search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகவிலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அகவிலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்த கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #TeachersProtest

    சென்னை:

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை 1-1-2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 3 சதவீத அக விலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கம், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலை வாசிக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை அக விலைப்படியை உயர்த்தி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை வழங்கி வருகிறது.

    தற்போது மத்திய அரசு அறிவித்த பிறகும் 1.1.2019 தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அக விலைப்படியை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இதுபற்றி கேட்டால் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் வழங்க முடியாது என்றும் காரணம் கூறுகிறது. அகவிலைப்படியை வழங்கு வதற்கும் தேர்தல் நடத்தை விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அரசு வழங்க மறுக்கிறது.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதில் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளோம். எனவே தமிழக அரசு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    Next Story
    ×