search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jesus Christ"

    • நாம் அனைத்திலும் எளிமையாய் இருக்க முடியுமானால் அது ஆசிர்வாதமே.
    • நம் பேச்சிலும், நடத்தையிலும் நம் பார்வையிலும் எளிமையோடு இருப்போம்.

    இன்றைய உலகில் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காக தான தர்மங்களை செய்கிறோம்; பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறோம். நம்முடைய ஏக்கம், அனைத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட ஆசிர்வாதத்தை நாம் எப்படி அடைவது என்ற தேடலிலேயே பலருடைய வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது.

    நம்முடைய பார்வையில் ஆசிர்வாதம் என்பது, உலக அந்தஸ்துடன் வாழ்க்கை வாழுவது, பெரிய வீடு, கார்கள், இருசக்கர வாகனங்கள், அடுக்கு மாடி குடியிருப்பு, வங்கியில் சேமிப்பு பணம், நகைகள், பெரிய தோட்டம், பெரிய பிரபலமான கல்லூரியில் படிப்பு, அரசாங்க வேலை, புகழ் பெற்ற குடும்பப் பின்னணி என்று நீண்டு கொண்டே செல்கிறது.

    ஆனால் இறைவனின் பார்வையில் யார் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தெரியுமா?

    நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்யும்போது, நம்முடைய மனசாட்சி 'அது கடவுளுக்கு பிடிக்காது. நீ செய்வது பாவம், அதைச் செய்யாதே' என்று நம்மை உணர்த்துவித்தால் அதுவும் ஒரு ஆசிர்வாதமே (2 சாமுவேல் 12:13). ஏனென்றால் பாவம்செய்யும் பலரும், எந்த குற்ற உணர்வும் இல்லாமல் துணிகரமாய் தவறு செய்கின்றனர். தாவீது பாவம் செய்த போது, இறைவனால் அனுப்பப்பட்ட நாத்தான் என்ற தேவ மனிதனால் குற்றத்தை உணர்ந்து கடவுளின் மன்னிப்பையும் பெற்றான்.

    கடவுளுடைய வார்த்தைகளை கேட்கவும், அதன்படி நடக்கவும் நமக்கு உணர்வுள்ள இருதயம் இருக்குமானால் அதுவும் ஆசிர்வாதமே. (மத்தேயு 13:23) (சங்கீதம் 119:1). 'கடவுளின் வார்த்தை கேட்டு அதன்படி நடந்த அனைவரும், தேவனால் ஆசிர்வாதத்தையும் சமாதானத்தையும் பெற்றார்கள்' என்று பைபிள் நமக்கு தெளிவாக காண்பிக்கிறது. கடவுளின் பிள்ளையாய் வாழ்வதும், அவரின் சத்தத்தை கேட்பதும் எல்லோராலும் முடியாத ஒன்று தான். நாமும் அவருடைய சத்தத்தை கேட்க உணர்வுள்ள இருதயம் உள்ளவர்களாய் இருக்க முயற்சிப்போம்.

    நமக்கு நல்ல பெற்றோர், நல்ல பிள்ளைகள், நல்ல உடன்பிறப்புகள், நல்ல குடும்பம், நல்ல சமூகம் கிடைக்குமானால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான். வேதம் சொல்லுகிறது 'என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோசத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை' (III யோவான் 1:4). ஆகவே சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற வசனத்தின் படி அவருடைய சத்தியத்தில் மாத்திரம் நிலைநிற்போம்.

    கடன் இல்லாமல் வாழ்வதும், மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய மனதுடையவர்களாய் இருப்போமானால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான் (லூக்கா 6:35). ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்ப கொடுப்பார் ( நீதிமொழிகள் 19:17). ஆகவே கடன் பாரத்தால் தவிக்கும் மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளையும், ஆறுதலையும் தெரிவிப்போம்.

    நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதும், வியாதிப்பட்டவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அதற்காக பிரார்த்தனை செய்வதும் ஆசிர்வாதமே. ஏனென்றால் அநேகர் தங்கள் வாழ்க்கையில் வியாதினால் அதிக பணம் செலவழித்தும் சுகம் பெறாமல் வருத்தத்தோடும், மனசஞ்சலத்தோடும் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் (யாத் 23:25) (யாத்15:26) (யாக் 5:14). நாம் அவர்களுக்காக அனுதினமும் ஜெபிக்க மறவாதிருப்போம்.

    நாம் அனுபவிப்பதற்கு எல்லாம் இருந்தும் நாம் அனைத்திலும் எளிமையாய் இருக்க முடியுமானால் அது ஆசிர்வாதமே. ஆவியில் எளிமையுடையவர்கள் பாக்கியவான்கள் என வேதம் நமக்கு கூறுகிறது (மத்தேயு 5:3) (பிரசங்கி 3:20) (I கொரிந்தியர் 10:23). ஆகவே நம் பேச்சிலும், நடத்தையிலும் நம் பார்வையிலும் எளிமையோடு இருப்போம்.

    நம்மோடு நம் வாழ்க்கையில் நம் பிரச்சினைகளில் நம் விருப்பங்களில் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான் (தானி யேல்3:17).

    இறைவனிடம் இருந்து கிடைக்கப்பெறும் நீதி - நியாயத்திற்கு காத்திருப்பதும் ஆசிர்வாதமே. அது எப்படி என்றால் இன்றைய நாட்களில் அனைத்து விஷயங்களிலும் நேர்மையான, வெளிப்படையான நீதி கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் சில நேரங்களில் வேறு வழிகளில் நீதியை பெற முயற்சித்து பிரச்சினையில் முடிகிறது (சங்கீதம் 10:18).

    பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியாவது துரும்பாவது கெடுக்கிறதும் இல்லை (மத்தேயு 6:20) என்று சொல்லப்பட்டபடி, நாம் இம்மைக்குரிய ஆசிர்வாதத்தை மட்டும் நாடாமல், முதலில் மறுமைக்குரியதை தேடி நன்மையை பெற்றுக் கொள்வோம்.

    குருபாதம், தவசிமடை, திண்டுக்கல்.

    • ஆண்டவருக்கு பயப்படுவதே மெஞ்ஞானம்.
    • கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்.

    பயம் மிகவும் கொடியது. பயப்படாத மனிதனே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காரணத்தால் பயந்துகொண்டுதான் இருக்கிறான். பயம், மனிதனை இரண்டு விதத்தில் ஆட்கொள்கிறது. முதலாவதாக காரணத்தோடு பயப்படுவது. உதாரணமாக ஒரு வியாதி வந்து விட்டால் மரித்துவிடுவோமோ? என்ற பயம். தேர்வு எழுதும் சிறுபிள்ளைகள் கூட தோல்வியடைந்து விடுவோமோ? என பயப்படுவார்கள்.

    இரண்டாவதாக காரணமில்லாமல் பயப்படுவது. இவ்வகை பயம், நாம் எதற்காக பயப்படுகிறோம்? எனத் தெரியாமலேயே பயப்படுவார்கள்.

    வேதம் சொல்லுகிறது, 'மெஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக் கொள். அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய். உன் கால் இடறாது. நீ படுத்துக் கொள்ளும் போது நித்திரை இன்பமாயிருக்கும்'. (நீதிமொழிகள் 3:21.23,24).

    தூக்கத்தில் கூட பயப்படுகிறவர்கள் அநேகம் பேர். பயமின்றி நடக்க மெய்யான ஞானத்தையும், நல்லாலோசனையையும் காத்துக்கொள்ள வேண்டும்.

    'ஆண்டவருக்கு பயப்படுவதே மெஞ்ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி'. (யோபு 28:28).

    'கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்' (நீதிமொழிகள் 1:7).

    ஞானத்தின் ஆரம்ப நிலையே கர்த்தருக்கு பயப்படுதல் தான். கடவுளுக்கு பயப்பட்டால் மற்ற எல்லாவிதமான பயமும் நம்மை விட்டுப்போகும்.

    'என் வருத்தங்களைப் பற்றி பயமற்றவனாயிருக்கிறேன் என்று யோபு சொல்கிறார்' (யோபு:9.28).

    'ஆபிரகாம், யோசேப்பு ஆகியோர் தேவனுக்கு பயப்படுகிறவர்களாக காணப்பட்டார்கள்'. (ஆதியாகமம் 22:12, 42:18).

    இதுபோன்று யாரெல்லாம் கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தார்களோ அவர்கள் எல்லோரும் பூமியிலே பயமின்றி வாழக் கடவுள் கிருபை செய்தார்.

    'கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திட நம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்'. (நீதி 14:26)

    அடுத்ததாக பயமில்லாமல் வாழ கர்த்தரை நாம் நம்முடைய பெலனாக கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு காரியமானாலும் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும்.

    'இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு கானான் தேசத்திற்கு செல்லும் வழியில் முன்னே செங்கடல், பின்னே எகிப்தியர் ரதங்களோடும் குதிரைகளோடும் இஸ்ரவேல் மக்களை அடிமைப்படுத்த வந்து கொண்டிருந்தனர்'. (யாத்திராகமம் 14:10)

    இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தார்கள். அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள். கர்த்தர் செங்கடலை இரண்டாகப் பிளந்து இஸ்ரவேலர் கால் நனையாமல் கடந்து போகச் செய்தார். எகிப்தியரை அதே செங்கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

    'கர்த்தரை நோக்கி கூப்பிட்ட இஸ்ரவேல் புத்திரருக்கு ஆதரவாக கர்த்தர் துணை நின்று எகிப்தியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்'. (யாத்திராகமம் 14:25).

    நாமும் பயம் வரும் போது கர்த்தரை நோக்கி ஜெபிக்க வேண்டும். சிலர் காரணமில்லாமல் பயப்படுவார்கள். அவர்களது உள்ளம் எப்போதும் அமைதியை இழந்து கலக்கத்தோடு காணப்படும்.

    'பயத்தை போக்க பல காரியங்களை செய்வர். ஆனால் உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி'. (சங்கீதம் 119:174) என வசனம் கூறுகிறது.

    வேத வசனங்களை வாசிக்க வாசிக்க பயம் என்ற இருள் உள்ளத்தை விட்டு வெளியேறி உள்ளம் மகிழ்ச்சியால் களிகூரும்.

    'தாவீது கூறுகிறார்: உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்தில் அழிந்து போயிருப்பேன்' (சங்119:92) என்று.

    நள்ளிரவு நேரம் அடர்ந்த காட்டிற்குள் தன் தந்தையின் தோளில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை எதற்கும் பயப்படாது. அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் தன் தந்தையை அந்த குழந்தை முழுவதுமாக நம்பும். அதுபோல தாயின் கருவில் உருவாகும் முன்னே நம்மை அறிந்து உருவாக்கி, பாதுகாத்த ரட்சகர் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராலும் நமக்கு கொடுக்க முடியாத சமாதானத்தை கொடுப்பவர் இயேசு மட்டுமே.

    'சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக' (யோவான் 14:27). 'பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்' (1 யோவான் 4:18).

    எனவே கர்த்தருக்கு பயந்து அவரை அன்பு செய்து நம் உள்ளத்தில் அவரை ஏற்றுக்கொண்டு, மனமகிழ்ச்சி தரும் வேதத்தை தியானித்து பயமின்றி வாழ்வோம்.

    'பேதுரு, இயேசு கடலின் மேல் நடந்து வருகிறதைக் கண்டு தானும் நடக்க வேண்டும் என விரும்பி இயேசுவிடம் அனுமதி கேட்டான். அனுமதி கிடைத்தவுடன் பேதுரு படகை விட்டு இறங்கி இயேசுவை பார்த்து கடலின் மேல் நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கு பின் அலைகளைப் பார்த்து பயப்பட்ட போது பேதுரு மூழ்க ஆரம்பித்தான்'. (மத்தேயு 14:28-30)

    உலகமாகிய கடலில் பல வித பிரச்சினைகளை கண்டு பயந்து தினம் தினம் மூழ்கும் மனிதனே, இயேசுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு பெரிய (பிரச்சினை என்ற) கடலின் மேல் நடந்தாலும் நீ மூழ்கிப்போக மாட்டாய்.

    பயத்திலிருந்து விடுதலை பெறவும், பயமில்லாமல் வாழவும், சமாதான காரணராகிய இயேசுவுக்கு உங்கள் உள்ளத்தைக் கொடுங்கள். இயேசு பயமின்றி வாழ கிருபையை உங்களுக்கு தருவாராக.

    அருள்ஷீபா, கோணம்காடு, குமரி மாவட்டம்.

    • நம்மை ஆயத்தப்படுத்தி பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம்.
    • நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்.

    உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். பேதுரு தன்னை முழுவதுமாக கழுவ கேட்டுக் கொண்டது போல நாமும் முழுவதுமாக கழுவப்பட்டு உணர்வடைய நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    கிறிஸ்துவுக்கு முன் (874-853), இஸ்ரவேல் நாட்டிலே ஆகாப் ராஜாவின் காலத்தில் பஞ்ச நாட்களில் எலியாவை கர்த்தராகிய ஆண்டவர் கேரீத் ஆற்றங்கரையிலே காகங்களை கொண்டு போஷித்தார். (1 இராஜாக்கள் 17:1-24).

    காகங்கள் அவனுக்கு விடியற்காலத்திலும் சாயங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்தன. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரை குடித்தான். தேசத்தில் பஞ்சம் இருந்தபடியினாலும் மழை பெய்யாதபடியினாலும் சில நாட்களுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போனது. கர்த்தர் எலியாவை சாறிபாத் என்ற கடற்கரை ஊருக்கு அழைத்து வந்தார். இந்த சாறிபாத் யேசபேலின் தகப்பன் ஏத்பாகால் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. (1 இராஜாக்கள் 16:31).

    அங்கே எலியாவை பராமரிப்பதற்கு கர்த்தரின் வார்த்தையை நம்புகிற ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணினார். அவளுக்கு ஒரு மகன். எலியா அவளை அணுகி 'எனக்கு அப்பமும் தண்ணீரும் கொண்டு வா' என்று சொன்னபோது அவள், 'நானும் என் குமாரனும் இருக்கிற ஒரு பிடி மாவிலே அடை செய்து சாப்பிட்டு செத்துப் போக தக்கதாக விறகு பொறுக்க வந்திருக்கிறேன்' என்றாள். கர்த்தருடைய வார்த்தையை நம்புகிற ஒரு பெண்ணாக அவளுடைய இருதயத்தை கர்த்தர் அறிந்திருந்தபடியால் அவளை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க எலியாவை சாறிபாத் ஊருக்கு அனுப்பினார்.

    எலியாவின் மூலமாக சாறிபாத் பெண்ணுக்கு சொன்னது போல கர்த்தர் தேசத்தின் மேல் மழையை கட்டளையிடும் நாள் மட்டும் பானையில் மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் எண்ணை குறைந்து போகவும் இல்லை. அந்தப்பெண்ணும், அவளுடைய மகனும் சாவின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர்.

    இவைகள் நடந்த பின்பு வியாதியில் அந்த மகன் விழுந்து அவன் உயிரிழந்தான். அப்பொழுது அந்தப்பெண், 'தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன?, என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?' என்று கேட்டாள்.

    எலியாவும் சந்தேகப்பட்டு பஞ்சகாலத்தில் வாழ வழிகாட்டி ஆசீர்வதித்த கர்த்தர் சாவை அனுமதித்து துக்கத்தை வருவித்து விட்டார் என்று சந்தேகப்பட்டு விட்டான். உடனே, எலியா கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, நான் தங்கி இருக்க இடம் கொடுத்த இந்த பெண்ணின் மகனை சாகப் பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தாரோ என்று அந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வர விண்ணப்பம் பண்ணினான். அப்படியே கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார். அந்தப் பையன் பிழைத்தான். இரண்டாவது முறையாக மரண சங்கிலியிலிருந்து அந்தக் குடும்பம் விடுவிக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 17: 23,24).

    நாம் கர்த்தருடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அவர் மேல் நம்பிக்கையாய் நம்முடைய அக்கிரமங்களை அவரிடம் அறிக்கையிடும் போது, அவர் மரணத்திலிருந்து நாம் ஜெயம் பெற நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுதான் உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாடுதலின் பங்கு. சாகாமல் பிழைத்திருந்து (சங்கீதம் 118:17), கர்த்தருடைய செய்திகளை விவரிப்பதற்கு உயிரோடு இருக்கிறவர்கள் தான் கர்த்தரின் இரக்கத்தை நினைவு கூர்ந்து இயேசுவோடு வாழ்வை கொண்டாட முடியும். (சங்கீதம் 6:5).

    கிறிஸ்துவுக்கு முன் (640-609) யூதேயா நாட்டிலே, ராஜாவாகிய யோசியா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளை சாப்பான் வாசிக்க, கேட்டு, தன்னைத்தானே கர்த்தர் இடத்தில் தாழ்த்தினது நிமித்தம் தீர்க்கதரிசியாகிய உல்தாள் மூலம் (2 இராஜாக்கள்22:20) அவனுக்கு கிடைத்த கர்த்தருடைய வார்த்தை, 'நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்'.

    எப்படி யோசியா ராஜா கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னால் அதாவது, எருசலேம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்படுவதற்கு முன்னால் தன்னுடைய பிதாக்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டனோ (2 இராஜாக்கள் 23:29,30), அதுபோல நாமும் இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு வரும் போது கர்த்தருடைய வருகையிலே கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (1 தெசலோனிகேயர் 4:15-18) நமக்கென்று கர்த்தர் ஆயத்தம் பண்ணி இருக்கிற ஸ்தலத்திலே (யோவான் 14:3) அவர் மறுபடியும் வந்து நம்மை சேர்த்துக்கொள்ள ஆயத்தப்படுவோம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

    ஆதலால் கடைசி எக்காளம் தொனிக்கும்போது நாம் அழியாத புகழ்பெற்ற சக்தி வாய்ந்த, கர்த்தரோடு என்றென்றைக்கும் ஜீவிக்க கூடிய சரீரமாக்கப்படுவதற்கு அதாவது மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டத்திலே நீதியுள்ளவர்களாய் விசுவாசத்தை காத்துக் கொள்பவர்களாய் (2 தீமோத்தேயு 4:7,8) நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்தி பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம். விசுவாசத்தை காத்துக் கொள்வோம் .

    முனைவர் இந்திரா கெட்சி டேவிட், நெல்லை.

    • நன்மை ஒருபோதும் சாகாது.
    • உண்மை உலகிற்குள் உறங்காது.

    இயேசு மண்ணில் மனித உருவில் வந்த இறைவன். அதனால் அவர் தம்மை இறைநிலையில் இணைத்துக்கொண்டு மனிதத்தைப் புறந்தள்ளி வாழ்ந்தவரல்ல. சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.அவரது முழுமையான தியாகமிகு அர்ப்பணம் கல்வாரியில் சிலுவைக் கழுமரத்தில் அரங்கேறியது.அதுவே அவரது சிறப்பான வாழ்வின் வேள்வி.

    இயேசு மனித உருவில் மண்ணில் வாழ்ந்து சமூக வீதிகளில் நடமாடியபொழுது அவர் புரிந்து கொள்ளப்படவோ ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. அவரது சிந்தனைகள், செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டன. அவரது மனிதநேயப் போதனைகள் இறைநிந்தையாகக் கருதப்பட்டன. அவரது அணுகுமுறைகள் சட்டமீறலாகவும் கலகமாகவும் சித்தரிக்கப்பட்டன.ஆயினும் இயேசு தயங்காமல் துணிந்து இலட்சியத்தோடு உழைத்தார். எல்லாரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் தங்களுக்குள் சகோதர உணர்வோடு வாழ வேண்டும். இனம், நிற மொழி சமயம், பணம் என எப்பாகுபாடும் மாந்தருக்குள் இருக்கக்கூடாது எனப் பகிரங்கமாக முழங்கியதோடு அவைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தார். அதனால் அவர் ஆதிக்கவாதிகளால் எதிர்க்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆயினும் அடக்கப்பட்ட கல்லறை உடைத்து அவர் உயிர்த்தெழுந்தார்.

    இயேசுவின் உயிர்ப்பு வெறுமனே உடலளவில் நிகழ்ந்த ஒன்று அல்ல. அது உலகில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட மாற்ற நிகழ்வு. இயேசு கல்லிலானக் கல்லறையை மட்டும் உடைத்து உயிர்க்கவில்லை. மாறாக பிறரை ஒதுக்கல், ஒடுக்கல், ஒதுங்கல் என்ற கற்களை உடைத்து உயிர்த்தார். சமூகத்தில் தலைவிரித்தாடிய ஆளல், அடக்குதல், அவமதித்தல், பழித்தல், பகைத்தல், வெறுத்தல், சிறுமைப்படுத்துல், பதுக்குதல், உரிமைகள் மறுத்தல் போன்றத் தடைகளை உடைத்தெறிந்தார்.

    இனி நன்மை ஒருபோதும் சாகாது.உண்மை உலகிற்குள் உறங்காது.நீதி என்றும் அழியாது.பொதுநலம் ஒருபொழுதும் பிறழாது எனப் பறைசாற்றுவதே இயேசுவின் உயிர்ப்பு, அதற்கு நமக்கு இரு சான்றுகள் உள்ளன. முதலாவது இயேசு அடக்கம் செய்யப்பட்ட வெறுமையானக் கல்லறை. இரண்டாவது ஏழைகளாகவும் கோழைகளாகவும் இருந்து ஓடி ஒளிந்து மீண்டும் புது உத்வேகத்தோடும் நம்பிக்கையோடும் உழைத்த இயேசுவின் சீடர்கள். நம்மை வெறுமைப்படுத்துவதோடு இயேசுவின் சீடத்துவ மனநிலையில் வாழவும் உழைக்கவும் உந்துவதே இயேசுவின் உயிர்ப்பு. அவ்வாறு உழைப்போர்க்கெல்லாம் உயிர்ப்பின் உன்னத நல்வாழ்த்துக்கள்.

    • கிறிஸ்து பிறப்பிற்கு பின் 30 மற்றும் 33 வருடத்தில் நடந்ததாக கருதப்படுகிறது.
    • ஆங்கிலத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் என்று அழைக்கிறார்கள்.

    கிறிஸ்தவர்கள் கொண்டாடும் அதிமுக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுவது இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா. இயேசு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஒரு விழா. இவ்விழா வருடத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பிற்கு பின் 30 மற்றும் 33 வருடத்தில் நடந்ததாக கருதப்படுகிறது.

    இவ்வருடம் நாளை (9-ந்தேதி) இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா கிறிஸ்தவ பக்தி மார்க்கத்தின் மையமாக திகழ்கிறது. ஏனெனில் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவர் கடவுளின் மகன் என்பதையும், அவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு முடிவில்லா வாழ்வு உண்டு என்பதையும் நம்பிக்கையாக கிறிஸ்தவர்க ளுக்கு தந்துள்ளது. ஒரு மனிதன் வழியாக சாவு வந்தது போல ஒரு மனிதன் வழியாக இறந்தோர் உயிர்ப்பெறுவர் (1 கொரி 15:21, 22).

    ஆங்கிலத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் என்று அழைக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் பெரு விழாக்கள் பலதும் புற சமயத்தினர் பழக்க வழக்கங்களில் இருந்து தோன்றியது தான். அந்த வகையில் கிறிஸ்தவர்களின் நடுநாயகமாக விளங்கும் இந்த நிகழ்வும் அப்படி தோன்றினது தான். இடைக்காலத்தில் வாழ்ந்த வணக்கத்திற்குரிய பேடி (673-735) அடிகளாரால் இளவேனில் காலத்தின் கடவுளாக கொண்டாடப்பட்ட யோஸ்டர் என்ற தேவதையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பெயர் தான் ஈஸ்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது என்று அவரால் சொல்லப்பட்டது. இந்த விளக்கம் சிலருக்கு சந்தேகமாக இருந்தாலும், இதை விட சிறந்த விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை.

    கிறிஸ்துவின் உயிர்ப்பை யூதர்களின் பாஸ்கா பெருவிழாவோடு இணைத்து கூறப்படுகிறது. எகிப்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரேயலருக்கு கடவுள் மீட்பு வழங்கினார். ஆண்டவர் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார். (வி.ப 13:14) அதுபோல புதிய ஏற்பாடு காலத்தில் இயேசு சாவிலிருந்து புதிய விடுதலை பெற்றார்.

    அழிவுக்குரியது அறியாமையையும், சாவுக்குரிய சாகமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதிய வாக்கு நிறைவேறும். சாவு முற்றிலும் ஒழிந்தது வெற்றி கிடைத்தது (1 கொரி 15:54).

    இயேசுவின் உயிர்ப்பு, யூதர்களின் பாஸ்காவோடு ஒப்பிட்டு கூறப்படுவதின் காரணம், இயேசு பாஸ்கா பெருவிழாவின்போது தான் மரணத்திற்கு கையளிக்கப்பட்டார் என்பதாகும். அதுபோல பெரிய வியாழன் அன்று சீடர்களோடு இரவு உணவு அருந்தியது கிறிஸ்த வர்களின் நற்கருணைக்கு அடித்தளமாக அமைந்தது. இது இன்றும் யூதர்களின் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தின் அடையாளமாக உள்ளது. இந்த உயிர்ப்பு பெருவிழாவும், யூதர்களின் பாஸ்கா பெருவிழாவும் இளவேனில் காலத்தில் கொண்டாடப்படுவது கிறிஸ்தவர்களின் மறுபிறப்பின் அடையாளமாகவும், ஆன்மீக வாழ்வின் அடித்தளமாகவும் அமையப் பெற்றுள்ளது.

    • கர்த்தர் தனக்கு சொன்னபடியே ஆபிரகாம் புறப்பட்டுப்போனான்.
    • நாம் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம்.

    "விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்; பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்". (எபிரெயர் 11:1)

    விசுவாசம் (நம்பிக்கை) என்பது நாம், நம்பப்படுகிறவைகளின் உறுதியும், நம் கண்ணால் காணப்படாதவைகளின், நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் நிச்சயம் நம்ப வேண்டும்.

    ஆபிரகாம் தேவனால் அழைக்கப்பட்டபோது, விசுவாசத்தினாலே, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டு போனான்.

    இன்றைக்கு நாம் ஒரு முன் பின் தெரியாத இடத்திற்கு போக வேண்டும் என்றிருந்தால், உடனே அவ்விடத்தை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிப்போம். நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் அலசி ஆராய்வோம், அவ்விடத்தில் தங்குவதற்கு என்ன செய்வது, சாப்பிடுவதற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருப்போம். ஆனால் ஆபிரகாமோ இவற்றில் ஒன்றையும் செய்யவில்லை. தேவன் சொல்லிய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்.

    வேதம் சொல்வதைப் பார்ப்போம்: "கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு. நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்றார்.

    கர்த்தர் தனக்கு சொன்னபடியே ஆபிரகாம் புறப்பட்டுப்போனான். ஆரான் என்ற தன்னுடைய ஊரை விட்டுப் புறப்பட்டபோது, ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

    "ஆபிராம் தன் மனைவியாகிய சாராவையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்". (ஆதியாகமம் 12:5)

    இந்த வேதாகம சம்பவத்தில் ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து தன்னுடைய குடும்பம், பணியாளர்கள், கால்நடைகள் எல்லாவற்றோடும் முன்பின் அறியாத ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    தேவன் அவன் நம்பிக்கையை பலப்படுத்தி, அவனை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணினார்.

    அது மட்டுமில்லாமல் தேவன் ஆபிராமை பார்த்து, "பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" என்றார். (ஆதியாகமம் 15:1)

    நாம் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம். சூழ்நிலைகளை பார்த்து கலங்கி, பயப்படுகிறோமா, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றோமா!

    அன்பானவர்களே, இந்த உலக வாழ்க்கையில், நாம் சூழ்நிலைகளைப் பார்த்து வாழாமல், சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றுகிற தேவனை நம்பி வாழ்ந்தால் ஆபிரகாமுடைய வாழ்க்கையில் அதிசயங்கள், அற்புதங்கள் செய்த தேவன் நம்முடைய வாழ்விலும் நன்மையான காரியங்களைச் செய்வார். பல நேரங்களில் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை, சூழ்நிலை நமக்கு 'இல்லை' என்றே கூறும். ஆனால் நம்பிக்கையில் நாம் உறுதியாக இருந்து, நிச்சயமாக பெற்றுக்கொள்வோம் என்று கர்த்தரையே நம்பிக் காத்திருந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இறைவனின் கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தும். அது மட்டுமில்லாமல், அவரை மட்டுமே நம்பி உறுதியாய் செயல்படுகிற உங்களின் ஆசைகளையும், மன விருப்பங்களையும், கனவுகளையும், ஏக்கங்களையும் அவர் நிறைவேற்றுவார். எதிர்காலத்தைக் குறித்த பயங்கள், திகில்கள், கலக்கங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.

    மறைந்த ஏவுகணை விஞ்ஞானியும், இந்திய ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்... அந்த கனவை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்' என்று கூறுகிறார். நாமும் நம் வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒன்றிற்காக முயற்சிப்போம். அதற்காக இறைமகன் இயேசுவிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை ஏறெடுப்போம். இறைவனுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து அதன்படி நடப்போம்.

    முயற்சி நம்முடையது தான், ஆனால் பலனோ இறைவனுடையது. நாம் விரும்பியது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், சூழ்நிலைகள் மொத்தமும் அதற்கு எதிராக நின்றாலும், நம்முடைய முயற்சிகளில் தோற்றுப்போகாமல் வெற்றியை நோக்கி, உயர்வை நோக்கி நம்மை வழிநடத்த இயேசு போதுமானவர்.

    ஆகவே சூழ்நிலைகள், போராட்டங்கள், அவமானங்கள், வேதனைகள், கண்ணீர்கள், எதிர்ப்புகள், நிராகரிப்புகள் மத்தியிலும் இயேசு உங்களை நிச்சயமாக உயர்த்துவார், வழி நடத்துவார்.

    வேதம் சொல்கிறது, "ஆனாலும் கர்த்தாவே நீர் கேடகமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்".

    ஆம், நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் அவரையே நம்புவோம், வாழ்க்கையில் மேன்மை அடைவோம். கர்த்தரை நம்புவோம், காரிய சித்தி அடைவோம். கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

    நெல்லை மானெக்சா.

    • சாம்பல் புதன் தின சிறப்பு வழிபாடுகள் கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை நடக்கிறது.
    • சாம்பல் புதன் தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார். இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

    தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நாளை ஆகும். இந்த நாளில் இருந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. இந்த தினத்தில் இருந்து சாம்பல் புதன் தினத்தன்று கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு திருப்பலியின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்படும். மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதன் அடையாளமாக இந்த சாம்பல் பூசப்படுகிறது.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நாளை காலை 6.30 மணிக்கு சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற இருக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார். இதேபோல மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற இருக்கிறது.

    குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் தின சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நாளை மாலை நடைபெற உள்ளது. குமரி சி.எஸ்.ஐ. பேராயர் ஏ.ஆர்.செல்லையாவும் சிறப்பு ஆராதனையில் பங்கேற்று ஆசி வழங்க இருக்கிறார். தவக்காலத்தையொட்டி சுயவிருப்ப உண்டியல்கள் ஆலயங்களில் வழங்கப்பட இருக்கிறது. அவற்றின் மூலம் காணிக்கை சேகரிக்கப்பட்டு வறியவர்களுக்கு உதவப்படும். தவக்காலத்தையொட்டி 24, 25, 26-ந் தேதிகளில் குமரி சி.எஸ்.ஐ. பேராயம் சார்பில் நற்செய்திப் பெருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

    சாம்பல் புதன் தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.

    • பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை.
    • இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை.

    உலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து மக்களுக்கான கருத்துகளை இவர்கள் அளித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பல கருத்துகள் காலம் மாறும்போது நாளடைவில் நிலைக்காமல் போய்விட்டன.

    உலகத்தில் இதுபோன்ற தலைவர்களின் பிறப்பு இயல்பானதாகத்தான் இருந்தன. புத்திகூர்மை, அறிவுத்திறன் போன்றவற்றால் இடைக்கால வாழ்க்கையில் தான் அவர்கள் உயர்ந்தனர். மறையும்போது பல தலைவர்களின் பெயர் மங்கியும், குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டதாகவும் தான் இருக்கின்றன.

    இதுபோன்ற தலைவர்களின் வரிசையில் ஆன்மிகக் கருத்துகளை வழங்கியவர் தான் இயேசு என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. சிறப்பு குணங்களால் மேம்பட்டு, மனிதர்கள் நடுவில் தலைவராக ஜொலிப்பவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் அல்ல இயேசு.

    ஏனென்றால், இறைவனின் மகனான அவர், மக்களுக்கு ஆன்மிகத்தை போதிப்பதற்காக மனிதர்களுக்குள் ஒரு மனிதனாக பூமியில் இறைவனால் அனுப்பப்பட்டவர். அதற்காக கன்னியின் வயிற்றில் கருவாகவே வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றுமே மொத்த உலகத்தையும் அதிரச் செய்வதாக இருந்தன, இருக்கின்றன.

    இறைவனின் மகனாக இருப்பதால், பூமியில் பிறந்த மனிதர்கள், ஞானிகள், தலைவர்கள், பிரமுகர்களின் உபதேசங்கள் இயேசுவுக்குத் தேவையில்லாமல் இருந்தன. இறைவனின் சித்தத்தை அறிந்து இயேசு செயல்பட்டாரே தவிர, வேறு யாரிடமும் சென்று ஞானம் பெற அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

    சரீரத்தில் இருந்து பிரிந்த பிறகு ஆத்மாவுக்கு கிடைக்கும் அடுத்த வாழ்க்கையை நல்லிடத்தில் சேர்ப்பதற்கு மனிதனுக்கு என்ன வழி இருக்கிறது? என்பதை மனித குலத்துக்கு போதிப்பது ஒன்றுதான் இறைசித்தமாயும், அது ஒன்றுதான் தனது வாழ்நாளின் நோக்கம் என்பதையும் உணர்ந்து இயேசு வாழ்க்கை நடத்தினார்.

    எனவே செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற உலக சம்பந்தப்பட்ட எதையும் அவர் நாடவில்லை. இவற்றின் மீது நாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கை சூழ்நிலைகளையும் அதற்கேற்றபடி திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்.

    அதாவது, பூங்காக்கள், தோட்டங்கள், மலையோரங்கள் என மற்றவர்களின் பார்வைக்கு மறைக்கப்படாத இடங்களில் தங்கினார். மக்களுக்கு போதிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். எங்கு, எதைப்பேச வேண்டும் என்பதை அளந்து பேசினார். யார் மீதும் அரசியல் விமர்சனங்கள், அநியாய குற்றச்சாட்டுகளை அவர் வைக்கவில்லை. அதாவது, உலக இயல்பு நிலையில் இருந்து மாறி வாழ்ந்து காட்டினார்.

    செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற அம்சங்கள் அனைத்துமே மனிதனின் சரீரத்தை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனால் அவற்றில் வைக்கப்பட்ட சோதனைகளையும் சரீரத்தில் இருந்த நிலையிலும் இயேசு தடுமாறாமல் வென்றார். ஏனென்றால், அவரது நோக்கம் மனிதகுல மீட்பு என்ற ஒன்றில்தான் உறுதியாக இருந்தது. அந்த நோக்கத்துக்கு முரணான எதையும் அவர் விரும்பவில்லை.

    ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை காட்டி, அதன் மூலம் சரீரத்தையும் நெருக்கி, பாவங்களுக்குள் விழச்செய்யும் செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை ஆகிய அம்சங்களுக்கு மனிதர்களும் தன்னைப்போல தப்ப முடியும் என்பதையும், தங்களின் ஆத்மாவை அடுத்த நல்வாழ்க்கைக்கு தன்னைப்போல தயார் செய்துகொள்ள முடியும் என்பதையும், நல்லொழுக்க செயல்பாட்டின் மூலம் செய்துகாட்டியவர் இயேசு.

    எனவேதான் மரணமும் அவரை மேற்கொள்ளவில்லை. அவரை நம்பி பின்பற்றுபவனின் சரீரமும் நல்வாழ்வை அடைவதற்காக மகிமையின் சரீரமாக உயிர்ப்பிக்கப்படும் என்பதும் அவர் உயிர்த்தெழுந்த பிறகு நடந்தது.

    ஆனால், உலகுக்கு போதிப்பதை அப்படியே தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர்கள் எவரும் இல்லை. பல்வேறு போதனையாளர்கள், தத்துவ மேதைகள், ஞான சொற்பொழிவாளர்களின் சொந்த மற்றும் அந்தரங்க வாழ்க்கை சுத்தமாக இருந்ததில்லை.

    மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடும்போது, அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அவரது திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    முதலில், இறைவன் சித்தத்தின்படி அவர் கொடுத்த அம்சங்களைத் தாண்டி வேறு எதையும் சம்பாதிக்க அவசியம் இல்லை என்பதை வாழ்க்கையின் உறுதியான தீர்மானமாக கொண்டிருந்தார். இரண்டாவதாக, அந்தத் தீர்மானத்திற்கேற்றபடியான வாழ்க்கை முறையை இயேசு அமைத்துக் கொண்டார். இந்த இரண்டும்தான், இந்த பூமிக்கு அவர் அனுப்பப்பட்டதற்கான இறைசித்தத்தை முழுமையாக நிறைவேற்ற அடிப்படையாக அமைந்திருந்தன.

    இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை. எனவே அதை இறைவனிடம் அவர் கேட்கவும் இல்லை. அதை நாடி அவர் செல்லவும் இல்லை. பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை. எனவே அதையும் இயேசு நாடிச் செல்லவில்லை. அதாவது, தனக்கென்று இல்லாததை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை.

    நாமும் இதே பாதையில் செல்கிறோமா? ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா? இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா? மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா? அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன? இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம்? தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகை காலகட்டத்தில் அனைவருமே சிந்தித்து பார்க்க வேண்டும். இதில் சிந்தனை இல்லாமல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் ஆத்மாவுக்கு பலனில்லை.

    • தேவன், தான் படைத்த படைப்புகளை அதிகமாய் நேசித்தார்.
    • பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாக உள்ளன.

    இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.

    இவ்வாறு உலகத்தை ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்ததாக படைத்த தேவன், தான் படைத்த படைப்புகளை அதிகமாய் நேசித்தார். அதனால்தான் தன்னுடைய ஒரே குமரனாகிய இயேசு கிறிஸ்துவையும் இந்த உலகிற்கு அனுப்பி பாடுகள் பல படவும், சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கவும், பின்பும் உயிர்த்தெழவும் அனுமதித்தார்.

    இவ்வாறு தன்னுடைய படைப்புகளுக்காக மகனையே தந்த தேவன், பழைய ஏற்பாட்டு காலத்திலும் தன் மக்களுக்காக இயற்கைக்கு மாறான அற்புதங்கள் பலவற்றை செய்து அவர்களுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    நாடு முழுவதும் மழையின்றி, கடுமையான வறட்சி நிலவிய காலத்தில், காகங்களைக் கொண்டு, எலியாவிற்கு காலையிலும், மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கிடைக்கும் படி தேவன் கிருபை செய்தார். இயற்கையாகவே தனக்கு கிடைக்கும் எந்த உணவை உண்டு பழக்கப்பட்ட காகங்கள், இறைவனின் கட்டளைப்படி இறை தூதராகிய எலியாவிற்கு உணவை கொண்டு வந்து கொடுத்தன.

    நீரில் வாழும் சிறிய மீன்களானாலும், பெரிய மீன்களானாலும் தனக்கு கிடைக்கும் எதையும் விழுங்கி, அதை உணவாக உட்கொள்ள கூடியவை. கர்த்தரின் உத்தரவின்படி நினிவேக்கு செல்லாமல், தர்சீசுக்கு கப்பலில் பயணித்த யோனாவை, தேவன் பெரிய மீனைக் கொண்டு விழுங்க செய்து, அதனுடைய வயிற்றில் அமர்ந்து பயணம் செய்யும் படி வைத்தார். கப்பலில் பயணித்த அவரை, மீனின் வயிற்றில் பயணிக்க வைத்து, நினிவே பட்டணத்தில் பத்திரமாக கரையும் சேர்த்தார். அப்படியே யோனாவின் மூலம் கர்த்தர் தான் நேசித்த நினிவே மக்கள் பாவ வாழ்க்கையில் இருந்து மனம் மாறி தன்னை தேடும்படி செய்தார்.

    எசேக்கியா அரசர் நோயுற்று மரணப் படுக்கையில் இருந்தபோது, தேவன் அவரது கண்ணீரின் வேண்டுகோளினை ஏற்று, வாழும் காலத்தை பதினைந்து ஆண்டுகள் அதிகரித்துக் கொடுத்தார். அதற்கு அடையாளமாக அவர் கேட்டுக் கொண்டபடி நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல், பத்துப்பாகை பின்னோக்கி வரச் செய்தார்.

    அதுமட்டுமின்றி நீந்திக் கடக்க வேண்டிய செங்கடலை, இஸ்ரேல் மக்களும் மோசேயும் கால்கள் நனையாதபடி நடந்தே கடக்கும்படி செய்தார்.

    "கதிரவனே! கிபயோனில் நில். நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்" என்ற யோசுவாவின் வேண்டுகோளின்படி, கர்த்தர் நகர்ந்து கொண்டிருந்த சூரியனையும் சந்திரனையும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும்படி செய்தார்.

    இவ்வாறு, தான் படைத்த படைப்புகளை, இயற்கையாக அவை கொண்டிருக்கும் இயல்பை மாற்றி, தான் நேசிக்கும் மக்களுக்கு உதவும்படி செய்தார். இன்றும் நாம் விசுவாசத்தோடு தேவனை நோக்கி மன்றாடும்போது நாம் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நபரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்க செய்ய வல்லவராய் அவர் இருக்கிறார். நம்மை இவ்வளவு அதிகமாய் அன்பு கூரும் அவரை, நாமும் அன்பு செய்து அவரோடு இணைந்து வாழ்வோம்.

    டோனி, சென்னை.

    • எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
    • சிலருடைய கோபம் தணிய நாட்கள், மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட எடுக்கலாம்.

    நம்முடைய மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவினர்களோ, நண்பர்களோ... நமக்கு சம்பந்தப்பட்டவர்கள் சிறு தவறு செய்தால்கூட அதை ஊதிப் பெரிதாக்கும் மனோபாவம் நம்மில் பலருக்கு உண்டு.

    அவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்த விரும்பும் நாம், அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறும்போது "அவனைப் போல் இருக்காதே.. அவளைப் போல் இருக்காதே!" என்று தவறான முன்மாதிரிகளைப் போல் அவர்களை உடனடியாகத் தீர்ப்பிட்டு விடுகிறோம்.

    சிறு தவறுகளுக்கே நாம் மற்றவர்களை இப்படி நடத்துகிறோம் என்றால் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். அவர்கள் எத்தகைய மன நிலையில் சூழ்நிலையில் தவறுகளை இழைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இதனால் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த அவர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவதே இல்லை.

    மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது. இது அறிவியல்பூர்வமான உண்மையும்கூட. "ஒருவருக்கொருவர் கருணையும் கரி சனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்" என எபேசியர் (4:32) எடுத்துக் கூறுகிறது.

    "நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் கடவுள் கணக்கு வைத்திருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்" (சங்கீதம் 130:3)! "மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" என்ற பைபிளின் நீதிமொழியையும் (19:11) மனதில் நிறுத்துங்கள்.

    மற்றவர்களை மன்னிப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா? அப்படியானால் மன்னிக்கப்பட வேண்டியவரை உங்கள் உடன்பிறந்த சகோதரரைப் போல எண்ணிக்கொள்ளுங்கள்.

    "உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய் அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்" என்று மத்தேயு (18:15) எடுத்துச் சொல்வதைப் பாருங்கள்.

    நான் நல்லவன் என்பதை எல்லார் முன்னிலையிலும் காட்ட வேண்டும் என்பதைவிட, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். என் மனதைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லாமல், 'இப்படிச் சொன்னது என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது' என்று சொல்லுங்கள்.

    "யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்" என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது.

    ஏனெனில் நம்மைப் படைத்த கடவுளான பரலோகத் தந்தையை `சமாதானத்தின் கடவுள்' என்று விவிலியம் சொல்கிறது. பூமியிலுள்ள தம் பிள்ளைகள் சமாதானமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ``ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். பரலோகத் தந்தை உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்" என்று கொலோசெயர் (3:13) புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

    பொறுமையாக இருங்கள். எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருடைய கோபம் தணிய நாட்கள், மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட எடுக்கலாம். அவர்களிடம் மாற்றத்தைக் கடவுள் கண்டிப்பாக விதைப்பார். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தீர்கள். "தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்" என்று (ரோமர் 12:21) விவிலியம் வழிகாட்டுகிறது.

    • திட மனதுடன், நம்பிக்கையுடன், கடவுளுக்கே காத்திருங்கள்.
    • சூழ்நிலைகளைப் பார்த்து கலங்காமல், பயப்படாமல் இறைவன் மேல் நம்பிக்கையாய் இருங்கள்.

    அன்பானவர்களே, இவ்வுலக வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு காத்திருப்பு இருக்கும். இறைவனுடைய வாக்குத்தத்த வார்த்தைகளும் இருக்கும். ஆனாலும் வாழ்க்கையில் எதிர்பார்த்த காரியங்கள், உயர்வுகள், வேலைகள், தாமதித்து கொண்டிருக்கும், அல்லது எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வாழ்வில் நடந்து கொண்டிருக்கும். எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைச்செல்வம், ஆரோக்கியம், உயர்ந்த பதவி, வசதியான வாழ்க்கை உள்பட பல்வேறு ஆசைகள், கனவுகள் அனைவருக்கும் இருக்கும்.

    இவை இயல்பாகவே எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கக்கூடிய தேவையான, நியாயமான ஆசைகளே ஆகும். ஆனாலும் ஒரு சிலருக்கு ஆசைப்படுவது, விரும்புவது தாமதமாகிக் கொண்டிருக்கும் அல்லது நேர்மாறாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும். இதனால் மனதில் சோர்வு, வருத்தம் ஏற்படுகிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு இருந்தால் கர்த்தர் நமக்கு நாம் விரும்பியதை தருவார். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை காண்போம்.

    வேதாகமத்தில் யோசேப்பு என்று ஒரு மனிதர் இருந்தார். அவர் ஒருநாள் ஒரு கனவு கண்டு அதை தன்னுடைய சகோதரர்களிடமும், தந்தையிடமும் கூறுகிறார். அந்த கனவில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் தன்னை வணங்கியதாக கூறுகிறார். இதன் காரணமாக அவருடைய சகோதரர்கள் பொறாமை கொண்டு அவரை வெறுத்து பகைக்கின்றார்கள்.

    ஒருநாள் சகோதரர்கள் ஆடு மேய்க்கின்ற இடத்திற்கு யோசேப்பு செல்கிறார். அங்கே அவருடைய சகோதரர்கள் அவரை கொலை செய்யும் படி ஆலோசனை பண்ணி, பின்பு அவரை 20 வெள்ளிக் காசுக்கு விற்று விடுகிறார்கள். எகிப்து தேசத்தின் பிரதான அதிகாரி போத்திபார் என்பவரின் வீட்டிற்கு விலைக்கு விற்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார். ஒருநாள் போத்திபாரின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு யோசேப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார்.

    எகிப்தின் மன்னர் பார்வோனால் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட இரண்டு வேலைக்காரர்கள் யோசேப்போடு சிறைச்சாலையில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கனவு காண்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை. யோசேப்பு கடவுளின் அருளால் அந்தக் கனவின் அர்த்தத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறார். யோசேப்பு கூறியபடியே அதில் ஒரு வேலைக்காரன் தூக்கில் தொங்கவிடப்படுகிறார். ஒரு வேலைக்காரன் திரும்பவும் மன்னரிடமே வேலைக்கு திரும்புகிறார். அவன் யோசேப்பை மறந்து விடுகிறான்.

    இதன் பிறகு நீண்ட நாள் கழித்து எகிப்து மன்னர் பார்வோன் ஒரு கனவு காண்கிறார். அதன் அர்த்தம் அவருக்கு புரியவில்லை. எகிப்தின் மந்திரவாதிகளாலும், ஜோதிடர்களாலும் அந்தக்கனவின் அர்த்தத்தை கூறமுடியவில்லை. அப்பொழுது யோசேப்போடு சிறைச்சாலையில் இருந்த வேலைக்காரன் யோசேப்பை பற்றி மன்னரிடம் கூறுகிறார். உடனே யோசேப்பு சிறைச்சாலையிலிருந்து புது ஆடை அணிவிக்கப்பட்டு மன்னரின் முன்பு நிறுத்தப்படுகிறார். பார்வோன் கண்ட கனவு மற்றும் அதன் அர்த்தத்தை யோசேப்பு சரியாக விளக்கிக் கூறுகிறார்.

    யோசேப்போடு கடவுள் இருக்கிறார் என்று பார்வோன் அறிந்து அவரை எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்துகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பாக யோசேப்பு கண்ட கனவு, கடவுள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக யோசேப்புக்கு கடவுள் கொடுத்த வாக்குத்தத்த கனவு அவருக்கு உடனடியாக அற்புதத்தை செய்யவில்லை. மாறாக சொந்த சகோதரர்களால் பகைக்கப்படுகிறார், அடிமையாக விற்கப்படுகிறார், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைச்சாலைக்கு செல்கிறார். நண்பரால் மறைக்கப்படுகிறார். அதன் பின்பு ஒரு நாள் வந்தது, நாட்டிற்கே பிரதம மந்திரியாக உயர்த்தப்படுகிறார். எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் யோசேப்போடு இருந்தார். அதனால் அவர் விவேகத்துடன் செயல்பட்டு நல்ல பெயர் பெறுகிறார்.

    இன்றைக்கும் நம்மில் அநேகர் ஏதோ ஒரு காரியத்திற்காக, பொருளாதார தேவைகளுக்காக, படிப்புக்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, குழந்தை செல்வத்திற்காக, நோய் குணமாகி ஆரோக்கியமாக... இப்படி ஏதோ ஒன்றிற்காக இறைவனிடம் கையேந்தி நிற்கிறோமா? இறைவனும் வாக்குத்தத்தங்கள் கொடுத்த பின்பும் தாமதமாகிறதா? அல்லது நடக்கவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? இறைவன் உங்களைப் பார்த்து கூறுகிறார், "உங்களைக் குறித்து சொல்லப்பட்ட காரியங்கள் அனைத்தும், நீங்கள் எதிர்பார்த்திருக்கும் காரியங்கள் யாவும் நிச்சயமாய் நிறைவேறும்.

    திட மனதுடன், நம்பிக்கையுடன், கடவுளுக்கே காத்திருங்கள்". வேதாகமத்தில் கடவுள் சொல்கிறார்: "குறித்த காலத்திற்கு தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை". (ஆபகூக் 2:3). "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படி நான் உங்கள் பெயரில் நினைத்து இருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கு ஏதுவான நினைவுகளே" - எரேமியா 29:11. ஆகவே சூழ்நிலைகளைப் பார்த்து கலங்காமல், பயப்படாமல் இறைவன் மேல் நம்பிக்கையாய் இருங்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை வீண் போவதில்லை. கர்த்தர் சொல்கிறார்: "அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார், அவனை பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப் பண்ணுகிறார்" சங்கீதம் 113-7,8.

    • நம்பிக்கையோடு தேவனிடம் சரணடையுங்கள்.
    • தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களோடு இருப்பார்.

    வேதாகமத்தில் 'பயப்படாதே' என்னும் வார்த்தை கடவுளின் வாக்குறுதியாய் 365 முறை கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்தின் 365 நாட்களுக்கும், கடவுளை நம்புகிறவர்களுக்கு, 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்' என்று கடவுள் நம்பிக்கையுடன் கூறுகிறார். வேதாகமத்தில் ஆகார் என்ற பெண்மணி தன் குழந்தையுடன் பாரான் வனாந்திரத்தில் நடந்து செல்கிறாள். அவர்களிடம் இருந்த உணவு, தண்ணீர் அனைத்தும் பயணத்தின் பாதிவழியிலேயே தீர்ந்துவிட்டது. அவள் நடந்து செல்வதோ கடுமையான வெப்பமும், புழுதிக்காற்றும் அடிக்கின்ற வறண்ட பாலைவனம்.

    அந்த பாலை வனத்தில் அவளுக்கு உதவி செய்வதற்கு யாரும் கிடையாது. பசியாலும், தாகத்தாலும் குழந்தை துடித்து அழுதது. அப்போது, பாலைவனத்தில் உள்ள ஒரு செடியைக்கண்டு, அந்த செடியின் நிழலில் குழந்தையை விட்டு விட்டு, சற்று தூரமாக போய் நின்று கதறுகிறாள். 'உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தை சாவதை நான் பார்க்க மாட்டே ன்' என்று உரத்த குரலில் சத்தமிட்டு அழுகிறாள். அந்த அழுகையின் குரலை கேட்பதற்கு எந்த மனிதர்களும் அந்த இடத்தில் கிடையாது. 'தாகத்தால் சோர்வுடன் அழுத பிள்ளையின் சத்தத்தை தேவன் கேட்டார்'.

    தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, "ஆகாரே உனக்கு என்ன நேர்ந்தது?, 'பயப்படாதே'. பிள்ளை இருக்கும் இடத்தில் தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ , அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்". (ஆதியாகமம் 21:17,18,19) தேவன் அவளுடைய கண்களுக்கு அந்த வறண்ட பாலை வனத்திலே ஒரு தண்ணீர்த்தடாகத்தைக் காட்டினார். அவள் ஓடிப்போய் தான் வைத்திருந்த தோல் பையிலே தண்ணீரை நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள். உண்பதற்கு உணவில்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று அழுத அவளுக்கு வறட்சியான பாலைவனத்தில் தண்ணீரும் கொடுத்து, அவனை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தமும் கொடுக்கிறார், என்றால் நமது தேவன் எத்தனை மகிமை மிக்கவர் என்பதை அறியலாம்.

    மேலும் தன்னை நம்பி அழைத்தவர்களின் குரலுக்கு அவர் உடனே பதில் அளிக்கக்கூடியவர் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். அன்பானவர்களே , இன்று நாமும் ஒரு தன்னந்தனியான சூழலில், எந்த உதவியும் இல்லாத நிலையில் தவித்துக் கொண்டு இருக்கலாம். நோய்களை குறித்த பயம், வருமானத்தை குறித்த பயம், கடன் தொல்லைகளால் வரும் பயம், தேர்வு தோல்வியை குறித்த பயம், பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து பயம்... இப்படி ஏதோ ஒரு பயத்தினால் கலங்கி தவிக்கின்றீர்களா? ஆகாரின் கண்ணீரைக் கண்டு உதவிய தேவன், அவளது பயத்தை மாற்றிய தேவன், அவளது தேவைகளை சந்தித்த தேவன், உயர்வைக்கொடுத்த தேவன், இன்று உங்களுடைய பயம், கலக்கம், கவலைகளை நீக்கி, உங்கள் தேவைகளையும் நிறைவேற்றுவார்.

    ஆகவே, நம்பிக்கையோடு தேவனிடம் சரணடையுங்கள். பயப்படாதிருங்கள், தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களோடு இருப்பார். உங்களது கவலை, பயம், கலக்கங்களை கடவுளிடத்தில் கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் நடந்து செல்லுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

    நெல்லை மானக் ஷா.

    ×