்களுக்கெல்லாம் பரவட்டும்.

    இப்படி செய்வதின் மூலம் ஒரு சமுதாயமே நல்ல சிந்தனையுள்ள கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரு நல்ல தொடர் அலையை அது உருவாக்கி நம் நாட்டின் அனைத்து மக்களும் பயன்பட்டு தீமை விலக அது வழி வகுக்கும். இதனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு காக்கப்படும், தவறு செய்பவர்கள் குறைவார்கள், அடுத்த தலைமுறை நம்மை பார்த்து கற்றுக்கொண்டு நல்ல எண்ணம் படைத்தவர் களாக மாறுவார்கள்.

    ஆம் பிரியமானவர்களே, நல்ல எண்ணங்களை மனதுக்குள் வைத்து தீய எண்ணங்களை அப் புறப்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் வரும் என்று பார்த்தீர்கள் அல்லவா. நாம் கடவுளுக்கு பிரியமில்லாத செயல்களை செய்தால் ஒரு வேளை அது தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் அதன் முடிவு தோல்வியே. ஆதலால் நல்ல சிந்தனை உடையவர்களாய் வேதத்தின் படி நடந்து நல்ல உணர்வுகளை பெற்று மற்றவர்களுக்கு மிக சிறப்பான செயல்களை செய்யலாமா?

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    துலீப் தாமஸ், சென்னை.
    பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.
    ‘நீதிமொழிகள்’ எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ‘ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள்’ என்பது தான் எளிமையான விளக்கம்.

    அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை?

    உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந்தனைகள் மட்டும் ஏன் பைபிளில் இடம் பெற வேண்டும்?

    அதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு.

    தாவீது மன்னன் இறைவனின் இதயத்துக்கு நெருக்கமானவர். அவரது மகன் தான் சாலமோன் மன்னன். ஒரு முறை கடவுள் அவருக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். அரசனாய் இருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் தோல்வியே காணாத மன்னனாக வேண்டும் என்றோ, செல்வத்தில் புரளும் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்றோ தான் கேட்பார்கள். சாலமோனோ, “மக்களை வழிநடத்தும் ஞானம் வேண்டும்” என்றார்.

    கடவுள் அவருக்கு அந்த வரத்தை கொடுத்தார். ‘உன்னைப் போல ஞானவான் இதுவரைப் பிறக்கவில்லை, இனியும் பிறப்பதில்லை” என வரம் அளித்தார். அப்படிப்பட்ட இறை ஞானம் நிரம்பிய மனிதரின் சொற்கள் தான் இவை.

    நீதி மொழிகள் அவருடைய வாழ்வின் நடுப்பகுதியில் எழுதப்பட்டவை. இந்த நூலில் மொத்தம் 915 நீதி மொழிகள் உள்ளன. அவற்றில் 851 நீதிமொழிகள் சாலமோன் மன்னன் எழுதியவை. மற்றவை, ஆகூர் மற்றும் இலமுவேல் ஆகியோர் எழுதியவை. 31 அதிகாரங்களில் 29 அதிகாரங்களை சாலமோனும் மற்ற இரண்டு அதிகாரங்களை இவர்கள் ஆளுக்கொன்றாகவும் எழுதியிருக்கின்றனர்.

    ‘சாலமோன் மொத்தம் எழுதிய நீதிமொழிகள் 3000’ (1 அரசர் 4:32) என்கிறது பைபிள். அவற்றில் பெரும்பாலானவை பைபிளில் இடம்பெறவில்லை என்பது வியப்பான விஷயம். பைபிளில் எது இடம்பெற வேண்டும் என்பதை இறைவனே தீர்மானிக்கிறார் என்பதன் உறுதிப்படுத்துதலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

    கிமு 931 களை ஒட்டிய வருடங்களில் தான் சாலமோன் மன்னனின் நீதிமொழிகள் எழுதப்பட்டன. ஆனால் அப்போதே எல்லாம் தொகுக்கப்படவில்லை. சில இறைவாக்கினர் எசேக்கியேல் காலத்தில் கிமு 700 களில் தொகுக்கப்பட்டது.

    மீட்பைப் பற்றிய செய்தி நேரடியாக இந்த நூலில் இல்லை. ஆன்மிக செழிவுக்கான இறை சிந்தனைகளும் இல்லை. ஆனால் இந்த நீதிமொழிகள் மனதைச் சலவை செய்யும் வல்லமை கொண்டவை. அன்றாட வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டிய வழிகளை நமக்குக் காட்டுபவை.

    கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை ஆன்மிக வாழ்வு, உலக வாழ்வு என தனித்தனி பிரிவு இல்லை. உலக வாழ்க்கையை முழுமையாய் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வாக மாற்ற வேண்டும் என்பதே கிறிஸ்தவ சிந்தனை. எல்லாவற்றையும் இறைவனுக்காய் செய்வதற்கு நீதிமொழிகள் வழிகாட்டுகின்றன.

    இறைவனோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? பிறரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? பெற்றோரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? அரசோடு எப்படி நடந்து கொள்ள‌ வேண்டும்? குழந்தைகளோடு எப்படிப் பழக வேண்டும்? தன்னோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? எதிரிகளோடு எப்படி பழக வேண்டும்? என்பது போன்ற எதார்த்தமான வாழ்க்கைப் பாடங்கள் இந்த நூலில் நிரம்பியிருக்கின்றன.

    இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும்?, என்ன செய்யக் கூடாது? எனும் சிந்தனையே இந்த நூலின் அடிப்படை எனலாம். ஞானமா-முட்டாள் தனமா? தாழ்மையா-பெருமையா?, நீதியா-அநீதியா?, சோம்பலா-சுறுசுறுப்பா?, மதுவா- தெளிவா?, வாழ்வா-சாவா?, கோபமா-சாந்தமா?, காதலா-காமமா?, ஏழ்மையா-செல்வமா? என முரண்களால் கேள்விகள் அமைத்து, சரியான வழி எது என்பதை எளிமையாய்ச் சொல்கிறது நீதிமொழிகள் நூல்.

    இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டுமெனில் தாழ்மையை மனதில் கொண்டிருக்க வேண்டும், பிறருக்கு நீதியானவற்றை மட்டுமே செய்ய வேண்டும், இறையச்சம் நிரம்ப இருக்க வேண்டும் என மூன்று நிலைகளில் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது.

    ஒரு முட்டாள் எப்படி இருப்பான் என்பதைப்பற்றி மட்டுமே சுமார் 70 நீதிமொழிகள் பேசுகின்றன. அவற்றை விலக்கி விட வேண்டும். பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதை கணிசமான நீதி மொழிகள் பேசுகின்றன. அவற்றை கைக்கொள்ள வேண்டும்.

    உதாரணமாக, பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.

    தினம் ஒரு அதிகாரம் என மாதம் தோறும் நீதிமொழிகளைப் படித்தால் மனம் தெளிவாகும் என்பது திண்ணம்.

    - சேவியர்
    கணவன் மனைவியை நேசித்து அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதும், மனைவி கணவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவனை நேசித்து அன்பு கூர்வதும் ஒரு குடும்பம் சமாதானமாய் வாழ வேதம் காட்டும் வழியாகும்.
    இந்த உலகில் வாழும் மக்களில் பலர் சந்தோஷமின்றி, சமாதானமின்றி வாழ்கிறதை நாம் காண நேரிடுகிறது. குறிப்பாக அநேக குடும்பங்கள் தங்களின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தொலைத்து விட்டது என்றால் அது மிகையாகாது.

    சமாதானம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகிவருகிறது. குடும்பங்களிலே கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமையும், சந்தோஷமும் இல்லாமல் எத்தனையோ தம்பதிகள் வாழ்கின்றனர்.

    பிள்ளைகள்-பெற்றோர்கள் இடையே அன்பும் ஐக்கியமும் இன்றி எத்தனையோ குடும்பங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. என் கணவர் என்னை உண்மையாய் நேசிக்கவில்லையே, புரிந்துகொள்ளவில்லையே என்று ஏங்கி தவிக்கும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். என் மனைவி என்னிடம் அன்பு காட்டவில்லையே என்று மனைவியின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் கணவன்கள் ஏராளம்.

    பெற்றோர்களின் இப்படிப்பட்ட ஜீவியம் பிள்ளைகளின் மனதை புண்படுத்துவதால் பிள்ளைகள் நொறுங்குண்ட இதயத்தோடு தங்களின் வாழ்க்கையை கழிக்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட குடும்பங்களை ஆசீர்வதித்து மெய்யான, நிலையான சமாதானத்திற்குள் மனுக்குலத்தை வழி நடத்தவே எம்பெருமான் இயேசு பூமியில் அவதரித்தார். அவருக்கு திருமறையில் இனியொரு பெயரும் உண்டு, அதாவது, ‘சமாதான பிரபு’ என்று.

    ஆம், அவர் சமாதான பிரபு. சமாதானத்தை அருளுகிறவர். அவர் மக்களுக்கு இந்த பூமியில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அருளவே இறைமகனாக வெளிப்பட்டார். அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து பரமேறிச் சென்றார். அவர் பரமேறிச் செல்வதற்கு முன் இப்படியாக கூறினார்:

    ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்து போகிறேன். என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக. கலக்கம் வேண்டாம், பயம் வேண்டாம்’.

    இந்த கட்டுரையை வாசிக்கின்ற நீங்கள் எந்த காரியத்தைக் குறித்துக் கலங்கித் தவிக்கிறீர்களா?, பயப்படுகிறீர்களா? உங்களுக்கான நற்செய்தி இதோ: உங்கள் கலக்கத்தை மாற்றி பயத்தை போக்கி உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளவே இயேசு பிரான் பூமிக்கு வந்தார்.

    வருகிற வருமானத்தை எல்லாம் கணவர் குடித்து வீணாக செலவு செய்து குடும்பத்தை கவனிக்கவில்லை என்று வருந்திக் கண்ணீர் வடிக்கின்றீர்களா? நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஒரு வினாடி கண்களை மூடி நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். கடவுள் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்து, உங்கள் பிரார்த்தனையை கேட்டு உங்கள் கணவனின் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாக்குவார். அவர் விடுதலையாகும் வரை தொடர்ந்து கடவுளிடம் விடாப்படியாய் வேண்டிக்கொள்ளுங்கள். ஆம், அவர் ஜெபத்தை கேக்கிற தேவன்.

    அநேக குடும்பங்களில் மனைவிகள் தங்கள் புருஷர்களை எதிர்த்துப் பேசுகிறது உண்டு, கணவன்மாருடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடாமல், கீழ்ப்படியாமல் ஜீவிக்கிறது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு வேதம் கூறும் பிரதானமான அறிவுரை என்னவென்றால், ‘மனைவிகளே, சொந்த புருஷருக்குக் கீழ்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்’. (எபேசியர் 5:22,23).

    ஆம், மனைவிகள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பொழுது அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சமாதானம் உண்டாகும். சில குடும்பங்களில் கணவன்மார்களை காட்டிலும் மனைவிகள் அதிகம் சம்பாதிக்கிறது உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தங்கள் கணவன்மார்களை நேசிப்பவர்களாகவும், அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருந்தால் சந்தோஷமும் சமாதானமும் பெருகும்.

    ‘பூர்வத்திலே தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து, பரிசுத்த ஸ்த்ரீகளும் தங்களுடைய புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்’ (1 பேதுரு 3:5).

    காதிலும், கழுத்திலும், பொன் ஆபரணங்களை அணிந்து, விலையேறப்பெற்ற உயர்ந்த வஸ்திரங்களை உடுத்தி, கண்களுக்கு மையிட்டு, உதடுகளுக்கு சாயம்பூசி, வித விதமான வாசனை பவுடர்களால் வருகிற அலங்காரத்தைக் காட்டிலும் ஒரு குடும்ப ஸ்த்ரீக்கு மெய்யான, உண்மையான அலங்காரம் என்னவென்றால், அவர்கள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிவதே என்று வேதம் திட்டமாய் கூறுகிறது.

    அதே போல, இயேசு நம்மை அன்பு செய்தது போல, புருஷன்மார் தங்கள் மனைவியரை அன்பு செய்ய வேண்டும் என வேதம் கட்டளையிடுகிறது. “அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்பு கூருகிறான்.” (எபேசியர் 5:28)

    ஆக, கணவன் மனைவியை நேசித்து அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதும், மனைவி கணவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவனை நேசித்து அன்பு கூர்வதும் ஒரு குடும்பம் சமாதானமாய் வாழ வேதம் காட்டும் வழியாகும்.

    இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ பரலோகத்தின் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு அருள் புரிவாராக. ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.
    போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார்.
    ஆண்டவர் ஏசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30) எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று பொருள் அல்ல, மாறாக அது வெற்றியின் முழக்கம். நாம் நம்முடைய சாதாரண பார்வையில் அது தோல்வியின் குரலாக விரக்தியின் உச்சத்தில் கதறுபவரின் சத்தம் போலத்தான் பார்க்க வேண்டும்.

    அதாவது நான் முயற்சி செய்தேன், ஆனால் தோற்று விட்டேன் என்பது போல தோன்றும். இதற்கு காரணம், உலகை மீட்க வந்த உன்னத தேவன் சிலுவையில் தொங்கிக்கொண்டு இருக்க அவரை கொலை செய்பவர்கள் அவருக்கு முன்பு திடமாக நின்றுகொண்டு அவரை எள்ளி நகையாடிக்கொண்டும், அவரை சிலுவையில் இருந்து இறக்கி வரசொல்லி சவால் விட்டுக்கொண்டும் இருப்பது ஆண்டவர் இயலாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு உருவாக்கலாம்.

    அவருடைய சீடர்களும் கூட இவ்வாறு தான் பார்த்தார்கள். அவர்கள் நினைத்ததைபோல அவர் செய்யவில்லை என்று கோபமும் விரக்தியும் அடைந்தனர். கசையால் அடிகள் வாங்கி தசைகள் கிழிந்து குருதி வழிந்தோடும நிலையில் சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டு எப்படி அவர் வெற்றியின் குரலாக முழங்க முடியும் என்று எண்ணத்தோன்றும். அது வேதனையின் குரல் விரக்தியின் கதறல் என்று தான் பார்க்க தோன்றும்.

    இறைவன்ஏன் இடிமின்னல் கொண்டு தன் மகனை கொலை செய்பவர்களை அழிக்கவில்லை அல்லது இவரே என் அன்பார்த்த மகன் என்று அவர் பணியை தொடங்கியப்போது கூறியவர் இப்போது குரல் கொடுக்கவில்லை என்ற மனித பார்வைகள் எல்லாம் நிறைவேறிற்று என்பதை ஒரு வெற்றியின் குரலாக பார்க்க விடாது. மீட்பின் வரலாற்றோடு விவிலியத்தின் முன்னறிவிப்புகளோடு இறை நம்பிக்கையோடு நாம் அதைப்பொருத்தி பார்த்தால் தான் அது வெற்றயின் முழக்கம் என்பது தெளிவாக தெரியும்.

    போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார். எல்லாம் நிறைவேறியது ஒரு வெற்றியின் குரல் கீழ்படிதலின் குரல் மற்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் குரல் மனித சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் நிறைவேறிற்று. மண்ணகத்தில் போரினை முடித்து விட்டு உன்னருபே வருகின்றேன் தந்தையே என்ற வெற்றியின் முழக்கம். அதனால் தான் நாம் அந்த நாளை புனித வெள்ளி என்று போற்றுகிறோம்.

    அருள்திரு.தேவதாஸ், பங்குத்தந்தை,
    தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.
    இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.
    திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரசியமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு.

    பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்களில் தான் கடவுளின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஒன்று, உன்னத சங்கீதம், இன்னொன்று இந்த எஸ்தர் நூல்.

    வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டு வாழ்ந்த காலத்தில் தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க இது வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே நடந்த கதை தான். அப்படிப்பட்ட களத்தில் அமைந்த பிற நூல்களாக எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களைச் சொல்லலாம்.

    எஸ்தர் நூலின் சாரம்சம் இது தான். அகஸ்வேர் மன்னன் இந்தியா முதல் எகிப்து வரை விரிந்து பரந்த‌ மாபெரும் வலிமையான சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கிறான். தன்னுடைய வீரதீர பராக்கிரமங்களை எல்லோருக்கும் பறைசாற்ற மாபெரும் விருந்தொன்றை அளிக்கிறான். அந்த அரசவையில் அரசி வஸ்தி ஆட வேண்டும் என அழைப்பு விடுக்கிறான்.

    அரசனின் அழைப்பை வஸ்தி நிராகரிக் கிறாள். மன்னனையே மனைவி மதிக்காவிடில் எந்த மனைவி தான் கணவனை மதிப்பாள் என விவாதம் நிகழ்கிறது. வஸ்தி அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறாள். அந்த இடத்துக்கு இன்னொரு இளம் கன்னிப்பெண் தேடப்படுகிறாள்.

    அந்த இடத்தில் மொர்தக்காய் எனும் யூதரிடம் ஆதரவாய் இருக்கும் எஸ்தர் எனும் பெண் வருகிறாள். பல்வேறு தயாரிப்பு நிகழ்வுகளுக்குப் பின் அவள் அரசியாகிறாள். பிற இன நாடு ஒன்றின் அரசியாகிறாள் யூதப் பெண். உண்மை வெளிப்பட்டால் உயிருக்கே ஆபத்து எனும் நிலை.

    மொர்த்தக்காய்க்கு அரச வாயிலில் நிற்கும் பணி. அவரது வளர்ப்பு மகளுக்கு அரசவையின் மிக உயரிய நிலை. அப்போது வருகிறான் வில்லன், ஆமான். அரசனின் உயரதிகாரி. எல்லோரும் அவனுக்கு தலைகுனிந்து வணக்கம் செலுத்துகின்றனர். ‘ஆண்டவரை மட்டுமே வணங்குவேன்’ என மொர்த்தக்காய் வணங்காமல் நிற்கிறார்.

    ஆமானுக்கு சினம் தலைக்கேறுகிறது. மொர்த்தக்காயை மட்டுமல்ல, யூத இனத்தையே ஒட்டு மொத்தமாய் அழிக்க வேண்டும் என திட்டமிடுகிறான். அரசனின் அனுமதியும் பெற்று விடுகிறான். மொர்த்தக்காயைக் கொல்ல மிகப்பெரிய கழுமரத்தையும் உண்டாக்குகிறான்.

    அரசி எஸ்தர் இந்த நிலையை மாற்ற முயல்கிறார். யூதர்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். அந்த சூழலில் மொர்த்தக்காய் ஒரு முறை மன்னனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்வு தெரிய வருகிறது. ஆமானைக் கொண்டே மொர்த்தக்காயை மரியாதை செலுத்த வைக்கிறார் மன்னன்.

    எஸ்தர் அரசி திட்டமிட்டு விருந்தொன்றை உருவாக்கி மன்னனையும், ஆமானையும் அழைக்கிறாள். அந்த விருந்தில் ஆமானின் மீது மன்னனுக்கு கோபம் உருவாகும் சூழலை ஏற்படுத்து கிறாள். ஆமான், மொர்த்தக்காய்க்காய் தான் உருவாக்கிய கழுமரத்தில் உயிர் விடுகிறான்.

    இந்தக் கதையின் முழுமையான சுவாரசியத்தைப் பெற்றுக்கொள்ள எஸ்தர் நூலை ஒரு முறை வாசித்தாலே போதும்.

    கடவுள் எப்படி சூழல்களை தமக்குப் பிரியமானவர்களுக்குச் சாதகமாக மாற்றுகிறார் என்பது வியப்பூட்டும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை மட்டுமே வணங்கவேண்டும் எனும் மனநிலை கொண்ட மன்னன், கடைசியில் யூதர்கள் மீது யாரும் கை வைக்கக் கூடாது என மாறுகிறார்.

    எதேச்சையாக நடப்பதைப் போல நடக்கின்ற விஷயங்கள் உண்மையில் இறைவன் உருவாக்குகின்ற சூழல்கள் என்பதை நாம் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம். எல்லாம் சுமுகமாக மாற ஒரு எதேச்சையான நிகழ்வு தான் காரணம்.

    ஒரு இரவில் மன்னனுக்கு தூக்கம் வரவில்லை. அவர் குறிப்பேட்டை வாசிக்கிறார். தனது உயிரை மொர்த்தக்காய் காப்பாற்றியதை அறிகிறார். அவரை கவுரவிக்க விரும்புகிறார். அந்த தூக்கமற்ற ஒரு இரவு தான் யூதர்களை ஒட்டு மொத்தமாய்க் காப்பாற்றியது.

    மோசேயின் காலத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாம் படுகொலை செய்யப்பட மோசே ஒரு கூடையில் வைக்கப்பட்டு நதியில் மிதக்க விடப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

    பெத்லேகேமில் இயேசு பிறந்த போது, பாலகர்களை எல்லாம் படுகொலை செய்ய அரசன் ஆணையிட்டான். இயேசு, இரவில் ஒரு கனவின் மூலம் காப்பாற்றப்பட்டார். எஸ்தர் கதையில் யூத இனத்தை தூக்கமற்ற ஒரு கனவு காப்பாற்றுகிறது.

    இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே இருக்கும் நாம் உண்மையும், இறையச்சமும் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதையும், கடவுள் தனிநபர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார் என்பதையும் இந்த நூல் நமக்குப் பாடமாகத் தருகிறது.

    சேவியர்
    ×