search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt emploees protest"

    அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்த கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #TeachersProtest

    சென்னை:

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை 1-1-2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 3 சதவீத அக விலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கம், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலை வாசிக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை அக விலைப்படியை உயர்த்தி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை வழங்கி வருகிறது.

    தற்போது மத்திய அரசு அறிவித்த பிறகும் 1.1.2019 தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அக விலைப்படியை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இதுபற்றி கேட்டால் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் வழங்க முடியாது என்றும் காரணம் கூறுகிறது. அகவிலைப்படியை வழங்கு வதற்கும் தேர்தல் நடத்தை விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அரசு வழங்க மறுக்கிறது.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதில் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளோம். எனவே தமிழக அரசு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #TeachersProtest
    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு 1.1.2019 முதல் மூன்று சதவீத அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களும், தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அலுவலர்களும் 1.1.2019 முதல் நிலுவைத்தொகையை பெற்றுவிட்டனர். பொதுவாக அகவிலைப் படியை மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு அறிவித்த வுடன் அதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அறிவிப்பது தமிழக அரசின் நடைமுறை வழக்கமாகும்.

    ஆனால் இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு மார்ச் இறுதியிலாவது வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கிய நடைமுறைகள் ஏற்கனவே இங்குள்ளது. அதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதை இவ்வரசாங்கம் காரணமாகச் சொல்லி அகவிலைப்படி நிலுவையை தராமல் இருக்க வாய்ப்பில்லை.

    ஏற்கனவே ஊதிய மாற்ற முரண்பாடுகளினாலும், ஊதியமற்ற நிலுவைத் தொகை இழப்பினாலும், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி அதன் காரணமாக ஏற்பட்ட சம்பள இழப்பின் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு முறையாக இவ்வரசாங்கம் கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கானது ஜனநாயக முறைப்படி செயலாற்றும் அரசாங்கம் செய்யக்கூடிய காரியமல்ல.

    எனவே அரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு நிலுவையை 1.1.2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2019 வரையிலான நான்கு மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

    இதை உடனடியாக அறிவிக்காத நிலையில் அரசு ஊழியர் சங்கம் நாளை (10-ந்தேதி) தமிழக அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும், உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TeachersProtest
    ×